தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் தோமஸ் தங்கத்துரை வில்லியம் தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபை திருத்தச் சட்ட மூல விவாதத்தில் கன்னி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; இன்று இலங்கையில் தீவிரவாதம் என்ற சொல் இல்லாமல் போய்விட்டது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசு முயற்சிகளை முன்னெடுத்தால் அதற்கு நாம் எமது ஆதரவை வழங்குவோம். எனவே, தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிழக்கில் வீதி அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றபோதும் அவை மிகவும் மந்த கதியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.