மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இவற்றை மறுத்த பிரதமர் மன்மோகன்சிங், அமைச்சரவையில் இடம்பெற முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து முதல்வர் கருணாநிதி, ‘’அமைச்சரவை அமைக்கும் காலத்தில் டெல்லியில் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள். இவற்றுக்கெல்லாம் விளக்கமளித்து மறுத்த பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நன்றி. மத்திய அமைச்சரவையில் பங்கேற்க அழைப்பு விடுத்த பிரதமருக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், ‘’அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து விவாதித்து முடிவு அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.