இலங்கையில் சிங்களவருடன் இணந்து ஒரு ‘தமிழர் அரசு’ : சட்டசபையில் இன்று முதல்வர் உரை

karunanithi.jpg இலங் கையில் தமிழர்களை மதிக்கின்ற ஓர் அரசு அமைய வேண்டும். எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு ‘தமிழர் அரசை’ அமைக்கும் நிலை உருவாகலாம்” என்று முதல்வர் கருணாநிதி கூறினார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அங்கு தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரவும், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட அடிப்படை வசதிகளை வழங்குவது குறித்தும் விவாதிக்க சட்டசபையில் இன்று சிறப்பு கவனயீர்ப்புத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்மீது, அதிமுக சார்பில் பன்னீர் செல்வம், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், பாமக சார்பில் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ராமசாமி ஆகியோர் பேசினர். இலங்கையில் தமிழர்களின் நிலைமை படுமோசமாக இருப்பதாகவும், திறந்தவெளியில் ஆடு, மாடுகளை போல் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர்கள் அந்த மக்களுக்குத் தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்று கோரினர்.மேலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றும் முயற்சிகளைத் தடுத்து வடக்கு, கிழக்கு பகுதிகளை மீட்டு தமிழர்கள் முழு உரிமையுடன் சிங்களவர்களுக்கு இணையாக வாழ்வதற்கு மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

இதற்குப் பதிலளித்து முதல்வர் கூறுகையில்,”இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினையை அரசியலாக்காமல் அனைத்து கட்சியினரும் ஒரே விதமான கருத்தை தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இலங்கையில் நடைபெறும் பிரச்சினை என்பது சிங்களவர்களுக்கும், தமிழ் இனத்திற்குமான போராட்டமாகும். 50 ஆண்டு காலமாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். தமிழ் மொழி சீரழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே போராட்டம் நடத்தப்பட்டது. இதன் அடிப்படையிலேயே தமிழீழம் அமைய வேண்டும் என்ற குரலும் எதிரொலித்தது.இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளுக்கு இதில் பல்வேறு நிலைப்பாடுகள் உண்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழீழம் என்கிற பிரிவினைக்கு ஆதரவு இல்லை.

மாநில சுயாட்சி என்றஅளவில்தான் தீர்வு அமைய வேண்டும் என்பதுதான் அவர்களின் கொள்கையாக இருந்து வந்தது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போது தமிழீழம்தான் தீர்வு என்று தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது.பாமக கூட தமிழீழம்தான் தீர்வு என்று பேசி வந்தது. ஆனால் இன்று மாநில சுயாட்சி போதும் என்ற அளவுக்குப் பேசி வருகிறது. அதுதான் இப்போது முடியும். தமிழர்களுக்கு சம உரிமை, தமிழ்மொழிக்கு சம தகுதி, தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு. இவற்றுக்காக போராடும் நிலைதான் தற்போது உள்ளது.

இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஓர் அரசு அமைய வேண்டும். எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு ‘தமிழர் அரசை’ அமைக்கும் நிலை உருவாகலாம். ஒரு காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே அதிபராகலாம் என்று அமெரிக்காவில் இருந்த நிலை மாறி இப்போது கருப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமா அதிபராகி இருக்கிறார். அதே போன்று இலங்கையிலும் தமிழர்களின் அரசு அமைவதற்கு வெகு தூரம் இல்லை என்கிற நம்பிக்கையை நாம் பெற வேண்டும்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், என்னைவிட மகிழ்ச்சி அடைபவர் இந்த உலகில் வேறு எவருமே இருக்க முடியாது.தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமிக்கதாக மாற்ற வேண்டும் என்பது முக்கியமா? அல்லது அந்நாட்டு ஜனாதிபதியைக் குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? என்பதை நாம் சிந்தித்து பேச வேண்டும். அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டும் என்றால் அது சிங்கள அரசின் மூலம்தான் முடியும். அதற்காக நாம் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நம்முடைய கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். இலங்கை பிரச்சினையைப் பொறுத்தவரை ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக தெரிந்தவன் நான். இதை ‘பண்டார வன்னியன்’ என்ற நாவல் மூலம் நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.

இலங்கைத் தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்கள் அவர்களைச் சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஏற்கனவே செஞ்சிலுவைச் சங்கம் மூலம் தமிழக அரசோ, மத்திய அரசோ நிவாரண உதவிகளை அவர்களுக்கு வழங்கி இருக்கிறது.

தற்போது வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களும் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சென்றடைவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நிச்சயம் தமிழர்களிடம் அந்த பொருட்கள் போய்ச் சேரும்.

இலங்கைத் தமிழர்களுக்குத் தற்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அமைச்சர் தொண்டமான் என்னை வந்து சந்தித்திருக்கிறார்கள்.

ஒரு குழுவை அனுப்பி இலங்கை நிலைமையைப் பார்வையிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். மத்திய அரசின் அனுமதி பெற்று உரிய அதிகார அழைப்பின் பேரில்தான் அங்கு செல்ல முடியும் என்று நான் தெரிவித்திருக்கிறேன்.

இது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். அமைச்சர்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறேன். நானே தொலைபேசி மூலமாகவும் பேசியிருக்கிறேன். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். எப்போதும், இதே போல தமிழர்களாக ஒற்றுமையாக இருந்து இந்த பிரச்சனைக்கு நாம் தீர்வு காண்போம்”. இவ்வாறு கருணாநிதி கூறினார்.

இதையடுத்து பேசிய ஜி.கே.மணி இலங்கை குறித்த தனது கட்சியின் நிலையை விளக்கிக் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *