ஹிஸ்புல்லாவின் வங்கிக் கணக்குகளை குறிவைத்து தாக்கும் இஸ்ரேல் – அனைத்து கணக்குகளையும் முடக்கும் திட்டம் தீவிரம் !

ஹிஸ்புல்லாவை  ஆதரிப்பதாகக் கூறும் வங்கி கிளைகளைக் குறிவைத்து, லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லெபனான் முழுவதும் அல்-கார்ட் அல்-ஹசன் கிளைகளைக் கொண்ட கட்டிடங்களை இலக்கு வைத்து நேற்றையதினம் (21.10.2024) 16 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெய்ரூட்  விமான நிலையத்திற்கு அருகில் இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், லெபனானில் 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்தாகவும் கூறப்படுகின்றது.

எச்சரிக்க வழங்கிய சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு முதல் விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளது. ஹிஸ்புல்லாவை ஆதரிப்பதாகக் கூறும் அல்-கார்ட் அல்-ஹசன் வங்கியின் கிளைகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

இந்த வங்கியின் கிளைகள் பெரும்பாலும் பரபரப்பான மாவட்டங்களில் குடியிருப்பு கட்டிடங்களின் தரை தளத்தில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் முழுவதும் இந்த வங்கியின் 34 கிளைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹிஸ்புல்லாவின் நிதிக் கட்டமைப்பை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

“ஹிஸ்புல்லா அமைப்பு அதன் நடவடிக்கைகளுக்கு நிதியளித்த தளங்களை குறிவைத்தது” என்று இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF) நேற்று (21.10.2024) காலை ஒரு அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.

அல்-கார்ட் அல்-ஹசன் ” ஹிஸ்புல்லாவின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நேரடியாக நிதியளிக்கின்றது. ஆயுதங்கள் கொள்வனவு மற்றும் ஹிஸ்புல்லாவின் இராணுவப் பிரிவில் உள்ள செயல்பாட்டாளர்களுக்கு பணம் செலுத்துதல் உட்பட பல நடவடிக்கைகள் இந்த வங்கியூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *