திஸ்ஸ நாயகம் ஓர் ஊடகவியலாளர் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். எனினும் அவருடைய செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றத்தால் அவருக்கு வழங்கப்பட்ட 20 வருட கடூழிய சிறைத் தண்டனை ஊடக சுதந்திரத்துக்கு எதிரானதல்ல என தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷய யாபா தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நாட்டில் சட்டம் யாருக்கும் பொதுவானது. அனைவருக்கும் பார்க்கக்கூடிய வகையில் பகிரங்கமான முறையிலேயே அவருக்கெதிரான விசாரணைகள் நடைபெற்றன.
பயங்கரவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த விசாரணையின் அடிப்படையிலேயே அவருக்கு தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு இதற்கு மேலும் மேன்முறையீடுகளைச் செய்யலாம். அந்த அளவுக்கு நாட்டில் நீதிச் சுதந்திரம் உள்ளது.
சட்டத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை வைத்துக்கொண்டு அது ஊடக சுதந்திரத்தை பாதிப்பதாகக் கூறுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் ஊடகச் சுதந்திரத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை திட்டவட்டமாகக் கூற முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.