வடக்கு, கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் படையினரை முழுமையாக ஈடுபடுத்த வேண்டுமெனத் தெரிவித்த பிரதமரும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க, காட்டுத் தர்பாருக்கோ அல்லது ஜனநாயகத்துக்கோ பங்கம் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்துக்கோ இனிமேல் இடமளிக்கப்படாதெனவும் கூறினார்.
தியத்தலாவை இராணுவ பயிற்சிக் கல்லூரியில் சனிக்கிழமை இடம்பெற்ற பயிற்சி முடித்து வெளியேறும் படை வீரர்களுக்கான நிகழ்வில் பிரதமர் அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
இந்த நாட்டிலுள்ள ஒருபகுதி மக்களுக்கு அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மக்களை படுகொலை செய்யும் இராணுவம் எம்மிடம் இல்லை. இந்த நாட்டில் எந்தவொரு பகுதியிலும் காட்டுத் தர்பார் அதிகாரம் செலுத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டோம். அதே போன்றே ஜனநாயகத்துக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்துக்கும் இடமளிக்க மாட்டோம்.
பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் முடிவடைந்துவிட்டது. தற்போது எம் முன்னால் உள்ளது அபிவிருத்தி யுத்தமே. இதனையும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகொள்வோம். வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் படையினரை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். அபிவிருத்தி திட்டமொன்றை முடிக்க ஒப்பந்தக் காரர்கள் மூன்று வருடங்கள் கோரினால் அதனை எமது படைவீரர்கள் சில தினங்களில் முடித்து விடுவார்கள்.
நீண்டகால வரலாறு கொண்ட எமது தாய்நாட்டை, அதன் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டியது படையினரின் பொறுப்பு. எமது படைவீரர்கள் உலகிலேயே சிறந்த வீரர்களாகவும் மிகவும் ஒழுக்கம் உள்ளவர்களாகவும் உள்ளனர். எந்தவொரு சமூகத்திற்கும் ஒழுக்கம் இருக்க வேண்டும். அப்படியான சமூகமே முன்னேறும். ஒழுக்கமுடையவர்களால் ஒருபோதும் சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படாது. இளைஞர்கள் அனைவருக்கும் எமது படைவீரர்களின் ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும். அதற்காக இளைஞர்கள் அனைவரையும் படையில் சேருமாறு நான் கூறுவதாக நினைக்கக் கூடாது.
பிரபாகரனின் செயற்பாடுகளினால் எமது நாடு 30 வருடங்கள் பின் தங்கிவிட்டது. மனிதப் படுகொலைகளில் ஈடுபட்ட கலிங்க மகான் என்ற மன்னருக்கு அடுத்த படியாக மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டவர் பிரபாகரன். உலகில் நிகழும் கொடூரமானவராக இருந்த அவரின் பயங்கரவாதத்திற்கு எம்மால் முடிவுகட்ட முடிந்திருக்கின்றது. இதற்கு படைவீரர்களின் அர்ப்பணிப்பே காரணமாகும்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்துக் கொண்ட 281 படைவீரர்கள் நேற்று அங்கிருந்து வெளியேறினர். இவர்களின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வும் இடம்பெற்றது.
palli
தென் இலங்கை மக்களை மகிழ்விக்கவும் தமிழ் மக்களை அடிமைபடுத்தவும் இதைவிட நல்ல வழி வேறு ஏதும் இருக்க வாய்ப்பில்லைம்; ஆனாலும் இதுவும் புலி தனக்குதானே குழி தோண்டியது போல் மகிந்தாவும் சம்பந்தியிடம் நாட்டை பறிகொடுக்க இப்படியான திட்டங்கள் மிகஅவசியம்;
santhanam
யானை தலையில் மண்அள்ளிபோட்ட மாதிரி தமிழன் தன்ரைமண்ணுக்கே தலையை புதைத்ததுதான் தமிழனின் விதி அது புலிவடிவில் நடந்து முடிந்துள்ளது.
மாயா
இராணுவம் என்பது பொதுவாக யுத்தத்துக்காக என்பது கருத்தாக இருக்கிறது. இல்லை, அவர்கள் தன் நாட்டின் அபிவிருத்தி பணிகளில் மற்றும் மனிதநேய பணிகளில் ஈடுபடுவதற்காகவும் செயல்பட வேண்டும் என்பதே நடைமுறை.
அதை இலங்கை அபிவிருத்தி மற்றும் புணர்நிர்மான பணிகளில் ஈடுபடுத்துவது மனிதநேய பணியாக மட்டுமல்ல, மனித மனங்களை வென்றெடுக்கும் பணியாகவும் இருக்கும்.
தாம் கட்டியதை தாமே அழிக்க மனம் வராது. அதை இராணுவம் உணரும். இது தம்மால் உருவாக்கப்பட்ட தேசம் என்பது. அங்கே மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டு வாழும் போது இது தமது உழைப்பின் வெற்றி என உணரப்படும்.
மீள் குடியமர்த்தப்படும் மக்களும் , இதன் பெருமதியை உணருவர். இவை ஒரு சமூக நல்லிணக்கமாக அமையும்.
இன்னொரு கோணத்தில் பார்த்தால் , இன்னொரு பகுதியினருக்கு அநியாயமாக செல்லும் ஊதியம் இராணுவத்தினரால் தவிர்க்கப்பட்டு , அந்த பணத்தையும் அபிவிருத்திக்காக செலவழிக்க முடியும். காரணம் இராணுவம் வெறுமனே சம்பளத்தோடு முகாமிலிருப்பதை விட மக்களுக்கான சேவைகளில் ஈடுபடவது, மக்களுக்கும் படையினருக்குமான அன்யோன்ய உறவை வளர்க்கும்.