25வது முதலமைச்சர்கள் மாநாடு மட்டக்களப்பில் இன்று (16) காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சரும், 25வது முதலமைச்சர்கள் மாநாட்டின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் முதலமைச்சர்கள் நேற்று பிற்பகலிலிருந்து மட்டக்களப்புக்கு வருகைதந்தனர். மட்டக்களப்புக்கு வருகைதந்த முதலமைச்சர்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், முதலமைச்சரின் செயலாளர் ஆகியோர் மாநகர சபையின் வாடிவீட்டின் முன்பாக நின்று வரவேற்றனர்.
மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு இவர்கள் வரவேற்கப்பட்டனர். இதேவேளை இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரசாங்கத்தின் பிரதிநிதியாக அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றுக்காலை மட்டக்களப்புக்கு வருகை தந்தார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு வருகைதந்த அமைச்சரை மட்டக்களப்பு மாநகர சபை மேயர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோர் வரவேற்றனர். மாநகர சபையின் வாசஸ்தளத்தில் மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார்.
இதையடுத்து மாநாட்டு ஒழுக்குகள் குறித்து அமைச்சர் ராஜித சேனாரத்ன கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் மாநாட்டு மண்டபத்தையும் பார்வையிட்டார்.
இம்மாநாடு நடைபெறும் மண்டபம் பலத்த பாதுகாப்புக்குட் படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை வைபவரீதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையுரை நிகழ்த்தி முதலமைச்சர்கள் மாநாட்டை ஆரம்பித்து வைப்பார்.
இதையடுத்து மாநாடு முடிவுற்றதும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இம்மாநாடு தொடர்பான பத்திரிகையாளர் மாநாடும் நடைபெறவுள்ளது. அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மற்றும் சகவாழ்வு மன்றத் தலைவர் குமார் ரூபசிங்கவும் மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்திருந்தனர். மாநாட்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரம் அலங்கார வளைவுகளாலும் கட்அவுட்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மாநகர மண்டபத்துக்கு சமீபமாக வீதியின் அருகில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் 7 முதலமைச்சர்களுடனும் காணப்படும் முழு உருவம் கொண்ட 8 கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு நீதிமன்ற நுழைவாயிலில் வைத்து முதலமைச்சர்களும் அதிதிகளும் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மேளம் மற்றும் மங்கள வாத்தியம் முழங்க கலை, கலாசார நிகழ்வுகளுடன் மாநாட்டு மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
பாடும் மீன் ஹோட்டல் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள மட்டக்களப்பு வாடி வீட்டில் முதலமைச்சர் சந்திரகாந்தன் முதலமைச்சர்களுக்கும் அதிதிகளுக்கும் நேற்று இராப்போசன விருந்தளித்து கெளரவித்தார்.