தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலை வரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தமது கட்சியின் பெயர் மாற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மட்டு. வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் விளையாட்டுப் பயிற்சி பாடசாலையினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தமது கட்சியின் பெயர் மாற்றுவது தொடர்பாக தாம் ஆரம்பகாலத்தில் இருந்து சிந்தித்ததாகவும் இது தொடர்பில் மத்திய குழு கூடி பரிசீலித்ததாகவும் தெரிவித்த அவர், புதிய பெயர் ஒன்றினை தமது கட்சிக்கு வைப்பது தொடர்பாக புத்திஜீவிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் குறிப்பிடுகையில் தமது கட்சியில் இருக்கின்ற புலி என்கின்ற சொல் அகற்றப்பட வேண்டும். அதேநேரம் தனித்துவமான இனங்களுக்கான அடையாளங்களைக் குறித்த கொள்கைகளை மாற்றுவதாகவும் தமது உயர் மட்டக் குழு தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார். நடக்கவிருக்கின்ற பேராளர் மாநாட்டில் தமது புதிய பெயரை அறிவிப்பதாகவும் தலைவர் தெரிவித்தார்