யாழ்ப்பாணத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னாலிருந்த கல்வி நிலை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும – யாழ்நகரில் கல்வி அமைச்சர்

யாழ்ப்பாணத்தில் 30 வருடங்களுக்கு முன்னர் நிலவிய மிகச்சிறந்த கல்வி நிலை மீண்டும் உருவாக்கப்படவேண்டும். அதற்கு இங்குள்ள பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் கல்வியியலாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டுமென கல்வியமைச்சர் சுசில்ப்பிறேமஜயந்த தெரிவித்துள்ளார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கல்வியியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது; கடந்த காலங்களில் குழுப்பமான, கஷ்டமான சூழ்நிலையில் இருந்தபோதும் யாழ்.குடாநாட்டில் கல்வி மேம்பாடு அழிந்து விட்டாமல் பாதுகாத்து நின்ற ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவிக்கின்றோம். யாழ்ப்பாணத்தில் 4 வலயங்களில் சுமார் 101 பாடசாலைகள் மிகக் கடுமையான யுத்தத்தால் பாதிக்கப்பட்டு புனரமைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. கல்வி வலய அலுவலகங்கள் புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளன. பாடசாலையில் விஞ்ஞான ஆய்வு கூடங்களிற்கு உபகரணங்களை வழங்கவேண்டும். தளபாடங்கள், ஆசிரியர்கள், சிற்?ழியர்கள் பற்றாக்குறையாகவுள்ள அநேகமான பாடசாலைகள் உள்ளன. அவற்றிற்கு உடனடியாக இவற்றைப் பெற்றுத்தர வேண்டியுள்ளது.

மாகாணக்கல்வியமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளுக்கான வளங்களைப் பெற்றுத்தர ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வட மாகாண விசேட செயலணிக் குழுத்தலைவருமான பசில் ராஜபக்ஷவினால் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பாடசாலைகளுக்கான வளங்களைப் பெற்றுக் கொடுக்க உலகவங்கியுடன் கல்வியமைச்சு பேசி 10 மில்லியன் ரூபாவைப் பெற்றுள்ளது. முன்பு யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்.மத்திய கல்லூரி ஆகியவற்றுக்குச் சென்றபோது கட்டி முடிக்கப்படாத கட்டிடங்கள் காணப்பட்டிருந்தன. அவை விரைவில் பூரணப்படுத்தப்படும். “இசுறு’ பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் 30 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு 1,050 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வட மாகாணத்தில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் இன்மையினாலேயே இந்த நிதி விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பாடசாலை அதிபர்களுக்குப் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இசுறு பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் குடாநாட்டின் 5 வலயங்களைச் சேர்ந்த 75 பாடசாலைகளுக்கு கணினிக்கூடங்கள் அமைத்துக் கொடுக்கப்படும். கடந்த முறை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த போது தங்கள் பாடசாலைகளில் உள்ள பழைய கணினிகளை புதுப்பித்து தரும்படி மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்காக 3 வாரங்களில் நவீன கணினிகளை யாழ்.நகரில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுத்துள்ளோம். இத்தோடு கல்வியமைச்சின் கணினிப்பிரிவு உலக வங்கியுடன் பேசி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலை கணினிக் கூடங்களில் உள்ள பழைய கணினிகளைப் புதுப்பித்து வழங்கவும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளைக் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளுக்கு கணினிகளை வழங்க பல கணினி விற்பனை நிலையங்களிடம் இருந்து கேள்வி அறிவித்தல் பெறப்பட்டுள்ளது. இம் மாத முடிவிற்குள் கணினிகள் வழங்கி முடிக்கப்படும். இதுவரை நியமனங்கள் வழங்கப்படாத 400 வரையான தொண்டர் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கான நியமணங்களை வழங்கும் படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது அமைச்சிடம் கேட்டுள்ளார். இதற்கமைய 296 தொண்ட ஆசிரியர்களுக்கான நியமனங்களை யாழ்.மாநகரசபைத் தேர்தலுக்குப் பின்னர் வழங்கவுள்ளோம். இந்த நியமனங்களோடு 82 பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும்.

தேசிய பாடசாலைகளில் நிலவும் சிற்ழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பாக சமூக சேவைகள் அமைச்சருடன் பேசி தீர்வு காணப்படும். 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி அனைத்து ஆசிரியர்களுக்குமான பதவியுயர்வு பற்றிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான சுற்றறிக்கையும் திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 8 வருடங்களாகத் தீர்க்கப்படாமலிருந்த கல்வி நிர்வாக சேவை தரம் ஐ ற்கான பிரச்சினையும் தீர்க்கப்பட்டு அதிபர் சேவை ஐ இல் இருந்து நிர்வாக சேவை iii ற்கு வரவுள்ள 286 பேரின் பிரச்சினை டிசம்பர் மாதத்திற்குள் தீர்த்து வைக்கப்படும். அத்தோடு, அதிபர் சேவை 2:1 உள்ளவர்களுக்கான பதவி உயர்வுப் பிரச்சினையும் இவ்வாண்டுக்குள் தீர்க்கப்படும். அதிபர் சேவை 2:2, 2:3 உள்ளவர்களின் தேவைகள் செப்டெம்பர் மாதத்திற்குள் தீர்க்கப்படும். வடக்கின் வசந்தம் ஏற்பட இத்தனை வருடம் ஆனது போல் கல்விச் சேவையில் உள்ள சிக்கல்கள் தீர இத்தனை வருடங்கள் ஆகியுள்ளது. ஜனாதிபதியின் உதவியுடன் கல்விச் சேவை இப்பிரதேசத்தில் துரித வளர்ச்சி காணும். ஏ9 வீதி தொடர்பிலான சிக்கல் ஒரு சில நாட்களில் முடியும். முடிந்தவுடன் கொழும்பிலிருந்து கட்டிடப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் புனரமைக்கப்படும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *