வீதி அபிவிருத்திக்கு ரூ.11,095 மில் செலவு: 7.513 கி.மீ. நீளமான பாதைகள் புனரமைப்பு

2004ம் ஆண்டு முதல் 2009 ஆகஸ்ட் 31ம் திகதி வரையான காலப் பகுதியில் மகநெகும திட்டத்தினூடாக 7,513 கிலோ மீட்டர் நீளமான பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இதற்கு 11,095 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் 10 கிலோ மீட்டர் நீளமான பாதை கூட அபிவிருத்தி செய்யப்பட்டது. கிடையாது என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

தென் மாகாணத்தில் 978 வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இதற்கு 938 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச் சர், பாரிய நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டங்களுக்காக 148,734 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தற்போதைய ஆட்சியில் வீதி அபிவிருத்திக்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஐ.தே.க. தலைவர் காலியில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது,

தென்பகுதி உட்பட நாடு பூராவும் பாரிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். ஆனால் இந்த ஆட்சியில் வீதி அபிவிருத்திக்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஐ.தே.க. தலைவர் கூறியிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

ஐ.தே.க. தலைவரின் இத்தகைய கருத்துக்களினால் மக்களின் எண்ணத்தை மாற்ற முடியாது. நாட்டிலுள்ள சகல வீதிகளையும் அபிவிருத்தி செய்ய ஐ.தே.க. திட்டமிட்டுள்ளதாக ஐ.தே.க. தலைவர் கூறியுள்ள போதும் எந்த ஒரு திட்டமும் செயற்படுத்தப்பட்டது கிடையாது. ஒவ்வொரு தேர்தலிலும் அவர் தேர்தல் விஞ்ஞாபனமொன்றை வெளியிட்டு பல திட்டங்களை முன்வைப்பார். ஆனால் அவற்றில் எதுவும் நடைமுறைப்படுத்தப்படாது.

பல பாரிய நெடுஞ்சாலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கொழும்பு -மாத்தறை நெடுஞ்சாலை திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதோடு 2010ல் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. கொழும்பு-கண்டி நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு-கண்டி மாற்று நெடுஞ்சாலை என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்கு 95,244 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

இது தவிர மாகாணங்களுக்கான இணைப்பு வீதி இரத்தினபுரி- பலங்கொடை ஊடக பண்டாரவளை வரையான வீதி, பதுளை கண்டி மாற்று வீதி, ஒன்பது மாகாணங்களிலுமுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் வீதி விஸ்தரிப்பு, சுனாமியினால் சேதமான வீதிகளை மறுசீரமைத்தல், கண்டி-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியை அபிவிருத்தி செய்தல் உட்பட வீதி அபிவிருத்திக்கென 148,734 மில்லியன் செலவிடப்படவுள்ளது.

இது தவிர மத்திய அரசினூடாகவும் மாகாண சபைகளினூடாகவும் பல வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார் பாலம், கடுகஸ்தொட்ட பாலம், மனம்பிடிய பாலம், கிண்ணியா பாலம், அருகம்பை பாலம் என்பன அமைக்கப்பட்டுள்ளதோடு கொழும்பு வாகன நெரிசலை தடுக்க நுகேகொடை, களனிய மேம்பாலங்கள் என்பனவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தெஹிவளை மேம்பாலம் பூர்த்தியடையும் நிலையில் உள்ளது. 17 மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கு வசந்தம், கிழக்கு உதயம் திட்டங்களின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *