![]()
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற பிரதேசத்துக்குள் கையடக்கத் தொலைபேசி கொண்டு செல்வதற்கு நீதிமன்று பொலிஸ் சோதனைச் சாவடியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்ற பொலிஸ் சோதனைச் சாவடியின் முன்பாகவுள்ள தேநீர்க்கடை உரிமையாளர் தொலைபேசியை வைத்திருப்பதற்காக பத்து ரூபா வீதம் அறவீடு செய்து கொள்ளை இலாபமீட்டுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நீதிமன்ற தேவைகளுக்காக பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, ஒலுவில் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த அதிகமான மக்கள் நாளாந்தம் தமது நீதிச்சேவையைப் பூர்த்தி செய்து வருகின்றனர். எனினும் இவர்கள் தமது கையடக்கத் தொலைபேசியை நீதிமன்ற பிரதேசத்துக்குள் பொலிஸ் சோதனைச்சாவடியூடாக உட்கொண்டு செல்லத் தடைசெய்யப்பட்டுள்ளது.
இதனாலேயே சோதனைச்சாவடிக்கு எதிரே உள்ள தேநீர்க்கடையில் கையடக்கத் தொலைபேசியை வைத்துச்செல்வதற்கு வாடகையாக பத்து ரூபா அறவீடு செய்யப்படுகின்றது. எனவே, கையடக்கத் தொலைபேசி கொண்டு செல்வதற்கான தடைக்குப் பதிலாக மாற்றுவழி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், தேநீர்க் கடை வியாபாரி நாளாந்தம் இரண்டாயிரம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெற்றுவருவதுடன், இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் தரப்பினருக்கும் ஒருதொகைப்பணம் இலஞ்சமாக வழங்கப்படுகின்றது என பொதுமக்களால் தெரிவிக்கப்படுகின்றது.