வவுனியாவில் இயங்கும் புனர்வாழ்வு நிலையத்தில் வன்னியிலிருந்து வந்த 800 க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வந்து சரணடைந்தவர்களே இங்கு தங்கவைக்கப்பட்டிருப்பதாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது.
இது பற்றி படைத் தரப்பு கூறுகையில்; படையினரிடம் சரணடைந்தவர்களுக்குரிய புனர்வாழ்வு நிலையம் வவுனியாவில் இயங்க ஆரம்பித்துள்ளது. நீதி அமைச்சின் கீழ் இந்த நிலையம் இயங்குகிறது.
வவுனியா மன்னார் வீதியிலுள்ள நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரியே புனர்வாழ்வு நிலையமாக இயங்குகின்றது. வவுனியாவில் படையினரிடம் சரணடைந்த 800 க்கும் மேற்பட்டவர்கள் இங்கு தங்கவைக்கப்பட்டு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
வன்னியிலிருந்து மக்களுடன் இடம்பெயர்ந்து வந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்திருந்தனர். இவர்கள் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கவே இந்த நிலையம் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் சரணடைந்த பலர் வெலிக்கந்த நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தொழில் பயிற்சியும் இவர்களுக்கு அளிக்கப்படவுள்ளது. இவர்களில் பெண்களும் உள்ளனர்.