மலையகம்

மலையகம்

மலையகப் பிரதேசங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் -பூகற்பவியலாளர் எச்சரிக்கை

earth-slip.jpg தென்மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி கிடைக்கும் காலங்களில் மலையகப் பிரதேசங்களில் மண்சரிவுகள் ஏற் படக் கூடிய அபாயம் நிலவுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பூகற்பவியலாளர் சமந்த போகாபிட்டிய நேற்றுத் தெரிவித்தார். இப்பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறும் காலங்களில் மலையகப் பிரதேசங்களிலும் மலை சார்ந்த பகுதிகளிலும் வாழும் மக்கள் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும், கம்பஹா, களுத்துறை, கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் மலை சார்ந்த பகுதிகளிலும் வாழும் மக்கள் இம்மழை வீழ்ச்சி காலங்களில் விழிப்பாக இருப்பது அவசியம் என்று குறிப்பிட்ட அவர் இப்பிரதேசங்களில் மண் சரிவு அபாயமுள்ள பல இடங்கள் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தென் மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி மே மாதம் முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையும் கிடைக்கப் பெறும் என்றும் அவர் கூறினார்.

இம்மண்சரிவு தொடர்பாக ஆய்வு செய்யவென நேரில் சென்று திரும்பிய பூகற்பவியலாளர் சமந்தா போகபிட்டிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதேநேரம், நோட்டன் பிரிஜ், விதுளபுர மண்சரிவு இயற்கையாகவே ஏற்பட்டிருக்கிறது. ஆனால், மண் சரிவுக்கு உள்ளான பிரதேசத்திற்கு மேலாக அமைந்திருக்கும் வீதியில் சேருகின்ற தண்ணீரை, இப்பிரதேசத்திற்கு அருகில் கீழாக ஓடிக்கொண்டிருக்கின்ற களனி கங்கையுடன் ஒழுங்கு முறையாக சேர்வதற்கு ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தால் இந்த அனர்த்தத்தைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இம்மண் சரிவு ஏற்பட்ட பிரதேசத்திற்கு இரு பக்கத்திலும் சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திற்கு ஒரே விதமான மண் அமைப்பே காணப்படுகின்றது. அதன் காரணத்தினால் இப்பிரதேசத்திலுள்ள ஐந்து வீடுகளில் வாழுகின்ற மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதற்கும் சிபார்சு செய்யப்பட்டிருப்பதாகவும் அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

விதுலிபுர மண்சரிவுக்கு மேலதிகமாக வேறு வேறு இடங்களிலும் சிறுசிறு மண் சரிவுகள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இப்பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.

அதனால் மலையகத்திலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் மண் சரிவுகள் மேலும் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகின்றது என்றும் அவர் கூறினார்.

நோட்டன் பிரிட்ஜில் மண்சரிவு – 6 பேர் மரணம்

earth-slip.jpgஹட்டன் – நோட்டன்பிரிட்ஜ் பகுதியில் நேற்றுக் காலை (20) ஏற்பட்ட மண் சரிவில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும், இரண்டு உறவினர்களுமே இவ்வாறு வீட்டுடன் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தனர். நோட்டன்பிரிட்ஜ் – விதுலிபுர, கெஹெல் கமுக்கந்த கிராமத்திலுள்ள வீடொன்றே நேற்றுக் காலை ஏழு மணியளவில் ஏற்பட்ட மண் சரிவில் புதையுண்டதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் டபிள்யூ. எம். குணவர்தன தெரிவித்தார்.

இறந்தவர்களுள் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் இரண்டு சிறுவர்களும் அடங்குவர். கணவன், மனைவி, இரு பிள்ளைகள் மற்றும் இரு உறவினர்களுமே உயிரிழந்துள்ளனர். இவர்களது சடலங்கள் நேற்றுக் காலை மீட்கப்பட்டு வட்டவளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இறுதிக் கிரியைகளை அரச செலவில் நடத்துவதற்குப் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலர் தெரிவித்தார்.

அதே நேரம், மண் சரிவு ஏற்படுமென இனங் காணப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து மக்களை வெளியேறுமாறும் அவர் கேட்டுக் கொண்டு ள்ளார். உடனடியாக வெளியேறி உறவினர் வீடுகளிலேனும் பாடசாலைகளிலேலும் தங்கியிருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.மழை தொடர்ந்து நீடித்தால் மகாவலி கங்கை பெருக்கெடுக்கும் வாய்ப்பு உள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் தெரிவித்தார். இதனால் மக்களை அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய மாகாணத்தில் தகவல் தொழிநுட்ப கல்வியறிவை மேம்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை

sarath-cp-cm.jpgமத்திய மாகாணத்தில் தகவல் தொழிநுட்ப கல்வியறிவை மேம்படுத்தும் நோக்கில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
 
இதன் முதல் கட்டமாக இந்த மாகாண மக்களின் தகவல் தொழிநுட்ப கல்வியை விருத்தி செய்யும் நோக்கில் கண்டி கெட்டம்பேயில் மத்திய நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார். இந்த நிர்மாணப்பணிகளுக்காக மத்திய மாகாண சபை 4 கோடி 50 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இது தவிர தகவல் தொழிநுட்ப துறையை முன்னேற்றும் நோக்கில் பல வேலைத்திட்டங்களை அமைச்சு திணைக்கள மட்டத்தில் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மற்றொருபுறம் இந்த நவீன தொழினுட்பத்தில் ஈடுபாடுள்ளவர்களுக்கு கணினி தொழினுட்ப பயிற்சி அளிக்கும் நோக்கில் பயிற்சித்திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி பிழைக்கும் மலையக அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்

sri-lanka-upcountry.jpgமலையக தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி பிழைக்கும் மலையக அரசியல்வாதிகளுக்கு நல்லதொரு பாடத்தை தொழிலாளர்கள் புகட்ட வேண்டுமென சுகாதார போஷாக்கு நலன்புரி பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் பசறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரதியமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்; வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸில் தொழிலாளர்களிடமிருந்து அறவீடு செய்யும் ஒருமாத சந்தாப் பணத்தை அனுப்புவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளப்படுகிறது. ஒருநாள் வேதனத்தை அனுப்ப வேண்டிய தேவை கிடையாது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதாரத் துறையில் மிகவும் பாதிப்படைந்து காணப்படுகின்றனர். ஒருசில மலையக அரசியல்வாதிகள் தெரிவிப்பது போன்று ஒருநாள் வேதனத்தை வழங்கக் கூடிய நிலையில் தொழிலாளர்கள் தற்போது இல்லை. மிகவும் சிரமத்திற்கு மத்தியிலே தொழிலாளர்கள் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் அவர்களுடைய வேதனத்திலிருந்து ஒருநாள் சம்பளத்தை பாதிக்கப்பட்டுள்ள வன்னி மக்களுக்கு அனுப்ப வேண்டுமென ஒரு சில மலையக அரசியல்வாதிகள் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மலையக தலைமையென தம்பட்டம் அடிப்போர் இன்னும் தொழிலாளர்களை சுரண்டிப் பிழைக்கும் வேலையிலிருந்து விடுபடவில்லை. இவ்வாறான வேலையில் ஈடுபடும் மலையக அரசியல்வாதிகளுக்கு நல்லதொரு பாடத்தை புகட்ட வேண்டும் என்பதற்காகவே எமது சங்கத்தின் தொழிலாளர்களின் வேதனத்திலிருந்து அறவீடு செய்யும் ஒருமாதச் சந்தாப் பணத்தை வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டோம். தொழிலாளர்களிடமிருந்து ஒருநாள் சம்பளத்தை அறவீடு செய்வதை பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்று பௌத்த அமைப்பு. முஸ்லிம் அமைப்பு அதேபோல் தமிழ்மக்களும் உதவி வருகின்றனர். அரசாங்கமும் முடிந்தளவு மக்களுக்கு நிவாரணங்களை வழங்குகிறது. அதற்குமேலாக வெளிநாட்டு சமூக அமைப்புகளும் உதவிவருகின்றன. இம்மக்களுக்கு மலையக மக்களுடைய பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதாலே மலையக மக்கள் சார்பாக அவர்களுடைய சந்தாப்பணத்தை அனுப்பிவைக்கிறோம்.

ஹட்டன் தோட்டத்தில் குளவி கொட்டி 13 பெண்கள் ஆஸ்பத்திரியில்

sri-lanka-upcountry.jpgதோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது குளவி கொட்டியதால் 13 பெண்கள் டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹட்டன் – அபோஸ்லி தோட்டத்தைச் சேரந்த பெண்களே இவ்வாறு குளவி கொட்டலுக்கு இலக்காகியுள்ளனர்

தேயிலை விலை நான்கு வீதத்தால் அதிகரிப்பு

sri-lanka-upcountry.jpgசர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் தேயிலை  விலை நான்கு வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் பெருந் தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம் ஜயரத்ன தெரிவித்தார்.

ஒரு கிலோ தேயிலையின் விலை கடந்த வாரம் 320.00 ரூபாவிலிருந்து 360.00 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தேயிலைக் கொலுந்து ஒரு கிலோவுக்கு 55.00 ரூபா முதல் 62.00 ரூபா வரை வழங்கப்படுவதாகவும் நாட்டின் தேயிலை உற்பத்தியன் அபிவிருத்திக்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவம் அமைச்சர் கூறினார்.

மலையக மக்களை வழிநடத்துவதற்கு கும்பகோணத்திலிருந்து புதிதாக ஒருவர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளார்

may-day.jpg
கும்பகோணத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒருவருக்கு உபதலைவர் பதவி வழங்கப்பட்டு மலையக மக்களை வழிநடத்த வேண்டுமென்ற பரிதாபகரமான நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவ முத்துலெட்சுமி தோட்டத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் தொழிற்சங்கங்களும் இணைந்து செயற்பட வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளின் சுவடுகளைப் பிரித்தெடுத்து அதன் மூலம் முதலாளித்துவம் தொழிலாளர்களின் முதுகில் சவாரி செய்து இலாபம் தேட முற்பட்டு வருகிறது. இவ்வாறான நரித்தந்திர நடவடிக்கைகளுக்குத் தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தொழிற்சங்கங்களும் துணைபோய்க் கொண்டிருக்கின்றன.

சாதாரண தொழிலாளர்களுக்கு 500 ரூபாவுக்கு குறையாத நாட்சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆனால், தோட்டத்தொழிலாளர்களுக்கு 200 ரூபா சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலதிக கொடுப்பனவு என்பது எல்லாம் வெறும் கண்துடைப்பேயாகும்.  மலையகத்தின் இளைஞர்களை வழிநடத்த தகுதிவாய்ந்த இளைஞர்கள் இல்லையா?

கும்பகோணத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு கூட உபதலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இனி இவரையும் தலைவராக ஏற்றுக்கொள்வது மலையக மக்களின் தலைஎழுத்து. இதேபோலத்தான் மலையகத்தில் மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்களைக் கொழும்பில் தெருக்களிலெல்லாம் தேடித்திரிய வேண்டியநிலை தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எமது முழுவாழ்க்கையையும் தோட்டத்தொழிலாளர்களினதும் மலையக மக்களினதும் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து கொண்டு சேவை செய்து வருவதை இலட்சியமாகக் கொண்டுள்ளோம்.

வெசாக் வார காலத்தில் ஏனைய மத உற்சவங்கள் நடைபெறக்கூடாது என்பது அரசியலமைப்புக்கு முரணானது – நுவரெலியா இந்து கலாசாரப் பேரவை

sri-lanka-upcountry.jpgபௌத் தர்களின் வெசாக் வாரத்தையொட்டிய காலப்பகுதியில் ஏனைய மதத்தவரின் உற்சவங்கள் நடைபெறக்கூடாதென்ற மனோபாவம் சகல மதங்களையும் பாதுகாத்து சகல மதத்தவர்களின் உணர்வுகளையும் மதிக்கும் எமது அரசியலமைப்பு சாசனத்திற்கு முரணானது.

இனவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இடை நிறுத்தம் செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிப்பதுடன் இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்’. இவ்வாறு நுவரெலியா இந்துக் கலாசாரப் பேரவையின் தலைவரும், நுவரெலியா மாநகரசபையின் உறுப்பினருமான இரா.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; பரஸ்பர புரிந்துணர்வோடு செயல்படுகின்ற ஒரே மாதிரியான கலாசார வழிபாட்டு முறைகளைக் கொண்ட பௌத்த, இந்து சமய உற்சவங்களின் போது இத்தகைய முரண்பாடு தோன்றியிருப்பது அமைதியை விரும்புகின்ற பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியிருக்கின்றது.

எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாவிட்டால் முழு நாட்டிற்குமே இது பாரிய பாதிப்புக்கு வழி கோலுவதாக அமையும்.

இவ்வாறு ஒரு மதம் சார்ந்த திருவிழாக்களைத் தடைசெய்து இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் காணப்படும் பரஸ்பர நல்லிணக்கத்திற்குப் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன் நாட்டில் அமைதியின்மை ஏற்படக்கூடியது.

ஒரு தேசிய பிரச்சினையாகவும் மாறிவிடலாம். இது தொடர்பாக ஜனாதிபதி கலாசார அமைச்சர் தேசிய நல்லிணக்க அமைச்சரும் மதத்தலைவர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் இறக்குவானை நகரின் முக்கியஸ்தர்கள் போன்றோர் கலந்துரையாடி ஒரு சுமுகமான தீர்வை ஏற்படுத்தி குறிப்பிட்ட ஆலயத்தின் உற்சவத்தினை எந்தவித தடையுமின்றி நடத்தக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு நுவரெலியா மாநகரசபையில் தீர்மானம்

sri-lanka-upcountry.jpg அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருக்கும் உள்ளூராட்சிசபை சட்டமூலத்திற்கு எதிர்புத் தெரிவித்து நுவரெலியா மாநகரசபையின் ஏப்ரல் மாதத்திற்கான பொதுக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்ன தலைமையில் கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகரசபை உறுப்பினர் எல்.நேருஜி மேற்படி தீர்மானத்தை சபைக்கு சமர்ப்பித்தார்.

அவர் அங்கு உரையாற்றுகையில்;

அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருக்கும் உள்ளூராட்சிசபை சட்டமூலம் அமுலுக்கு வந்தால் சிறுபான்மையினரதும் சிறுபான்மை கட்சிகளினதும் பிரதிநிதித்துவம் குறையும். குறிப்பாக நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை போன்ற மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் மாத்திரமல்லாமல் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவங்களும் குறைவடையும். எனவே உள்ளூராட்சி சபைகளும் மாகாணசபைகளும் இந்த புதிய சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் இந்த புதிய சட்டட மூலத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்ற போது மாகாண சபைகளின் தீர்மானத்துடன் மீண்டும் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே மாகாணசபைகளும் இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்.

கடந்த 1978 ஆம் ஆண்டிலிருந்து நுவரெலியாவில் வருடம் தோறும் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்டுவந்த ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகள் அரசியல் தலையீட்டால் இம் முறை சிறப்பாக நடைபெறவில்லை. மலர்க் கண்காட்சியை தவிர ஏனைய நிகழ்ச்சிகள் முறையாக நடைபெறவில்லை. ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகள் நடத்துவதற்கு நகரமுதல்வருக்கு சகல அதிகாரங்களும் வழங்கவேண்டும்.

நுவரெலியாவில் காணிவேல் களியாட்ட விழாக்கள் நடத்துவதற்கு பாதுகாப்பு சூழ்நிலையை காரணம்காட்டி பொலிஸார் அனுமதிவழங்கவில்லை. ஆனால், பண்டாரவளையில் காணிவேல் களியாட்ட விழா நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நுவரெலியாவிற்கு வருகை தந்த உல்லாச பிரயாணிகள் அதிகமானோர் பண்டாரவளைக்குச் சென்றனர். இதனால், நுவரெலியா வாழ் மக்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. எனவே எதிர்வரும் வருடங்களில் அரசியல் தலையீடு இல்லாமல் நகரமுதல்வர் சகல அதிகாரங்களையும் பெற்று சிறந்த முறையில் வசந்த கால நிகழ்வுகள் நடத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றார்.

இக்கூட்டத்தில் பிரதி நகர முதல்வர் கிருஷ்ணசாமி சந்திரசேகரன் உரையாற்றுகையில் ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகள் சிறந்த முறையில் நடத்தமுடியாமல் போனதற்கான காரணத்தை நகரமுதல்வர் பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலம் தெரிவிக்கவேண்டும்.

வழமையாக ஏப்ரல் வசந்தகாலம் தற்காலிக கடைகளை மாநகரசபைதான் வழங்கி வந்தது. ஆனால், இம்முறை வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் நகர அபிவிருத்தி அதிகார சபையினரும் தற்காலிக கடைகள் அமைத்து குத்தகைக்கு கொடுத்தனர். இதனால் மாநகர சபைக்கு கிடைக்கும் வருமானமும் இல்லாமல் போயுள்ளது. எனவே எதிர்வரும் வருடங்களில் இடையூறு செய்யாமல் வசந்த கால நிகழ்வுகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக்கூறினார்.

மஸ்கெலியா தோட்ட உத்தியோகத்தர் வேலை நிறுத்தம் தொடர்கிறது

sri-lanka-upcountry.jpgமஸ்கெலியா பகுதி தோட்டங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று (01) மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது.

உத்தியோகத்தர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் நுவரெலிய மாவட்டமெங்கும் தமது போராட்டத்தை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாத் அமரசிங்க தெரிவித்தார். இதுவரை, தோட்ட உத்தியோகத்தர்களின் கடமைகளைத் தொழிலாளர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால், சில தோட்டங்களில் உத்தியோகத்தர்களுக்கும், தொழிலாளர்க ளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படலாமென்பதால், தொழிலாளர்கள் தமது கடமையை மாத்திரம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவி க்கப்பட்டது.

உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பால், தொழிலாளர்களின் சம்பளத்தை உரிய வேளையில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. உத்தியோகத்தர்கள் தமக்குரிய ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்குமாறு கோரி கடந்த 29 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்