விடுவிக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் உள்ளக வீதிகளைத் துரிதகதியில் புனரமைக்கவென அரசாங்கம் 275 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இவ் வீதிகள் துரித கதியில் புனரமைக்கப்படவுள்ளன. சில வீதிகளைப் புனரமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன என்று கிளிநொச்சி, முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள் நேற்று கூறினர்.
இந் நிதியில் 130 மில்லியன் ரூபா கிளிநொச்சி மாவட்டத்திற்கும், 145 மில்லியன் ரூபா முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் குறிப்பிடுகையில், வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பல உள் வீதிகள் துரிதமாகப் புனரமைக்கப்ப டவிருக்கின்றன. இதற்கென அரசாங்கம் 130 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இந் நிதி கிளிநொச்சி உள்ளூராட்சி திணைக்களத்திற்கு 50 மில்லியன் ரூபாவாகவும், வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு 60 மில்லியன் ரூபாவாகவும், மகநெகும திட்டத்தின் ஊடாக 20 மில்லியன் ரூபாவாகவும் கிடைக்கப் பெற்றிருக்கிறது என்றார்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் குறிப்பிடுகையில், வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் முல்லை மாவட்ட உள்ளக வீதிகளைத் துரிதமாக அபிவிருத்தி செய்யவென 145 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இந் நிதியில் 125 மில்லியன் ரூபாவை தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சு வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஊடாகவும், மகநெகும திட்டத்தின் ஊடாக 20 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.இந் நிதி ஊடாக மாந்தை கிழக்கு, ஒட்டி சுட்டான், துணுக்காய் ஆகிய பிரதேசங்களிலிலுள்ள உள் வீதிகள் துரிதமாகப் புனரமைக்கப்படும் என்றார்.