இலங் கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தியதை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் நேற்று வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. ரசாங்கத்திற்குச் சொந்தமான இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் 90 சதவீதமான பங்குகள் தனியார் நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டிருந்தன.
இதனை எதிர்த்து இரண்டு அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. காப்புறுதிக் கூட்டுத்தாபன ஊழியர்களும், நவசமசமாஜக் கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார ஆகியோரே மேற்படி அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.
தனியார் மயமாக்கப்பட்டதன் மூலம் சட்டத்திற்கு முரணான முறையில் செயற்படுத்தப்பட்டிருக்கிறதென அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் 90 வீத பங்குகளையும் உரிமத்தையும் அரசாங்கத்திற்கு வழங்க வேண்டுமென உச்சமன்று உத்தரவு பிறப்பித்தது.
குறிப்பிட்ட, மில்போர்ட் ஹோல்டிங்ஸ் பிறைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதலீடான ஆறு பில்லியன் ரூபாயை ஐந்து வருட காலத்திற்குள் மீளச் செலுத்திவிட வேண்டுமென்று உச்சமன்று தெரிவித்தது. தற்போது பணியாற்றும் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையினர் உடனடியாக அகற்றப்பட வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர்களை நியமிப்பதற்காக தகுதி வாய்ந்த ஒருவரை திறைசேரி நியமிக்க வேண்டுமென உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் ஜூன் 18க்குள் இந்த விடயம் பூர்த்திசெய்யப்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளது.
இடைப்பட்ட காலத்தில் திறைசேரி இடைக்கால நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது. பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, நீதியரசர்கள் காமினி அமரதுங்க, கே. சிறிபவன் ஆகியோர் கொண்ட குழுமம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
அதேநேரம், கணக்காய்வாளர்களான ஏனர்ஸட், ஜங்க் ஆகியோரை நிறுத்துமாறும் உச்சமன்று தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் உரிமை பற்றிய தீர்ப்பையடுத்து அதன் ஊழியர்கள் நேற்று கூட்டுத்தாபனத்தின் முன்னால் கூடி ஆடிப்பாடி தமது வரவேற்பைத் தெரிவித்தனர்.