விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான தயாமோகன் மலேசியாவுக்கு தப்பிச் சென்று விட்டதாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) கூறியுள்ளார். கடந்த மே மாதம் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு புலி உறுப்பினர்கள் சரணடைய முயற்சிப்பதாகவும் அல்லது வெளியேற விரும்புவதாகவும் முன்னர் அமைச்சர் முரளீதரன் கூறியிருந்தார்.
பி.பி.சி.யின் சந்தேசிய சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ள அமைச்சர் முரளீதரன் அம்பாறைக் காட்டுக்குள் இருந்த தயாமோகனும் கேணல் ராமும் தப்பிச் சென்றுவிட்டதாக கூறியுள்ளார். ஆனால், இந்த தகவல் தொடர்பான தமது வட்டாரம் குறித்த விபரத்தை அவர் வழங்கியிருக்கவில்லை என்று பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்தது.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் பி.பி.சி. தமிழ்ச் சேவைக்கு கிழக்கிலுள்ள உறுப்பினர்கள் சரணடைவது குறித்துச் சிந்திக்கவில்லை என்று தயாமோகன் கூறியிருந்தார். இதேவேளை, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் ஒருங்கிணைதல் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் முரளீதரன் கண்ணிவெடி அகற்றப்பட்ட பின்பு 300 குடும்பங்கள் மன்னார் பகுதியின் இரு கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் படையணியை இலங்கை இராணுவம் உருவாக்குவது தொடர்பாக முன்னர் குறிப்பிட்டிருந்தது குறித்து கருத்து தெரிவித்த அவர்; ஆயுதப் படைகளில் தமிழ் இளைஞர்கள் இணைவதற்கு அரசாங்கம் ஊக்குவிப்பதாக கூறியுள்ளார்.
இதுவரை அவரின் 600 ஆதரவாளர்கள் இராணுவத்திலும் பொலிஸிலும் இணைந்துள்ளனர். மட்டக்களப்பில் பொலிஸ் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.