அம்பாறை மாவட்டத்தின் ஒரு பகுதி மக்கள் வரட்சியாலும், மறு பகுதியினர் சுழல் காற்றுடன் கூடிய மழையினாலும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். பொத்துவில், திருக்கோயில் பகுதிகளில் வரட்சி நிலவுவதால் சிறு போகமான நெற்பயிர்கள் கருகியுள்ளன. குடிநீருக்குக் கூட தட்டுப்பாடு நிலவுகிறது. கால்நடைகள் குடிநீரின்றி உயிரிழக்கின்றன.
அத்துடன் இப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் வரட்சியினால் தொற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இப்பகுதிகளிலுள்ள பிரதேச சபைகள் பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதேவேளை, இம் மாவட்டத்தின் மேற்குக்கரை பகுதிகளில் சுழல் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதனால் வரப்பத்தான் சேனை, தமனை தொட்டம் போன்ற இடங்களிலுள்ள வீடுகளின் கூரைகள் காற்றுடன் பறந்துள்ளன. மரங்கள் சரிந்து விழுந்ததில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இப்பகுதியில் ஆரம்பமாகியுள்ள சிறுபோக நெல் அறுவடை வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பிரதேச கிராமசேவையாளர்கள் விபரங்கள் சேகரித்து பிரதேச செயலாளர்களூடாக அரசாங்க அதிபரின் கவத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். இதேவேளை, பல தொண்டர் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றன.