நல் லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்த மான ‘சுல்பிகார்’ கப்பலை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள இந்தக் கப்பலை பார்வையிடச் சென்ற பாதுகாப்புச் செயலாளரை கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் சாஹித் இல்யாஸ் வரவேற்றார்.
பாதுகாப்புச் செயலாளருடன் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசரசமரசிங்க, கடற்படையின் பொது நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் ரியர் அட்மிரல் எஸ். ஏ. எம். ஜே. பெரேரா, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் கேர்ணல் சயில் குர்ராம் ஹஸ்ஸான் அலாம் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கப்பலை பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளருக்கு கடற்படைத் தளபதியும் கப்பலின் கட்டளை அதிகாரியும் அந்தக் கப்பலின் வசதிகள் மற்றும் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளனர்.
14 அதிகாரிகள் மற்றும் 188 கடற் படைவீரர்களுடன் நான்கு நாள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை வந்திருந்த இந்தக் கப்பல் தனது பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றுக் காலை கொழும்பு துறைமுகத்திலிருந்து கராச்சி நோக்கி புறப்பட்டுச் சென்றதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் அதுல செனரத் தெரிவித்தார்.