கோவையில் 5 ராணுவ லாரிகளுக்கு தீவைப்பு – வீரர்கள் மீது தாக்குதல்

கோவை அருகே, இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் கொண்டு போகப்படுவதாக பரவிய தகவலைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் வந்த வாகனத்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி தாக்கினர். ராணுவ லாரிகளையும் தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை அருகே மதுக்கரை என்ற இடத்தில் ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத்துக்குப் பயிற்சிக்குச் சென்றிருந்தனர்.

பின்னர் அங்கு பயிற்சியை முடித்து விட்டு இன்று கொச்சி வழியாக கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். மொத்தம் 60 வாகனங்களில் அவர்கள் வந்தனர். இந்த நிலையில், அந்த வாகனங்களில் இலங்கைப் படையினருக்கான ஆயுதங்கள் கொண்டு போகப்படுவதாக தகவல் பரவியது.

இதையடுத்து பெரியார் திராவிடக் கழகத்தினர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் அங்கு விரைந்தனர். நீலாம்பூர் பைபாஸ் சாலையில், ராணுவ லாரிகளை தடுத்து நிறுத்தி தாக்குதலில் இறங்கினர். ராணுவ லாரிகளில் இருந்த பொருட்களை எடுத்து கீழே வீசி சேதப்படுத்தினர். சில ராணுவ வீரர்களும் தாக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் சிலர் லாரிகளுக்குத் தீவைத்தனர். இதி்ல் 5 லாரிகள் தீயில் சேதமடைந்தன. இதையடுத்து ராணுவ வீரர்கள் லத்திகளுடன் கீழே இறங்கி தாக்குதலில் ஈடுபட்டவர்களை மீது தடியடி நடத்த ஆரம்பித்தனர். சரமாரியாக கண்களில் பட்டவர்களையெல்லாம் அவர்கள் தடிகளால் அடித்து விரட்டினர். இதில் பலர் காயமடைந்தனர். தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். அந்தப் பகுதியே கலவரம் நடந்த பகுதி போல காணப்பட்டது. ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

ராணுவ வாகனங்களைத் தாக்கியதும், ராணுவ வீரர்களைத் தாக்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *