எல்.ரீ.ரீ.ஈ. யினரைத் தோற்கடித்து பாதுகாப்புப் படைவீரர்கள் பெற்றுத் தந்த வெற்றி எமது நாட்டில் வாழும் எல்லா மக்களினதும் வெற்றியாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் தெரிவித்தார். படைவீரர்களின் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
கொழும்பு, காலிமுகத்திடலில் தற்போது மிகவும் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வைபவத்தில் சற்றுநேரத்துக்கு முன்னர் உரையாற்றிய ஜனாதிபதி தனது உரையின் ஆரம்பத்தில் சிங்களத்தில் சில வார்த்தைகளைக் கூறிவிட்டு தமிழ் மொழியில் உரையாற்றினார். ஜனாதிபதி தமதுரையில் குறிப்பிட்ட தமிழ் வாசகங்கள் கீழே.
அன்பர்களே, இது நம் எல்லோருடைய தாய்நாடு. இந்த நாட்டில் நாம் எல்லோரும் ஒருதாய் மக்களாக சகோதரர்கள் போல் வாழ வேண்டும். இங்கே எந்தவித பேதமும் இருக்க முடியாது.
எல்.ரீ.ரீ.ஈ. யினருடன் நடத்திய யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல. எல்.ரீ.ரீ.ஈ. யினரின் பிடியிலிருந்து அப்பாவி சகோதர தமிழ் மக்களைப் பாதுகாக்க எமது படைவீரர்கள் உயிர் நீத்தார்கள். அவர்கள் செய்த சேவை மறக்க முடியாதது.
எல்.ரீ.ரீ.ஈ. யினரைத் தோல்வி பெறச் செய்து நாம் பெற்ற வெற்றி இந்த தேசத்தின் வெற்றி. நீங்கள் பெற்றுத் தந்த பெருவெற்றி. எமது நாட்டில் வாழும் எல்லா மக்களின் வெற்றி.
அன்பான படைவீரர்களே, இப்போது பயங்கரவாதிகளுடன் செய்த யுத்தம் முடிந்துவிட்டது. இனி நாம் எமது தமிழ் மக்களுடைய உள்ளங்களை வெற்றிகொள்ள வேண்டும். தமிழ் பேசும் மக்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் பயம், சந்தேகம் இல்லாமல் வாழ வேண்டும். அதுதான் நம் எல்லோருடைய கடமை.
பார்த்திபன்
//அன்பான படைவீரர்களே, இப்போது பயங்கரவாதிகளுடன் செய்த யுத்தம் முடிந்துவிட்டது. இனி நாம் எமது தமிழ் மக்களுடைய உள்ளங்களை வெற்றிகொள்ள வேண்டும். தமிழ் பேசும் மக்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் பயம், சந்தேகம் இல்லாமல் வாழ வேண்டும். அதுதான் நம் எல்லோருடைய கடமை.//
தங்கள் பேச்சிலுள்ள தேசியம்சார்ந்த அக்கறை செயலிலும் இருக்க வேண்டுமென்று தான் பலரும் விரும்புகின்றோம். எனவே எனி உங்கள் நடவடிக்கைகள் வெறும் பேச்சாக மட்டுமல்லாமல் செயலாகவும் காட்டுங்கள்.