வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் பூரண ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் அலைவரிசையில் இன்று காலை ஒலிபரப்பான பல்திசை நோக்கு எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அஹிம்சை வழி மற்றும் ஆயுதப் போராட்டங்கள் அனைத்தும் முற்றாகத் தோல்வியடைந்துள்ளன. இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டியது அவசியமாகும்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நிவாரணக் கிராமங்கள் மற்றும் நலன்புரி நிலையங்களில் உட்கட்டமைப்பு உட்பட ஏனைய வசதிகளை மேம்படுத்துவது குறித்து கூடுதல் கவனம் செலுத்தவுள்ளேன். இம்மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இயலுமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கிஷோர் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்
pandithan
பணம் பத்தும் செய்யும். அதில் கிஷோர் என்ன விதிவிலக்கா? மக்களை அடைமானம் வைத்து,சகல சுகபோகங்களையும் அனுபவிக்க இன்னும் எத்தனை நபர்கள் அணிவகுக்கப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். சிங்களவர்கள் மிகவும் நல்லவர்கள், தமிழனுக்கு எதிரி தமிழனே.
பார்த்திபன்
தாங்கள் மக்களுக்காக அரசுடன் இணைந்து சேவை செய்ய முன் வந்தால் அது வரவேற்கத் தக்கதே. ஆனால் தங்களது அரசு விசுவாசம், வவுனியா மாநகர சபைத் தேர்தலில் தங்கள் மனைவியையும் வேட்பாளராக்குவதற்காக தொடரும் தொண்டென்று வரும் செய்தி தான் எங்கேயே உதைக்கிறது……..