முல்லைத்தீவிலிருந்து கிறீன் ஓஷன் கப்பல் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை புல்மோட்டைக்கு கூட்டிவரப்பட்ட 514 பேரில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் கப்பலில் வந்துகொண்டிருந்த போது மரணமானார். மற்றவர் புல்மோட்டை கள வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட போது உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் பெயர்கள் வருமாறு;
1. குகதாஸன் ஒபிசன், (வயது 03), குருநகர், யாழ்ப்பாணம்.
2. தினேஷ்யாழினி, (வயது 03), புதுமாத்தளன் இவர்களையும் சேர்த்து நேற்று புதன்கிழமை காலை 9.00 மணிவரை முல்லைத்தீவில் இருந்து கப்பல் மூலம் புல்மோட்டைக்கு மார்ச் 16 தொடக்கம் ஏப்ரல் 14 வரை கூட்டி வரப்பட்ட 5,456 பேர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என்று மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கள நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் 16, 20, 22, 26, 28, 30 ஆகிய திகதிகளிலும் ஏப்ரல் மாதத்தில் 4, 9, 13, 14 ஆகிய திகதிகளிலும் 11 தடவைகள் கப்பல் மூலம் முல்லைத்தீவில் இருந்து காயமடைந்தவர்கள் புல்மோட்டைக்குக் கொண்டுவரப்பட்டனர். அவர்களில் 27 சதவீதத்தினருக்கே புல்மோட்டை கள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 1,806 பேர் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்த முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பதவியா ஆஸ்பத்திரிக்கு 2,918 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். புல்மோட்டை கள வைத்தியசாலையில் 48 ஆண்கள், 48 பெண்கள், 13 சிறுவர்கள், 16 சிறுமிகள் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பதவியா ஆஸ்பத்திரியில் 314 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 115 பேர் காயமடைந்தவர்களும் நோயாளர்களும் ஆவர்.