புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட சகல பிரதேசங்களிலும் வெகுவிரைவில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு அங்கமாக அப்பிரதேசங்களில் புதிதாக 21 பொலிஸ் நிலையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன தெரிவித்தார்.
இவற்றில் ஏழு பொலிஸ் நிலையங்கள் ஏற்கனவே மன்னார் பொலிஸ் பிரிவில் நிறுவப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் ஆகிய மூன்று பொலிஸ் பிரிவுகளில் மேலும் 14 பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்கிரமரட்னவின் தலைமையில் நேற்றுக் காலை பொலிஸ் தலைமையகத்திலுள்ள விசேட செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மன்னார் பொலிஸ் பிரிவில் மடு, விடத்தல்தீவு, இலுப்பக்கடவாய், முழங்காவில், சிலாவத்துறை, பண்டிவிரிச்சான் ஆகிய பிரதேசங்களில் ஏழு பொலிஸ் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்