வழக்கு விசாரணையின் போது திசநாயகத்திற்கு கடும் தண்டனை வழங்குமாறு அரச தரப்பு கோரவில்லை – அமைச்சர் ராஜித

rajitha_senarathna00jpg.jpgஊடக வியலாளர் திசநாயகத்துக்கு வழங்கப்பட்ட 20 வருட கடூழிய சிறைத் தண்டனையை குறைக்கக் கூடிய வாய்ப்பு இருந்தும் அவரது தரப்பு சட்டத்தரணிகள் அதற்கு எதுவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. வழக்கு விசாரணையின் போது திசநாயகத்துக்கு கடுமையான தண்டனை வழங்குமாறு அரச தரப்பினால் எதுவித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லையென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-

ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதையோ காரணமின்றி தண்டிக்கப்படுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. புலிகளுடன் தொடர்பு வைத்து அரசாங்கத்தின் மீது சேறு பூச முயன்றதாலே திசநாயகம் கைதாகி நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்பட்டார்.

மூன்று குற்றச்சட்டுகளுக்கும் அவருக்கு 20 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஒன்றாக கணிக்கும் வகையில் அமுல்படுத்துமாறு அவரின் சட்டத்தரணி கோரியிருந்தால் சில வேளை அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டிருக்கும். மேன்முறையீடு செய்வதன் மூலமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை குறைக்க வாய்ப்புள்ளது.

திசநாயகத்துக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இந்த விடயத்தில் தலையிடவோ எதிர்ப்புத் தெரிவிக்கவோ அமெரிக்காவுக்கு எதுவித அருகதையும் கிடையாது.

ஈராக்கில் பணியாற்றிய பல வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பல வருடங்களாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். அல்கைதா போன்ற அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி இவர்கள் அமெரிக்க படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நமது நாட்டு ஊடகவியலாளர்கள் குறித்து பேச அமெரிக்காவுக்கு எதுவித அருகதையும் கிடையாது.

ஈராக்கிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்காத சர்வதேச அமைப்புகள் திசநாயகத்துக்கு மாத்திரம் விருது வழங்கியுள்ளன, இலங்கை ஊடகவியலாளர்களின் உரிமை க்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு நாம் சகல ஒத்துழைப்பும் வழங்கத் தயாராக உள்ளோம்.

‘லங்கா’ ஊடகவியலாளர்கள்

தனிநபருக்குச் சொந்தமான இடமொன்றுக்கு சட்டவிரோதமாக நுழைந்ததாலே மூன்று லங்கா ஊடகவியலாளர்களும் கைது செய்யப்பட்டனர்.  ஒரு வாரத்திற்கு முன் ஜனாதிபதி இந்த இடத்துக்கு வந்து சென்றுள்ளார். அதனால் ஜனாதிபதி குறித்தே இந்த ஊடகவியலாளர்கள் துருவித் துருவி விசாரித்துள்ளனர். ‘லங்கா’ பத்திரிகை அச்சு ஊடகமாக இருந்தும் கூட இவர்கள் வீடியோ கமெராக்களையும் எடுத்துச் சென்று படப்பிடிப்புச் செய்துள்ளனர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதியும் இந்த விடயத்தில் தலையிட்டு தேவையான பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *