இலங் கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் தலைமையிலான தூதுக்குழுவினரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பு வியாழக்கிழமை இந்திய இல்லத்தில் பிற்பகல் 12.30 மணிக்கு இடம்பெற்றது. முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பசீர் சேகுதாவூத், முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.எம்.பாயிஸ் மற்றும் பொதுச் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் பங்கு பற்றினர்.
இச் சந்திப்புத் தொடர்பில் அதன் பொதுச் செயலாளர் ஹசன் அலி கருத்துத் தெரிவிக்கையில்; இதன்போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் துரித கதியில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். இதற்கு சமாந்திரமாக வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களையும் குடியேற்ற வேண்டுமென நாம் கோரினோம்.
யுத்தம் முடிந்துள்ள நிலையில் மக்கள் மன நிம்மதியுடன் வாழ அச்சமற்ற சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இதற்கு ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் மற்றும் குடியமர்த்தல் மீள் கட்டமைப்புக்கு அரசியல் வேறுபாடு களையப்பட்டு சகலரும் சேர்ந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இத்தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள தலைமைத்துவங்களை இனம் காணப்பட வேண்டும். இதற்கு அவர்கள் சுதந்திரமான ஜனநாயக வழியில் இயற்கையான தெரிவுக்கு வழி வகுக்க வேண்டும். இதன் மூலமே ஒற்றுமையுடன் சகவாழ்வையும் ஏற்படுத்த முடியுமெனவும் தாம் கூறியதாக அவர் தெரிவித்தார்.
இவற்றுக்கு இந்தியா பங்களிப்புச் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். இச் சந்திப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதரக உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான ஷாமும் கலந்து கொண்டனர்.