தென் கொரியாவின் முன்னாள் அதிபர் ரோ மூ ஹியுன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தோன்றும் சம்பவம் தொடர்பில் இந்நாள் அதிபர் லீ முயுங் பாக் ஆழமான அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
2008ல் தான் பதவிக்கு வருவதற்கு முன்பாக, ஐந்து ஆண்டு காலம் பொறுப்பில் இருந்த ரோ உயிரிழந்தமையை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், அது பெரும் கவலையைத் தந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
தனது வீட்டின் அருகில் இருந்த ஒரு மலை முகட்டிலிருந்து கீழே விழுந்ததில் ரோ உயிரிழந்துள்ளார். தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவர் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார் என்று பொலிசார் கூறுகின்றனர்.
ரோ ஒரு எளிமையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கல்லூரி சென்று படித்ததில்லை, ஊழலற்ற ஆட்சி, வடகொரியாவுடன் சமாதானம் போன்றவற்றை முன்னிறுத்தி நாட்டின் அதிபரானவர் அவர். அண்மைய மாதங்களாக அவர் மீது ஊழல் புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை அவர் மறுத்திருந்தார்.