வடக்கில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியேறுவதற்கு 40 லட்சத்திற்கும் அதிகமான ஸ்டேர்லிங் பவுண் உதவியை வழங்க பிரித்தானிய அரசு தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் பீட்டர் ஹேய்ஸ் தெரிவித்தார்.
“கிழக்கின் பாதுகாப்பு நிலைமை தற்போது நல்ல நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றது. சோதனைச் சாவடிகள் குறைந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அன்றாட நடவடிக்கைகளில் சுமுகமாக ஈடுபடக் கூடிய சூழ்நிலை காணப்படுவதுடன் மக்கள் மத்தியல் ஒரு நம்பிக்கையும் காணப்படுகின்றது” என தனது கிழக்கு மாகாண விஜயம் தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும், “நாட்டில் இடம் பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் ஊடகங்கள் மீதான அழுத்தங்கள் ,ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் துன்பங்களுக்கு உள்ளாதல் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.
தமிழ் மக்கள் மத்தியில் அரசு தொடர்பான நம்பிக்கை, அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சிக்கும் சுதந்திரம் என்பனவற்றை உறுதிப்படுத்துவதன் மூலம் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் என்பன இருப்பதான உணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இது தொடர்பாக ஜனாதிபதி அவ்வப்போது பேசி வருவதை நான் கௌரவிக்கின்றேன்.
பயங்கரவாதம், மோதல் நிலைமை தற்போது முற்றுப் பெற்றுள்ள நிலையில் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. அது மட்டுமல்ல பிரித்தானிய முதலீட்டாளர்கள் இங்கு வந்து முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்களும் உள்ளன” என்று தெரிவித்தார்.