ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரி அசுலே இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்புக்கிணங்க இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒட்ரி அசுலே எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒட்ரி அசுலேவின் இந்த மூன்று நாள் பயணத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.
இதனை தொடர்ந்து, இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவுக்கிடையிலான 75 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்விலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
மேலும், இலங்கையில் உள்ள உலக பாரம்பரிய தளங்களையும் ஒட்ரி அசுலே பார்வையிட உள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.