சார்க் பிராந்திய நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாடு இன்று கொழும்பில் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது. சார்க் நாடுகள் அமைப்பின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகட்டலில் இம்மாநாடு இன்று காலை 9.00 மணிக்கு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
கொழும்பிலிருந்து இந்தியாவின் கொச்சின், மற்றும் தூத்துக்குடி வரை படகு சேவைகளை ஆரம்பிப்பது, தலைமன்னாரிலிருந்து சென்னை வரை ரயில் சேவைகளை ஆரம்பிப்பது போன்றவை தொடர்பில் இம்மாநாட்டில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
சார்க் நாடுகளின் நல்லுறவு, சார்க் நாடுகள் முகங்கொடுக்கும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது. அத்துடன் நாடுகளுக்கிடையில் பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்துச் சேவை சார்க் நாடுகளின் உள்ளக தொடர்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
பிராந்திய நாடுகளின் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகள், இந்நாடுகளின் கடல், தரை மற்றும் வான் போக்குவரத்துச் சேவைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் இம்மாநாட்டில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. மேற்படி மாநாட்டை முன்னிட்டு சார்க் நாடுகளின் போக்குவரத்து அமைச்சுச் செயலாளர்களின் மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றதாகவும் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.