புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னும் பாதுகாப்பு வலயத்திலேயே ஒழிந்திருக்கிறார். இதனை புலணாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பாதுகாப்புப் படையினர் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதால் புலிகளின் தலைவர் தப்பி ஓடுவதற்கு வழியெதுவுமில்லை என பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், புலிகளுடன் எத்தகைய யுத்தநிறுத்தத்தையும் மேற்கொள்வதில்லை எனும் நிலைப்பாட்டில் அரசாங்கம் தெளிவாகவே உள்ளது. மரணப்படுக்கையில் உள்ள புலிகளுடன் யுத்தநிறுத்தம் ஒன்றைச் செய்வதற்கு எத்தகைய அவசியமும் இல்லை. கடந்த காலங்களில் யுத்தநிறுத்தம் அமுலில் இருந்தபோது புலிகள் தங்களை எவ்வாறு பலப்படுத்திக்கொண்டார்கள் என்பதை அனைவரும் அறிவர்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் பல வெளிநாட்டுப் பிரமுகர்கள் புலிகளின் தலைவரை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் யுத்தநிறுத்தப் பிரேரணைகளை முன்வைத்து வருகின்றனர். எனினும் அத்தகைய சக்திகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது. புலிகளின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகள் குறித்து வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்களே உள்ளனர். இவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
palli
ஜயா உங்க ஆட்ச்சியில் பங்கு கொண்டவர்களும் சக அமைச்சர்களும்தான் பிரபா தப்பிவிட்டார் என அங்கலாய்க்கிறார்கள். நீங்களோ இப்படி மிரட்டுகிறீர்கள். ஆக இது உங்க வீட்டுக்குள் இருந்து பேசி முடிவு செய்ய வேண்டிய சமாச்சாரம். அதைவிட்டு ரோட்டில் வந்து நின்று உடுப்பு
மாத்துவது ஒரு தலமை அமைச்சருக்கு நல்லாவா இருக்கு. உள்ளே வெளியே விளையாட்டு இந்த தருனத்தில் தேவையா??