இந்தியாவில் 1992 ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்திலுள்ள பாபர் மசூதி தீவிரவாத இந்துக்களால் இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபர்ஹான் விசாரணைக் குழு 17 ஆண்டுகளுக்கு பிறகு தனது அறிக்கையை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேற்று கையளித்துள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையடுத்து இந்தியா முழுவதும் மதக்கலவரங்கள் ஏற்பட்டன. பாபர் மசூதி இருக்கும் இடம் இந்துக் கடவுள் ராமர் பிறந்த இடம் என்பது இந்து செயற்பாட்டாளர்களின் வாதமாக இருக்கிறது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் இந்திய சரித்திரத்தில் மிக சர்ச்சைக்குரிய பல சம்பவங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் இடம்பெற்று பத்து நாட்களுக்கு பிறகு நீதிபதி லிபர்ஹான் தலைமையிலான இந்தக் குழு அமைக்கப்பட்டது. தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அளிக்குமாறு அந்தக் குழு வேண்டப்பட்டது. ஆனால் 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று செவ்வாய்கிழமையன்று அந்த விசாரணைக் குழு தனது அறிக்கையை இந்தியப் பிரதமரிடம் அளித்துள்ளது. இந்த விசாரணைக் குழு அந்த பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு என்ன நிகழ்வுகள் காரணமாக இருந்தன என்றும் இதற்கு யார் பொறுப்பு என்றும் ஆராயுமாறு கோரப்பட்டிருந்த்து.
இந்த விசாரணை அறிக்கை தாமதவாவதற்கு பல்தரப்பிலிருந்து ஒத்துழைப்பு இல்லாமையே காரணம் என்று அதன் தலைவர் நீதிபதி லிபர்ஹான் தெரிவித்துள்ளார்.
லிபர்ஹான் விசாரணைக் குழுவின் அறிக்கை இன்னமும் வெளியாகவில்லை என்றாலும் அது முக்கியமான அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது.