பாலஸ்தீன மக்களுடன் எப்போதும் இலங்கை நிற்கும் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

பாலஸ்தீன மக்களின் துயரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன மக்களிற்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவு தினத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன பகுதிகளிலும் மேற்குஆசியாவிலும் ஒருவருடத்திற்கு மேலாக நீடித்துவரும் பொதுமக்களின் உயிரிழப்புகளும் தொடரும் அழிவுகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை சகித்துக்கொள்ள முடியாதவை என அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன மக்களிற்கான இலங்கையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள ஜனாதிபதி பல தசாப்தங்களாக பாலஸ்தீனியர்கள் துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

பல சர்வதேச மன்றங்களில் இலங்கை காசாவின் மனிதாபிமான நிலை குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனியர்களின் போராட்டத்திற்கான ஆதரவிலிருந்து இலங்கை பின்வாங்ககூடாது என்பதை பாலஸ்தீனியர்களிற்கான ஐநா தினம் வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ள அவர் சர்வதேச சட்டம் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான அமைதியான சமத்துவ தீர்வை காண்பதை சர்வதேச சமூகம் கைவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடி ஆபத்தான விதத்தில் தீவிரமடைந்துள்ளமையும்,சர்வதேச அளவில் அதன் தாக்கமும்,பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக ஏழு தசாப்தங்களாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை மேலும் அவசியமானவையாக மாற்றியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனியர்களிற்கான ஐநாவின் நிவாரண முகவர் அமைப்பிற்கு எதிரான அச்சுறுத்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி அகதிகளின் வாழ்வை தாங்கிப்பிடித்த மனிதாபிமான சேவை வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளமை ஏமாற்றமளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *