குருநாகல் நகரிலிருந்து தம்புள்ள ஊடாக ஹபரணை வரை புதிதாக 85 கிலோ மீற்றர் தூரம்கொண்ட ரயில் பாதையொன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மாத்தளை மாவட்டத்திலுள்ள தம்புள்ள நகரம் கடந்த 20 வருட காலத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் நகரமாகவும் மாறியுள்ளது.
இங்குள்ள பொருளாதார அபிவிருத்தி மையத்தை அடிப்படையாகக் கொண்டு இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் பொருளாதார அபிவிருத்தி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரவு பகலாக நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் காய்கறிகள் உட்பட பல்வேறு உணவு வகைகள் தம்புள்ள நகருக்குக் கொண்டுவரப்பட்டு நாட்டின் நாலா பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றன. எனினும் தம்புள்ளைக்குச் செல்வதற்கு ரயில் மார்க்கம் ஒன்று இதுகாலவரை இருக்கவில்லை.
இங்குள்ள வர்த்தக முயற்சிகளை மேலும் விரிவு படுத்தும் நோக்கிலேயே குருநாகலில் இருந்து கலேவெல, மற்றும் தம்புள்ள ஊடாக ஹபரணை வரை ரயில் பாதையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு 60 கோடி ரூபாவை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது. இப்புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் குருநாகலுக்கும் தம்புள்ளைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் 20 ரயில் நிலையங்களை அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.