நாம் முன்வைக்கும் தீர்வில் பிரிவினை வாதத்திற்கோ, இனவாதத்திற்கோ இடமில்லை – படைவீரர்கள் தேசிய விழாவில் ஜனாதிபதி

he_speech_ranaviru_.jpgநாங்கள் வழங்கப்போகும் தீர்வுகளில் பிரிவினை வாதத்திற்கோ,  இனவாதத்திற்கோ எந்தவொரு இடமும் இருக்காது என்றும் பாரிய தியாகங்களுக்கு மத்தியில் ஒன்றுபட்டிருக்கும் எமது தேசத்தை பிளவுபடவோ அல்லது பிரிவினைவாதத்தின் நிழல்கூட விழுவதற்கோ இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். போர்வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு கொழும்பில் இன்று நடைபெற்ற படையினரின் வெற்றியை கொண்டாடும் தேசிய வைபத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி:

மிகக்கூடிய விரைவில் எமது பிராந்தியத்தில் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவகையிலும் தற்போது ஒன்றுபட்டிருக்கும் எமது தேசம் பிளவுபடாதவிதத்திலும் எமது சொந்த தீர்வினை நோக்கி நகர்வோம். ஒருங்கிணைக்கப்பட்ட தாய் நாட்டின் பூமியிலேயே இன்று நான் தேசியக்கொடியை ஏற்றிவைத்தேன் என்பதை கௌரவத்துடனும் பெருமதிப்புடனும் தெரிவித்துக்கொள்கிறேன். போர்திறன்,  செயல்திறன்,  அஞ்சாமை மற்றும் நல்லொழுக்கமுள்ள உலகை வியப்பில் ஆழ்த்திய முப்படை இன்று எம்மிடமுள்ளது. சிறப்புமிக்க ஒரு எதிர்காலம் உருவாவதைக் கண்டுகொள்ள ஆவலுடன் இருக்கும் நாட்டு மக்கள் மத்தியில் எங்கள் எதிர்காலம் தொடர்பாக பாரிய எதிர்பார்ப்பைக் கொண்டவனாக நான் இன்று உரையாற்றுகிறேன்.

எமது தாய்நாட்டை ஒருங்கிணைக்கச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் சிறந்த ஒரு எதிர்காலத்தை நோக்கிச்செல்லத் தயாராக உள்ள எங்களுக்கு ஒரு பாதையைத் திறந்துவிட்டுள்ளது. எமது தாய்நாடு பெற்றுள்ள இம்மாபெரும் வெற்றியை உலக நாடுகள் அதிசயத்துடன் பார்த்தமை கடந்த சில நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மூலம் புலனாகின்றது. பயங்கரவாதத்தை முரியடித்தமைக்கு பல உலக நாடுகள் வாழ்த்துத் தெரிவித்துள்ளன.

இவ்வாறான மிகவும் மோசமான ஒரு தீவிரவாத இயக்கத்தை உலக நாடுகள்; இதுவரை கண்டதில்லை. கப்பல்கள்,விமானங்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள் பயங்கர ஆயுதங்கள் அதுமட்டுமல்லாமல் தற்கொலைக் குண்டுதாரிகள். எனவே இவ்வாறான ஒரு சக்திமிக்க பயங்கரவாத இயக்கத்தை அழிக்க அதிகாரம் மிக்க ஒரு நாட்டின் அல்லது ஐகிய நாடுகளின் படையை ஈடுபடுத்த வேண்டுமென சிலர் வலியுறுத்தினர்.

ஓரிரு வருடங்கள் அல்ல முப்பது வருட காலமாக அவர்கள் எமது நாட்டின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தமை மிகவும் மோசமான ஒன்றாகும். நாட்டை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான அவர்களின் திட்டம் மிக மிகப்பயங்கரமானது. 2005ஆம் காலக்கட்டத்தை எட்டும் போது நான்கு தலைவர்களுடன் போராடி ஒரு தலைவரையும் அழித்துள்ளது. நாட்டில் உயர் பதவி வகித்த படைத்தளபதிகள் பலர் பாதுகாப்பு அமைச்சர்கள்,  உட்பட இந்தியப் பிரதமர் ஒருவரையும் அழித்துள்ளது. விமானங்களையும் படகுகளையும் புனிதத்தளங்களையும் தாக்கியுள்ளது. தலைநகர் உட்பட பொருளாதார வலயத்தையும் தாக்கியுள்ளது. இதனால் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது எவ்வாறாயினும் அவர்களுக்கு எதிராகப் பேசுவதும் பாரதூரமான விடயமாக இருந்தது. அவ்வாறு பேசினால் பேசியவரின் பரம்பரையே பழிவாங்களுக்கு இலக்காகும் ஆபத்தான நிலை தோன்றியிருந்தது.

தீவிரவாதத்தைத் தோற்கடித்து நாம் பெற்றுக்கொண்டுள்ள புதிய சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் ஏனைய வெளிசக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிவதைத் தவிர்ப்பதற்கும் எமது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கு வெளியுறவுகளில் புதியதோர் யுகத்தை ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தாய்நாட்டின் சுதந்திரத்தை வென்றிருக்கும் நாம், அடுத்ததாக எமது சுதந்திரத்தையும் இறைமையையும் சர்வதேச ரீதியாக தாபிக்க வேண்டும். பயங்கரவாதிகள் இந்த நாடுகளில் செல்வாக்கு செலுத்தும் நிலையில் இருந்தமையால் அவர்களுக்கு உலகநாடுகளின் மூலம் ஒரு சுதந்திரமும் இறைமையும் கொண்ட நாடான எமது நாட்டின் மீது அழுத்தத்தைக் கொண்டுவர முடிந்தது.

முதலாவதாக,  கடந்த 30 ஆண்டுகளாக வடக்கு மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்த எல்லா வசதிகளையும் நாம் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும். 30 வருடங்களாக இருந்துவந்த பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரண்டரை வருட காலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்று இதுவும் ஒரு பாரிய அபிவிருத்தி நடவடிக்கையாக இருக்குமென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வடக்கின் வசந்தம் உதயமாவது மட்டுமல்ல. அது வடக்கெங்கும் மிக விரைவில் பரவி வியாபிக்கும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *