மெளசாகலை நீர்த்தேக்கம் நிரம்பி வழியும் கட்டத்தை அடைந்திருப்பதால் பாதுகாப்பு கருதி மூன்று வான் கதவுகள் திறந்து விடப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர சேவைகள் செயற்பாட்டுப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் கேர்ணல் கீர்த்தி ஏக்கநாயக்கா நேற்றுத் தெரிவித்தார்.
இந்நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதால் களனி கங்கையின் இரு மருங்கிலும் வாழுகின்ற மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கடந்த சில தினங்களாக நீரேந்து பிரதேசங்களில் மழை பெய்து வருகின்றது.
இதனால் நேற்று காலை 5.30 மணியாகும் போது மெளசாகலை நீர்தேக்கம் நிரம்பி வழியும் கட்டத்தை அடைந்தது. இதன் காரணத்தினால் பாதுகாப்பு கருதி இந்நீர்த் தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வான் கதவும் நான்கு அங்குலத்திற்குத் திறக்கப்பட்ருக்கின்றது.
இந்நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதால் களணி கங்கையின் நீர்மட்டம் உயிரும். அதனால் களனி கங்கைக்கு இரு மருங்கிலும், கித்துல்கல, தெரணியாகல, யட்டியந்தோட்டை, கேகாலை, தெகியோவிட்ட, அவிசாவளை ஆகிய பிரதேசங்களிலும் வசிப்பவர்களை விழிப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.