கிழக்கு மாகாண சபை உறுப்பினரான அமீர்தீன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் உறுப்பினராக இவர் தெரிவானார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடத்துடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிலிருந்து விலகி அண்மையில் தேசிய காங்கிரஸில் இணைந்திருந்தார்.
இவரது ராஜினாமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு விருப்புத் தெரிவு வாக்கு அடிப்படையில் 7914 வாக்குகளைப் பெற்றிருந்த காத்தான்குடி நகர சபைத் தலைவரான யு.எல்.எம். முபீன் பதவி ஏற்கவிருக்கின்றார். தனது நியமனம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர் தாம் பதவி ஏற்கவிருப்பதாக யு.எல்.எம். முபீன் தெரிவித்தார்.