இடம் பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உதவிகள் இனிமேல் அரசாங்கத்தின் வழிகாட்டலிலேயே செலவிடப்படவேண்டும். முன்பு போல் அரசசார்பற்ற நிறுவனங்களில் நிகழ்ச்சி நிரலின்படி செலவிடமுடியாதென தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்,
இலங்கையிலுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான இடைத்தங்கல் முகாம் முழு உலகுக்கும் ஒரு முன்னுதாரணமாகும். சிவிலியன்கள் மிகவும் சிறப்பாகக் கவனிக்கப்படும் இது போன்ற முகாம் உலகில் எங்கும் காணமுடியாதென ஐ நாவின் இரண்டாம் நிலைத் தவைர் ஜோன் ஹோம்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்துள்ள குடும்பங்கள் ஒன்றிணைந்து வாழும் வகையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனி வீடுகள் இப்போது அமைக்கப்பட்டு வருகின்றன. பாடசாலைகள் மற்றும் ஆஸ்பத்திரிகள் அங்கு இயங்குகின்றன. இதனையடுத்து இலங்கையில் இடம்பெயர்நதவர்களுக்கு உதவ ஐ.நா நிறுவனமும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்வந்துள்ளன. அதற்காக நாம் நன்றி தெரிவிக்கிறோம்.
ஆனால் அவ்வாறான உதவிகள் அனைத்தும் இறைமையுள்ள எமது அரசாங்கம் வகுத்துக் கொடுக்கும் திட்டத்தின் அடிப்படையில்தான் பயன்படுத்தப்ட வேண்டும். அவர்கள் வகுத்த திட்டத்தில் செயற்பட எமது அரசாங்கம் இடமளிக்காது. கடந்த காலங்களில் இலங்கையில் செயற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கிய உதவிகள் வடக்கிலுள்ள தமிழ் மக்களைச் சென்றடையவில்லை. புலிகளுக்காக சுகபோக நீச்சல் தடாகம் அமைக்கவும் அதிநவீன தொலைத் தொடர்பு நிலையங்கள் மற்றும் உலகின் முதல்தர அச்சகங்களை அமைக்கவுமே பயன்பட்டன என்பது இன்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்கள் இலங்கைக்கெனச் செலவிடும் பணத்தில் 70 சதவீதம் அந்த நாடுகளின் ஊழியர்களின் சம்பளம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளுக்கென அந்த நாடுகளுக்கே மீண்டும் சென்றடைகின்றன. ஆனால் அரசாங்கம் வகுக்கும் திட்டங்களில் உள்ளுர்ப் பணியாளர்களின் சேவையே பெற்றுக்கொள்ளப்படும். சகல செலவினங்களுக்கும் அரசாங்கமே வழி காட்டும். இவ்வாறான கருத்துக்களை முன்னர் கூறமுடியாதவொரு அச்ச நிலை இருந்தது. ஆனால் இன்று எமது அரசு எழுப்பிய சந்தேகங்கள் உண்மைப்படுத்தப்ட்டுள்ளதால் இன்று அவற்றை துணிந்து கூறக்கூடியதொரு நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.