மனிக் பாமிற்கான அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது; உதவிகளை மேற்கொள்ள முடியாத நிலை:ஐசிஆர்சி கவலை

IDP_Camps
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள முகாம்கள் சிலவற்றுக்கு ஐ.சி.ஆர்.சி. உட்பட மனிதாபிமான அமைப்புகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அந்த முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நலன்கள் தொடர்பாக அச்சங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவ்வாறான தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லையென அரசாங்கம் நிராகரித்திருக்கிறது.

முகாம்களுக்குச் செல்ல அரசாங்கம் தடையேற்படுத்தியிருப்பதால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் போது இடம் பெயர்ந்த மக்களுக்கான அவசர உதவி விநியோகங்களை நிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டதாக ஐ.சி.ஆர்.சி. தெரிவித்திருக்கிறது.

முகாம்களுக்குச் செல்வதற்கு அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டதையடுத்து உணவு மற்றும் உடைகள் போன்ற அவசர உதவி விநியோகங்களை ஐ.சி.ஆர்.சி. இடைநிறுத்தி விட்டதாக அதன் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி லண்டன் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேநேரம், இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான சில முகாம்களுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று ஐ.நா. சிறுவர் நிதியத்தின் ( யுனிசெப்) நிறைவேற்றுப் பணிப்பாளர் என்.எம். வெனமன் தெரிவித்திருக்கிறார்.

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்குக் கிடைக்கக் கூடிய வகையில் அவர்களுக்கு மிக அவசியமான உதவிகள் முழுமையாகவும் தடங்கலின்றியும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருப்பதாக சிங்குவா செய்திச் சேவை தெரிவித்தது.

அமைச்சர் மகிந்த சமரசிங்க இது தொடர்பாக இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க; நாம் ( அரசாங்கம்) அப்படியான தடைகள் எதையும் விதிக்கவில்லை. இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு அரசாங்கம் செய்து வரும் உதவிகளை விட மேலதிகமான உதவிகளை வழங்க அவர்களுக்கு அனுமதி இருக்கிறது. அவர்கள் முகாம்களில் உதவிப் பணிகளில் ஈடுபட முடியும்.
இதேநேரம், அவர்களது (ஐ.சி.ஆர்.சி.யினது) பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் முகாம்களுக்குள் செல்வது அங்கிருக்கும் மக்களுக்கு கஷ்டமாக இருப்பதனாலேயே உட்பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு நாம் அறிவுறுத்தியிருக்கிறோம். முகாம்களுக்குள் வாகனங்கள் அதிகம் வருவதால் மக்களே அசௌகரியத்துக்குள்ளாகின்றனர்.

அவசர உதவி விநியோகங்களை நிறுத்துவதென்றால் அவ்வாறான அவசர உதவி விநியோகங்களுக்கு தற்போது பாதுகாப்பு வலயம் ( மோதல் சூன்ய வலயம்) எதுவும் கிடையாது. அரசாங்கம் மக்களுக்குத் தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்கியே வருகிறது என்று பதிலளித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *