அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இலங்கையை பாராட்டும் மேனன்: தா.பாண்டியன்

sivashankar.jpgஇலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர மேனன் இலங்கை ராணுவ தளபதியை பாராட்டியுள்ளார். தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க அவர் எவ்வித பேச்சும் நடத்தவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார். கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோரை சந்தித்துப் பேசிய பாண்டியன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது பல ஆண்டுகளாக நடக்கிறது. இதற்கு இந்திய அரசு இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனால் ஏற்பட்ட உள்ளக் கொதிப்பையே சீமான் உள்ளிட்டோர் வெளிப்படுத்தினர்.

ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கொடுத்த புகாரை வைத்து போலீசார் விசாரிக்காமலேயே தேச விரோதமாக பேசியதாக அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது ஜனநாயக கேலிக் கூத்து.

இலங்கை தமிழர் கொல்லப்படுவதை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சட்டசபையிலும், அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் தலைமையிலான குழு பிரதமரை சந்தித்து வலியுறுத்தியும் இதுவரை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

காங்கிரஸ் செய்யும் தவறுகளுக்கு மத்திய அரசில் பங்கேற்றுள்ள திமுகவும் பொறுப்பேற்க வேண்டும். இலங்கை தமிழர் படுகொலைகளை ஐ.நா.சபைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

தற்போது இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர மேனன் இலங்கை ராணுவ தளபதியை பாராட்டியுள்ளார். தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க அவர் எவ்வித பேச்சும் நடத்தவில்லை. இதில் இருந்து டெல்லியில் உள்ள அதிகாரிகள் எவ்வளவு அடிமையாக உள்ளனர் என்பது தெளிவாகிறது.

இலங்கை தமிழர்களை காப்பாற்றுவதிலும், தமிழக மீனவர்களை பாதுகாப்பதிலும் மத்திய அரசில் உள்ளவர்கள் பேசாமல் இருக்கலாம். ஆனால் தமிழக தலைவர்கள் கண்டிப்பாக பேசியாக வேண்டும். மத்திய அரசில் பங்கு வகிக்கும் திமுக இதிலிருந்து தப்பிக்க முடியாது என்றார் பாண்டியன்.

மேனன் என்ன; கடவுளே வந்தாலும் தற்போதைய நிலைமைக்கு தீர்வில்லை – ரணில்

ranil-2912.jpgஇந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயம் காலம் தாழ்த்தப்பட்ட நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் இன்று உருவாகியுள்ள நெருக்கடியான நிலைகளை நோக்கும் போது இந்தியா என்ன கடவுளே வந்தாலும் தீர்வுகாண முடியுமாவென்பது சந்தேகமே எனவும் தெரிவித்தார். இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ் சங்கர் மேனன் இலங்கை வந்துள்ளார். அவரைச் சந்தித்துப் பேசினீர்களா என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிடம்  வெள்ளிக்கிழமை கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமையிரவு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. இதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சிவ்சங்கர் மேனன் விஜயம் தொடர்பாகவும் அவரைச் சந்தித்தீர்களாவெனவும் கேள்வி எழுப்பிய போது ரணில் விக்கிரம சிங்க கருத்துத் தெரிவித்தார். இந்திய அரசு குறிப்பிட்ட காலமாக இலங்கை விவகாரத்தில் மௌனப் போக்கையே கடைப்பிடித்து வந்தது. அண்மையில் தமிழகத்தின் அழுத்தத்தைக் கூட புதுடில்லி பெரிதாக அலட்டிக்கொண்டதாகவும் தெரியவில்லை. புதுடில்லி தலையிடும் என எதிர்பார்க்கப்பட்ட காலத்தில் எதுவுமே நடைபெறவில்லை. ஆனால், காலம் கடந்த நிலையிலேயே சிவ்சங்கர் மேனன் வந்துள்ளார். எனக்கு தான் தெரிந்தவர் நல்லவர். சந்திக்க விருக்கிறேன்.

நாட்டில் இன்று நடப்பவற்றைப் பார்க்கும் போது அடுத்த நிமிடம் என்ன நடக்குமோவென அஞ்ச வேண்டியுள்ளது. தற்போதைய நிலைமைகளை நோக்கும் போது சிவ்சங்கர் மேனனாலோ வேறு எவராலுமோ பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமா என்பதே கேள்வியாகவுள்ளது. ஏன் கடவுளே வந்தால் கூட நாட்டுக்கு அமைதியும் சமாதானமும் கிட்டுமா என்பது சந்தேகமே எனவும் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.

ஏ-9 வீதியில் கண்ணி அகற்றும் பணிகள் ஆரம்பம்

_army.jpgஏ-9  வீதியில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார். ஏ-9 வீதியில் போக்குவரத்துப் பணிகளை துரிதமாக ஆரம்பிக்கும் நோக்குடன் மிதிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதையின் இருபக்கமும் உள்ள 50 அடி வரையான பகுதியிலுள்ள நிலக்கண்ணிகள் அகற்றப்பட வுள்ளதோடு நிலக்கண்ணி அகற்றும் பணிகளை 2 வாரங்களுக்குள் பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கண்ணி அகற்றும் பணிகள் முடிவடைந்ததும் வீதி புனரமைக்கும் பணிகளை ஆரம்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள மீட்கப்பட்ட பகுதிகளில் நிலக்கண்ணி அகற்றும் பணிகள் இடம்பெறுவதாக இராணுவப் பேச்சாளர் கூறினார்.

ஒபாமா 20-ந்தேதி பதவி ஏற்பு; ஜார்ஜ்புஷ் கடைசி உரை

world_news.jpgஅமெ ரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா வருகிற 20-ந்தேதி அதிகாரபூர்வமாக பதவி ஏற்கிறார். இப்போது அதிபராக இருக்கும் ஜார்ஜ்புஷ் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ஓய்வு பெறுகிறார்.ஒபாமா பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

அமரிக்காவில் அதிபர் பயணம் செய்வதற்கு என்றே தனி விமானம் உள்ளது. “ஏர் போர்ஸ்-1” என்று இந்த விமானம் அழைக்கப்படுகிறது. ஜார்ஜ் புஷ் “ஏர் போர்ஸ்-1” விமானத்தில் அதிபர் என்ற முறையில் நேற்று கடைசி பயணத்தை மேற்கொண்டார்.

நார்வோக் பகுதிக்கு சென்ற புஷ் ஏர் போர்ஸ்-1 விமானத்தில் நேற்று வாஷிங்டன் திரும்பினார்.40-நிமிட நேரம் பயணம் செய்து விட்டு கீழே இறங்கிய புஷ் அந்த விமானம் ஊழியர்களுடன் கை குலுக்கி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

20-ந்தேதி ஓய்வு பெறுவதையொட்டி புஷ் வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு டெலிவிஷன் மூலம் உரை நிகழ்த்தினார். உணர்ச்சிபூர்வமான அந்த உரையில் புஷ் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்தி இருக்கிறேன்.அமெரிக்காவில் மீண்டும் அல்கொய்தா தாக்குதல் நடப்பதையும் தடுத்திருக்கிறேன் என்று தனது சாதனைகளை விளக்கி கூறினார்.

அமெரிக்காவுக்கு ஆபத்து இன்னும் முழுமையாக அகலவில்லை.மீண்டும் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். அடுத்த அதிபராக வரும் ஒபாமா அமெரிக்க மக்களுக்கு நிச்சயம் நம்பிக்கையூட்டும் வகையில் செயல்படுவார். அவருக்கும் அவரது மனைவி,2-மகள்கள் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் புஷ் அப்போது தெரிவித்தார்.

இந்திய தொலைக்காட்சி சேவைகளுக்கு தடைவிதிக்க பாகிஸ்தான் திட்டம்

laptop.jpgபாகிஸ் தானில் இந்திய தொலைக்காட்சி சேவைகள் ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட வேண்டுமென பாகிஸ்தான் பாராளுமன்ற சபை பரிந்துரை செய்துள்ளது. செய்தி ஒலிபரப்புத் துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இக் கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் ஹெரி ரெகிமான் கலந்து கொள்ளவில்லை. பாகிஸ்தான் தொலைக்காட்சி சேவைகளை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கு இந்திய அரசு தடை செய்துள்ள நிலையில், பாகிஸ்தானிலும் இந்திய தொலைக்காட்சி சேவைகளின் ஒளிபரப்புக்கு தடை விதிக்க வேண்டுமென எம்.பி.யான தாரிக் அஜீம் கோரியுள்ளார்.

இதேவேளை, மற்றொரு எம்.பி.யான ஹாஜி அஜீல் தெரிவிக்கையில்; இந்தியாவின் பொழுதுபோக்கு சேவை தொலைக்காட்சிகளைத் தான் தடை செய்ய வேண்டும். செய்திச் சேவைகளைத் தடைசெய்தால் இந்தியாவின் பிரசாரங்களை அறியமுடியாதெனத் தெரிவித்தார். ஆனாலும், மின்னியல் மற்றும் தொலைத் தொடர்புகள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் ஆலோசித்து இந்திய தொலைக்காட்சி சேவைகளிற்கு தடை விதிக்கப்படுமென ஊடகத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

பெருந்தோட்டத்துறையில் புதிய தலைமைத்துவம் உருவாக இத்தேர்தலை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தவேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க

tissa.jpgமலையக பெருந்தோட்டத்துறையில் புதிய தலைமைத்துவம் உருவாக இத் தேர்தலை ஒரு தேசிய சந்தர்ப்பமாக பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க நுவரெலியா புதிய நகரமண்டபத்தில்  நடைபெற்ற மத்திய மாகாண சபையின் நுவரெலியா மாவட்ட தேர்தல் செயல் திட்டம் சம்பந்தமாக விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பொழுது வேண்டுகோள் விடுத்தார்.  இக்கூட்டத்தில் திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்தும் உரையாற்றுகையில்; மலையக பெருந்தோட்ட தலைவர்களான ஆறுமுகம் தொண்டமான், சந்திரசேகரன் போன்றவர்கள் ஐக்கிய மக்கள் முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டாலும் தொழிலாளர்கள் எமது யானை சின்னத்திற்கே வாக்களித்து பழக்கப்பட்டவர்கள்.

நடைபெறவிருக்கும் மாகாணசபை தேர்தலை சாதாரண மாகாணசபை தேர்தலாக நினைக்காமல் பொதுத் தேர்தலாக நினைத்து அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு  செய்யவேண்டும். சிரச நிலையத்தை தாக்கியதோடு சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவையும் படுகொலை செய்ததற்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும்.இந்நாட்டில் தற்பொழுது ஜனநாயகம் நீங்கி சர்வாதிகாரம் தலைதூக்கி வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியகட்சி வெற்றிபெற வேண்டும். அரசாங்கத்தின் அராஜகத்திற்கு எதிராக நாம் நடத்திய கண்டன எதிர்ப்பு கூட்டங்களில் விக்கிரமபாகு உட்பட என்றும் எம்முடன் சேர்ந்துகொள்ளாத பல கட்சி தலைவர்கள் இப்போது இணைந்துள்ளனர். எனவே இந்நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சி வருவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும். எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் பொதுதேர்தல் ஒன்று வரலாம். அத்தேர்தலிலும் ஐ.தே.க. வெற்றிபெற வேண்டும் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

தமிழக எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும்: திருமா

thirumavalavan-1601.jpgஇலங்கையில் உடனே போரை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையை அடுத்த மறைமலைநகரில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். உடல் நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமென்று திருமாவளவனிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ’’கிளிநொச்சியை கைப்பற்ற நினைத்த இலங்கை ராணுவம் பின்வாங்கும் நிலையில் இருந்தபோது அவர்களுக்கு இந்திய அரசு கடைசி நேரத்தில் ஆயுதங்களையும் படை வீரர்களையும் வழங்கி உதவியதால்தான் அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற முடிந்தது.

இந்திய அரசு இப்படி தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக பச்சைத் துரோகம் செய்து வருகிறது. எனவேதான் வேறு வழியின்றி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினோம். இது தமிழக முதல்வருக்கோ, தமிழக அரசுக்கோ எதிரானது அல்ல. இதனால் முதல்வருக்கு சங்கடம் ஏற்பட்டால் அதற்காக வருந்துகிறேன். முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் ஈழ விடுதலை ஆதரவாளர்களும் என்னுடைய போராட்டத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனை கைவிடுமாறு கூறுவதை விட அனைத்து தலைவர்களும் இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஈழ விஷயத்தில் இந்திய அரசை நிர்ப்பந்தப்படுத்த கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட  ஒருமனதான தீர்மானத்தின்படி தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும்’’ என்றார்.

இராமநாதபுரம் விடுவிக்கப்பட்டுள்ளது

truck.jpgஇராணுவத்தின் 57வது படையணியினர் புலிகளின் பிடியிலிருந்து இராமநாதபுரத்தை விடுவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 571 மற்றும் 572 வது படைப் பிரிவுகள் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மேற்கொண்ட தாக்குதல்களை அடுத்தே இன்று பிற்பகல் இந்தப் பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகருக்கு அடுத்ததாக முக்கிய புலிகளின் தளங்களில் ஒன்றாக இராமநாதபுரம் விளங்கி வந்தது. இராமநாதபுரம் படையினரால் விடுவிக்கப்பட்டதையடுத்து புலிகள் இயக்க உறுப்பினர்கள் முத்தையன்கட்டு காட்டுப் பகுதிகளுக்குள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா- நெடுங்கேணி பயணிகள் பஸ் சேவை வெள்ளி ஆரம்பமானது

bus-17o1.jpgநெடுங்கேணி பிரதேசம் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து வவுனியா  நெடுங்கேணியிடையேயான பயணிகள் பஸ் சேவை வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இப்பயணிகள் பஸ் சேவை முன்னர் புலிகளின் சோதனைச் சாவடியாயிருந்த ஓமந்தை மற்றும் புளியங்குளம் ஊடாக நடத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல – ஜெயலலிதா –

jayalalitha-1701.jpgவிடுதலைப் புலிகள்தான் இலங்கை தமிழர்களின் ஒரே பிரதிநிதி என்பதை நாங்கள் நம்பவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். சென்னையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் நிருபர்களுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:

கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக திருமாவளவன் 3வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவரை உங்கள் கூட்டணி கட்சியினரான மதிமுக, சிபிஐ, சிபிஎம் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவளித்துள்ளனர். இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

ஜெயலலிதா: இலங்கை பிரச்சனையைப் பொறுத்தவரை எங்களுக்கென்று தனிக்கொள்கை உண்டு. எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் இருந்தால், அவர்கள் அனைவருக்குமே எல்லாப் பிரச்சனையிலும் ஒருமித்த கருத்து இருக்க முடியாது. அவரவருக்கும் ஒரு கொள்கை உண்டு. இந்த உண்ணாவிரதம் கருணாநிதியும் திருமாவளவனும் பேசி வைத்துக் கொண்டு நடத்தும் நாடகம்.

கேள்வி: இலங்கை விஷயத்தில் உங்கள் கட்சியின் நிலை என்ன? மத்திய அரசு இதில் தலையிட வேண்டுமா? கூடாதா?

ஜெயலலிதா: இதுகுறித்து நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மற்ற நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சனையில் எந்த நாடும் தன்னிச்சையாக தலையிட முடியாது. இலங்கை பிரச்சனையைப் பொறுத்த அளவில் அங்குள்ள தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும். கௌரவமான வாழ்வு அமைய வேண்டும். சிங்கள மக்களைப் போலவே சுதந்திரமான உரிமைகளோடு தமிழ் மக்களும் வாழவேண்டும் என்பது தான். ஆனால் பயங்கரவாதத்தை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இதை பல நாடுகளும் அறிவித்துள்ளன. பல நாடுகளில் தடையும் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கான ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள்தான் என்பதை நாங்கள் நம்பவில்லை.

கேள்வி: போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறார்களே?

ஜெயலலிதா: கருணாநிதியும் திருமாவளவனும் தொடர்ந்து போர் நிறுத்தம் என மக்களை ஏமாற்றுகிறார்கள்.

கேள்வி: 1983ம் ஆண்டில் எம்ஜிஆர் விடுதலைப் புலிகளை முழுமையாக ஆதரித்தாரே?

ஜெயலலிதா: அப்போதிருந்த நிலை வேறு. இப்போதுள்ள நிலைமை வேறு.

கேள்வி: ஈழத் தமிழர்கள் அங்கு கொல்லப்பட்டு வருகிறார்களே?

ஜெயலலிதா: ஈழம் என்ற ஒரு நாடே இல்லை. அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள்தான். எங்கு யுத்தம் நடந்தாலும் அங்கு அப்பாவி பொதுமக்கள் சிலர் கொல்லப்படுவார்கள். இலங்கையில் தமிழர்களை கொல்ல ராணுவம் எண்ணவில்லை. போர் நடக்கும் போது அப்பாவிகளும் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கு அல்ல. இப்போது இலங்கையில் என்ன நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பான இடம் தேடி செல்ல முடியவில்லை. அவர்களை புலிகள் பிடித்து வைத்து, ராணுவத்திற்கு முன் கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே விடுதலைப் புலிகள் நினைத்தால், அப்பாவித்தமிழர்களை சாவிலிருந்து காப்பாற்ற முடியும்.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற பிரச்சனையை மறைப்பதற்காகத்தான் இந்த நாடகமா?

ஜெயலலிதா: ஆமாம். நிச்சயமாக அதுதான் காரணம். சத்யம் என்கிற தனியார் நிறுவனத்தில் ரூ. 7,000 ரூபாய் மோசடிக்கே அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது. போலீசார் ஐபிசியின் கீழ் வழக்குப்பதிவு செய்து முன்னாள் தலைவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் அரசு பணம் எதையும் களவாடவில்லை. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் இந்திய அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் மீது வேகமாக நடவடிக்கை எடுத்தவர்கள் இதில் தொடர்புடைய மத்திய அமைச்சர் மீதோ, அதற்கு உடந்தையானவர்கள் மீதோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

கேள்வி: சத்யம் நிறுவனத் தலைவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் மத்திய அமைச்சர் ராஜா ஒப்புக் கொள்ளவில்லையே?

ஜெயலலிதா: உங்கள் கேள்வியே தவறு. ஏற்கனவே சந்தனக்கடத்தல் கொள்ளையன் உட்பட பலர் தவறு செய்தார்களே? அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகா அரசு நடவடிக்கை எடுத்தது?

கேள்வி: சத்யம் நிறுவன ஊழலில் அரசியல்வாதிகளும் உடந்தை என சொல்லப்படுகிறதே?

ஜெயலலிதா: யாராக இருந்தாலும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் என்னுடைய கேள்வி என்பது தனியார் நிறுவனத்தின் ரூ. 7,000 கோடிக்கே நடவடிக்கை எடுத்த அரசு ஒரு லட்சம் கோடி அரசுப் பணம் முறைகேட்டின்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான்.

கேள்வி: அதிமுக கூட்டணிக்கு பாமகவுக்கு அழைப்புண்டா?

ஜெயலலிதா: நிச்சயம் எங்கள் கூட்டணி மேலும் வலுப்பெறும். போகப் போக அது உங்களுக்குத் தெரியும்

கேள்வி: பாஜக உங்கள் அணிக்கு வருமா?

ஜெயலலிதா: ஏற்கனவே இதற்கு பதிலளித்து விட்டேன். வீணாக என்னை வம்புக்கு இழுக்க முடியாது. என்னை யாரும் கோபப்படுத்த முடியாது.

கேள்வி: வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும் தேர்தல் வருமா? நீங்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?

ஜெயலலிதா: நான் ஏற்கனவே எம்எல்ஏ மற்றும் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை.

கேள்வி: சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வருமா?

ஜெயலலிதா: சட்டமன்றத்துக்கும் தேர்தல் எப்படியாவது வரும். வரவழைப்போம். எப்படியாவது அது வரும்வரை ஓயாது செயல்படுவோம். ஏனென்றால் நாடு விடுதலை அடைந்த பிறகு இந்த அளவுக்கு மிக மோசமான ஊழலாட்சி தமிழகத்தில் நடந்ததில்லை. வரலாறு காணாத ஊழல் ஆட்சியாக திமுக ஆட்சி நடக்கிறது. முதல்வரும் செயல்படவில்லை. கையாலாகாத்தனம், நிர்வாக திறமையின்மை தினமும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு குடும்பம்… குடும்பம் என்றும் சொல்ல மாட்டேன். ஒரு வன்முறை கும்பல் தமிழகத்தையே வேட்டை காடாக்கி வருகிறது. நிர்வாகத்தில் துளியும் அக்கறை இல்லாமல் தமிழகத்தை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த குடும்பத்தின் ஆட்சியை அகற்றி அழிவுப் பாதையிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு என்ன வழியோ அதற்கான வேலைகளில் நாங்கள் ஈடுபடுவோம். திமுக ஆட்சியை அகற்றி நிச்சயம் எங்கள் இலக்கை அடைவோம் என்றார் ஜெயலலிதா.

நன்றி: வன் இந்தியா