அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் தங்கியிருந்த நோயாளர்கள் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டுள்ளனர்.

redcrose2801.jpgமுல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் தங்கியிருந்து நோயாளர்களில் ஒரு தொகுதியினர் அழைத்துவரப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் (29) இவர்களை மீட்டுள்ளதாக கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின அமைப்பின் பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்துளளார்.

விடுதலைப் புலிகளுடனும் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து குறித்த இந்த 226 நோயாளர்களையும் போர் தணிந்திருந்த சிறிய இடைநேரத்தில்  அழைத்துவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மீட்கப்பட்ட நோயாளர்களில் 50 சிறுவர்கள் அடங்கியுள்ளதாகவும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த நோயாளர்களை அழைத்துவருவதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கள் பல தடவைகள் மேற்கொண்டிருந்த போதிலும் அது கைகூடவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது

சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலைய அலுவலகத்தை சுற்றிவளைத்த மாணவர்கள் கைது

சென்னை உயர் கல்வி பயிலும் மாணவர்களில் சிலர் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டவேளையில் இந்திய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள்; இன்று முற்பகல் இலங்கை உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தை; சுற்றி வளைக்க முற்பட்டுள்ளதாக சென்னையிலுள்ள பிரதி உயர் ஸ்தானிகர் பி.எம். ஹம்சா தெரிவித்தார். இதனையடுத்து 35 மாணவர்களை பொலிசார் கைதுசெய்ததாக பிரதி உயர் ஸதானிகர் குறிப்பிட்டார்.

அத்துடன் சென்னையில் அமைந்திருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மாநில அதிகாரிகள் தற்போது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவித்துள்ள அவர் இது குறித்து தமிழ் நாடு மாநில பொலிஸ்மா அதிபருடன் தாம்; இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கைக்கான பிரதி உயர் ஸ்தானிகர் ஹம்சா மேலும் தெரிவித்தார்.

முத்துக்குமார் உடலை அடக்கம் செய்வதை எதிர்த்து மாணவர்கள் போர்க்கொடி

muthukumar-30011.jpgமுத்துக்குமாரின் குறிக்கோள் நிறைவேறும்வரை அவரது உடலை அடக்கம் செய்ய விடமாட்டோம் என மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இன்று காலை 10 மணிக்கு முத்துக்குமாரின் உடல் அடக்கம் செய்யப்படுவதாய் இருந்தது. ஆனால் தமிழகமெங்கிலும் இருந்து மருத்துவ,சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி மாணவர்கள் வந்து முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதால் இன்று மாலை உடல் அடக்கம் செய்யலாம் என்று முடிவெடுத்தனர் அரசியல்வாதிகள்.

முத்துக்குமார் தனது கடைசிக்கடிதத்தில், ‘என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும்,முத்துக்குமார் உடல் அடக்கம் செய்வதை பொறுத்தவரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அரசியல்வாதிகள் தலையிடாதீர்கள் என்று சொல்லி வருகின்றனர். இதனால் முத்துக்குமாரின் உடல் அடக்கம் வரும் ஞாயிற்றுக் கிழமைதான் நடக்கும் என்று தெரிகிறது.

முத்துக்குமார் குடும்பத்துக்கு ரூ. 2லட்சம் நிதியுதவி

muthukumar.jpgஇலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க கோரி தீக்குளித்து உயர் நீத்த இளைஞர் முத்துக்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இதற்கான அறிவிப்பை இன்று அவர் வெளியிட்டார். இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில், முத்துக்குமார் என்ற வாலிபர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

தீக்குளித்து இறப்பதை யாராலும் ஏற்க முடியாது. இது உணர்ச்சி வசப்பட்டு எடுக்கக் கூடிய செயல். முத்துக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு முதல்வர் ஒப்புதலுடன் ரூ. 2 லட்சம் இழப்பீட்டுத் தொகை, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

புலிகளின் மெளனம் வியப்பளிக்கிறது: அன்பழகன்

anbhazagan.jpgஇலங்கை அரசு 48 மணி நேர போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விடுதலை புலிகள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது வியப்பளிப்பதாக தமிழக நிதியமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான அன்பழகன் தெரிவித்துள்ளார். இன்று சட்டசபையில் நடந்த ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அன்பழகன் பேசுகையில்,

இலங்கை அரசு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. ஆனால், விடுதலை புலிகள் இது குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற கிடைத்த வாய்ப்புக்கு அவர்கள் ஏன் செவி சாய்க்கவில்லை?. இதனால் இலங்கை அரசு தாங்கள் தமிழர்களை காக்க முயன்றதாகவும் ஆனால், புலிகள் அதை தடுத்து விட்டதாகவும் கூறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசின் தற்காலிக போர்நிறுத்தத்தை ஐநா கூட வரவேற்றுள்ளது. போர் நடைபெறும் பகுதியிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேற புலிகள் அனுமதிக்காதது வியப்பளிக்கிறது. புலிகளின் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதி ஏராளமான மக்கள் அங்கு அடைக்கலம் தேடி சென்றனர். ஆனால், எதிர்பாராதவிதமாக போரில் அவர்கள் பலியாகி வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கான முதல் முயற்சி தான் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம். தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி ஏற்பட இதுபோல் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும். போர் நடைபெறுவதை நம்மிடம் தெரிவிக்கக் கூட இலங்கை அரசுக்கு விருப்பமில்லை. இது தொடர்பாக அவர்களிடம் நாம் முறையிட்டால் தீவிரவாத விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு எதிராகத் தான் போர் நடைபெறுகிறது என்று கூறுவார்கள்.

இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தை பரிசீலிப்பதாக ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றார் அன்பழகன்.

16,000மில். ரூபாவை பெற்றுக் கொள்ள பாராளுமன்றில் குறைநிரப்பு பிரேரணை

yappa.jpg16,000 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணையொன்றை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். நிதி, திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த ஆலோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவையின் பேச்சாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

உலக பொருளாதாரத்தின் துரிதமான வீழ்ச்சியின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதன் அவசியத்தை கருத்திற் கொண்டு அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்ளவும், சேமிப்பினை ஊக்குவிப்பதற்குமாக 16,000 மில்லியன் ரூபாவை குறைநிரப்பு பிரேரணையூடாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. குறிப்பாக ஏற்றுமதிக் கைத்தொழில், உல்லாசப் பிரயாணக் கைத்தொழில், விவசாய உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் நிதி வழங்கப்படவுள்ளது. மேற்படி துறைகளின் உற்பத்திச் செலவினை குறைப்பதன் ஊடாக போட்டித் தன்மையை அபிவிருத்தி செய்தல், ஏற்றுமதி வருமானம் மேற்படி துறைகளின் பாதுகாப்புத் தன்மையை பலப்படுத்துதல், போன்றவற்றை உள்ளடக்கியதாக பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தையில் தேயிலையின் விலையை உறுதிப் படுத்துவதற்காக இலங்கைத் தேயிலைச் சபையின் மதிப்பீட்டின் கீழ் அரச நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்தலுக்கும் ஏல விற்பனையில் தேயிலையின் விலையை கிலோ ஒன்றுக்கு 300 ரூபா வரை தக்க வைத்தலுக்குமாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, இலங்கை தேயிலைச் சபைக்கு 1500 மில்லியன் ரூபாவை வழங்கவும். தேயிலை கைத்தொழில் தொழிற் சபைகளுக்கு ஒரு மாதத்திற்கான தொழில் மூலதனத்தினை சலுகை அடிப்படையிலான வட்டி விகிதாசாரம் ஒன்றின் கீழ் வழங்குவதற்காக நிதி திட்டமிடல் அமைச்சு, அபிவிருத்தி நிதித் திணைக்களத்திற்கு 100 மில்லியன் ரூபாவும் வழங்கப்படும்.

50 கிலோ எடைகொண்ட தேயிலைக்கான கலப்பு உரம் 1000 ரூபாவுக்கு வழங்குவதற்காக விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சுக்கு 2500 மில்லியன் ரூபாவும், பஸ் வண்டிகள், டிரக் வண்டிகளுக்கு அவசியமான டயர்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு ஊக்குவிப்புகளை வழங்குவதற்காக ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு 200 மில்லியன் ரூபாவும் இறப்பருக்கான உறுதியான விலையொன்றை பெற்றுக் கொள்வதற்காக இறப்பர் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் மானியத்துக்கு கடன் வழங்குவதற்காக மேற்படி அதே அமைச்சுக்கு 450 மில்லியன் ரூபாவும் வழங்கப்படும்.

கறுவாவிற்கான உறுதியான விலையொன்றை பெற்றுக் கொள்வதற்காக கறுவா ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியத்துக்காக நிதி திட்டமிடல் அமைச்சு அபிவிருத்தி நிதித் திணைக்களம் என்பவற்றுக்கு 50 மில்லியன் ரூபா வழங்கப்படும். 2008ம் ஆண்டில் ஏற்றுமதி மற்றும் ஊழியர்க ளின் எண்ணிக்கை மற்றும் அத்துறைகளுடன் தொடர்பான பொருத்தமான பெறுமதிச் சேர்ப்பை பேணும் ஏற்றுமதியாளர்களுக்கு 5 சதவீத ஏற்றுமதி ஊக்குவிப்பை வழங்குவதற் காக 8000 மில்லியன் ரூபா பெற்றுக் கொடுக் கப்படும்.

தற்போதுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை பேணும் சுற்றுலாத்துறை அமைச்சில் பதிவு செய்துள்ள உல்லாசப் பிரயாண ஹோட்டல்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியம் மற்றும் கடனை மறு சீரமைத்தலுக்காக 200 மில்லியன் ரூபாவும் அரசினால் வழங்கப்படும் ஏனைய மானியங்களுக்காக நிதி திட்டமிடல் அமைச்சுக்கு 3000 மில்லியன் ரூபாவும் வழங்குவதற்கான பிரேரணைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டார்.

இராணுவம் கூறும் “டபிள் கப்’ எமக்குச் சொந்தமானதல்ல

unicef_2301.jpgவிடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியதாகக் கூறும், “டொயோட்டா டபிள் கப்’ வாகனம் தமக்கு சொந்தமானதல்ல என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.  இந்த வாகனம், யுனிசெப்புக்குச் சொந்தமானதென இராணுவம் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளதாகவும் யுனிசெப் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான டபிள் கப்வாகனம் எதனையும் யுனிசெப் தனது நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவில்லை. ஆயினும், கடந்த காலங்களில் அரச நிறுவனங்களான சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, தேசிய நீர்விநியோக வடிகாலமைப்புச் சபை, சமூக சேவைகள் நலன்புரி அமைச்சு என்பனவற்றுக்கு பணிகளை முன்னெடுப்பதற்கு வசதியாக இந்த வாகனங்களை தாம் வழங்கியிருந்ததாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான நலன்புரித் திட்டங்களை முன்னெடுக்கவென அரச நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த வாகனங்கள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டிருக்கக் கூடுமெனவும் அதற்காக தாம் மிகவும் வருத்தமடைவதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவலாம்

_bort.jpgஇலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடக்கும் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள்  தமிழகத்திற்குள் ஊடுருவலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து கடலோரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், விடுதலை புலிகள் அங்கிருந்து கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது. இதையடுத்து தமிழக கடலோர பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள டிஜிபி ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட 11 மாவட்டங்களில் கடலோர காவல் நிலையங்கள் உள்ளன. ஏற்கனவே இங்கு பாதுகாப்பை தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.தற்போது உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து 24 மணி நேரமும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

படுகாயமடைந்தோருக்கான போக்குவரத்தை ஐ.நா.வும் சர்வதேச அமைப்புகளும் செய்ய வேண்டும்- நடேசன் கோரிக்கை

hospital.jpgவன்னியில் இடம்பெறும் ஷெல் தாக்குதல்களில் படுகாயமடைந்தவர்களுக்கான போக்குவரத்துகளை ஒழுங்கு செய்ய ஐ.நா.உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடேசன் கூறியதாக “புதினம்’ இணையத்தளம் தெரிவித்துள்ளதாவது;

இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயங்களுக்கு ஐ.நா.மற்றும் இதர சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள மக்களின் கருத்துகளை சுயாதீனமாக கேட்டறிய வேண்டும். வவுனியாவுக்கு செல்லும் நோயாளிகளை விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருக்கவில்லை. வவுனியாவுக்கு நேற்று வியாழக்கிழமை மட்டும் 200 நோயாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருந்துவ, போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களுக்கான மருத்துவ தேவைகளுக்கான போக்குவரத்துகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா.உள்ளிட்ட அனைத்து சர்வதேச அமைப்புகளும் ஏற்பாடு செய்ய வேண்டும். சர்வதேச மற்றும் ஐ.நா.விதிகளின் படி, படுகாயமடைந்த பொதுமக்களுக்கான சிகிச்சைகளுக்குரிய போக்குவரத்துகளை அரசு அனுமதிக்காமலிருப்பது பாரிய மீறலாகும்.

தங்களது குடும்பங்களுடன் இணைந்து கொள்ள விரும்புவோரையும் கூட படைத்தரப்பு அனுமதிக்க மறுத்து வருகிறது. மோதல் பகுதியிலிருந்து வெளியேற விரும்புவது தனிநபரின் உரிமை என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். எந்த ஒரு தனிநபருக்கு எதிராகவும் எந்த தடையும் விதிக்கவில்லை. சர்வதேச சமூகத்தினர் இதனையும் பொதுமக்களின் உரிமையையும் புரிந்துகொள்ள வேண்டும்.

படையினரின் கரங்களில் சிக்கிக் கொள்ள விரும்பாத தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் பாதுகாப்பார்கள். பொதுமக்களை படுகொலை செய்யும் நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 

காயமடைந்தவர்களை அப்புறப்படுத்த ஐ.நா. மீண்டும் முயற்சி

redcrose2801.jpgவன்னியில் மோதலில் சிக்கி படுகாயமடைந்திருக்கும் 50 சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்களை வெளியே கொண்டுவருவதற்கான இரண்டாவது முயற்சிக்கு ஐ.நா திட்டமிடுவதாக பி.ரி.ஐ.செய்திகள் தெரிவித்தன. விடுதலைப் புலிகள் அனுமதியளித்தும் மோதல்கள் தணிவடைந்துமிருந்தால் வியாழக்கிழமை (நேற்று) நண்பகல் எல்லைப்பகுதியை தாண்டி வாகனங்கள் காயமடைந்தவர்களை ஏற்றிவரும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கிமூனின் பேச்சாளர் கூறியுள்ளார்.  அதன்பின் காயமடைந்தவர்கள் வவுனியாவிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்க முடியுமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

காயமடைந்தவர்களை ஏற்றிவரச் சென்ற வாகனங்கள் புதுக்குடியிருப்பில் பல நாட்களாக நிற்கின்றன. சுமார் 2 1/2 இலட்சம் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நவம்பரின் பின் சுமார் 5 ஆயிரம் பேர் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளதாக ஐ.நா. மனிதாபிமான விவகார ஒருங்கிணை அலுவலகம் கூறியுள்ளது.

யுத்தம் இடம்பெறும் பகுதிகளிலிருந்து 2 1/2 இலட்சம் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பான் கிமூன் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுமக்கள் மற்றும் நிவாரணப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு அதிகளவு முன்னுரிமை கொடுக்குமாறு விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் அவர் அழைப்புவிடுத்திருந்தார்.