யாழ்ப்பாணத்திலிருந்து ஏ9 வீதி வழியாக தென்பகுதிக்கு, யாழ். குடாநாட்டின் உற்பத்திப் பொருட்களை ஏற்றி வரும் லொறிகள் தம்புள்ள மற்றும் கொழும்பு சந்தைகளிலேயே அவற்றை இறக்கி வருகின்றன. இந்த லொறிகளில் இருந்து வவுனியாவில் பொருட்களை இறக்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வவுனியாவில் பொருட்களை இறக்க முடியாதிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கமைய, ஜனாதிபதியின் ஆலோசகரும், வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவருமான பசில் ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு அல்லது தம்புள்ள சந்தைகளுக்குச் செல்லும் லொறிகளில் இருந்து பொருட்களை இறக்க முடியாது என்றும், வவுனியா சந்தைக்கென பொருட்களை ஏற்றி வரும் லொறிகள், அந்தப் பொருட்களை முழுமையாக வவுனியாவில் இறக்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதாக பசில் ராஜபக்ஷ தம்மிடம் உறுதியளித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.