அபிவி ருத்திப் பணிகளுக்கென ஒதுக்கப்படும் நிதிகளை இந்த வருடம் முதல் நூறு வீதம் முழுமையாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட் தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல், ஊடகத்துறை அமைச்சரும் தேசிய அபிவிருத்தி தொடர்பான ஊடக மத்திய நிலைய ஊடகப் பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை அனுமதியுடன் உத்தியோகபூர்வமாக அமைக்கப்பட்டுள்ள தேசிய அபிவிருத்தி தொடர்பான ஊடக மத்திய நிலையம் மாத்தறையில் நடத்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள குறைபாடுகளை ஊடக மத்திய நிலையத்துக்கு அறிவிக்க முடியும் எனவும் அது குறித்து உரிய அமைச்சு அல்லது அரச நிறுவனத்துக்கு அறிவித்து அதனை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊடகங்களினூடாக சுட்டிக் காட்டப்படும் குறைபாடுகள் முறைகேடுகள் குறித்தும் ஊடக மத்திய நிலையம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கும். அபிவிருத்திக்காக வழங்கப்படும் வெளிநாட்டு நிதிகள், உரிய முறையில் பயன்படுத்தப்படாததால் அவை திருப்பி அனுப்பப்படுகிறது. சில பகுதிகளில் 50 வீதமான பணமே பயன்படுத்தப்படுகிறது.
எனவே அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதிகளை இந்த வருடம் முதல் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். மாத்தறை மாவட்டத்தில் பல பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கொடகமையில் ரூ. 6100 மில்லியன் செலவில் 1500 கட்டில்களுடன் கூடியதாக வைத்தியசாலையொன்று அமைக்கப்பட்டு வருகிறது.
இது தவிர மாத்தறை நகரிலுள்ள சகல அரச நிறுவனங்களையும் கொடகமைக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை – கதிர்காமம் இடையிலான ரயில் பாதை 2 கட்டங்களாக அமைக்கப்படவுள்ளது.
இதற்கு 6600 மில்லியன் ரூபா உள்நாட்டு முதலீடும் 24000 மில்லியன் ரூபா வெளிநாட்டு முதலீடும் பெறப்படவுள்ளது. ஹக்மனை நகரம் 3500 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படுகிறது. மாத்தறை மாவட்டத்திலுள்ள சகல வீடுகளுக்கும் 2010 முடிவுக்குள் மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 வருட காலத்தில் மாத்தறை மாவட்டத்தில் 1000 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன என்றார்.