பயங்கரவாதத் திலிருந்து நாட்டைப் பாதுகாத்ததைப் போல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் இன்னும் சிறிது காலத்திற்கு நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறைமை நீடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புலிகளைத் தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட தீர்மானகரமான போராட்டத்தின் வெற்றிக்குக் காரணியாக அமைந்தது. மஹிந்த ராஜபக்ஷ, நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதியாகவும் சேனாதிபதியாகவும் இருந்தமையே என்று தெரிவித்துள்ள அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, உள்ளூர், வெளிநாட்டு அழுத்தங்களைத் தோல்வியுறச் செய்து இறுதிக் கட்டப் போரை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்குத் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதியிடமிருந்த அதிகாரங்களே வழிவகுத்தது.
சிலவேளை இந்த அதிகாரம் இல்லாதிருந்தால், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் சிக்கலாகியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்டெடுத்ததன் பின்னர், நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக வகுக்கப்பட்டுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி பதவி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருக்க வேண்டுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு எதிரான நிலைப்பாட்டை முன்பு தாம் கொண்டிருந்த போதிலும், மாறிவரும் நிலைமைகளுக்கேற்பவும் எதிர்கொள்ளவேண்டிய சவால்களுக்கமை யவும், பழைய கருத்தியலில் தங்கியிருப்பது நடைமுறைச் சாத்தியமான அரசியலாகாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.