அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஐ.தே.க கூறுவதுபோல் பொருட்களின் விலை அதிகரித்தால் பதவியைத் துறக்கவும் தயங்கேன்

“ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறுவது போன்று அத்தியாவசி யப் பொருட்களின் விலைகள் மும்மடங்காக அதிகரிக்குமானால் நான் எனது அமைச்சுப் பதவியைத் துறக்கவும் தயார் என வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மும்மடங்காக அதிகரிக்கும் என ஐ.தே.க. எம்.பிக்கள் சிலர் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மும்மடங்கு அல்ல இரண்டு மடங்காக அதிகரிக்கவும் விடமாட்டேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்; கடந்த ஐந்து வருடங்களுக்குப் பின் அத்தியா வசியப் பொருட்களின் விலைகள் இம்முறையே 5.3 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்:

குறைந்த விலையில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட் களை வழங்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் 1,000 ‘கோப் சிட்டி’களை திறப்பதற்குத் தீர்மானிகப்பட்டுள்ளது. இதற்கென மூவாயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கு மேற்பட்ட ‘கோப் சிற்றிகள்’ தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் கூட்டுறவுத் துறைக்கு வற்வரி, வருமான வரி, வங்கிக் கடன் சலுகை வரி என பல வரி விலக்குகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மட்டு. மாநகர சபை நேற்றுடன் ஓராண்டு பூர்த்தி

மட்டக்களப்பு மாநகர சபையை மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்று ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்றுத் தொடக்கம் எதிர்வரும் 25ம் திகதி வரைக்கும் ஒரு வாரத்திற்கான நிகழ்வுகளை நடத்த மட்டக்களப்பு மாநகர சபை ஏற்பாடுகளை செய்துள்ளது. நேற்றுக்காலை சமய வழிபாடுகளுடன் ஓராண்டு பூர்த்தி நிகழ்வுகள் ஆரம்பமாகின. மட்டக்களப்பு ஸ்ரீ மாமங்கேஸ்வரர் ஆலயத்திலும், புனித மரியாள் இணைப்பேராலயம், மட்டக்களப்பு நகர் ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகிய மத வழிபாட்டுத் தலங்களில் சமய வழிபாடுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், பிரதிமேயர் ஆபிரகாம், ஜோர்ஜ்பிள்ளை, மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர், மாநகர ஊழியர்கள் பலரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு சின்ன ஊறணி பேச்சியம்மன் கோவில் வீதியின் இரண்டாம் குறுக்கு வீதிக்கு கிறவல் இடும் நடவடிக்கையும் நேற்று இடம்பெற்றதுடன் மட்டக்களப்பு மாநகர சபைக்கான உத்தியோகபூர்வ இணையத்தளமும், மாநகர மேயரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டாம் நாளான (18.04.2009) இன்று மட்டக்களப்பு எல்லை வீதி திசவீரசிங்கம் சதுக்கம் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்படுவதுடன் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு முதல்வர் சவால் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போரை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார்: விடுதலைப் புலிகள் அறிவிப்பு!

selvarasa_pathmanathan.jpgஉடனடியாகவும் நிரந்தரமாகவும் போர் நிறுத்தத்தை அறிவித்து தமிழர்களின் அவலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுமாயின் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண தாங்கள் தயாராக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
 
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்த 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்து நிரந்தர போர் நிறுத்தத்திற்கு தயார் என்று விடுதலைப் புலிகள் விடுத்த கோரிக்கையை சிறிலங்க அரசு நிராகரித்துவிட்ட நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கைத் தீவில் தமிழ் தேசத்திற்கு தொடர்ந்து இழைக்கப்பட்ட அநீதியின் விளைவாகப் பிறந்த வரலாற்றுப் பூர்வமான விடுதலைப் போராட்டத்தையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்கொண்டு வருகிறது. வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநியாயங்களுக்கு எதிராகவே தமிழீழ விடுதலைப்புலிகள், ஆயுதம் ஏந்திப் போராடினர்.எங்களுடைய இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான நியாயமான தீர்வை சர்வதேச சமூகம் வழங்குமென்றால் அந்த ஆயுத போராட்டத்திற்கான அவசியம் இருக்காது” என்று அந்த அறிக்கையில் பத்மநாதன் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் அனுபவித்துவரும் மானுட அவலத்திற்கு உடனடியாகவும் நிரந்தரமாகவும் போர் நிறுத்தம் அறிவித்து முற்றுப் புள்ளி வைக்குமானால், அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தையின் மூலம் தமிழர்களின் உரிமையை போராடி பெற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராகவே உள்ளது என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்

நிரந்தர போர் நிறுத்தத்தை நிராகரித்த இலங்கை அரசாங்கம், 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி, தம்மால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தின் மீது ஆரம்பித்துள்ளது. இதன் போது படையினர் நகர்வுகளை தடுக்க தமிழீழ விடுதலைப்புலிகள் பாரிய தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து படையினர் ஆயிரக்கணக்கான எறிகணைகளையும் குண்டுகளையும் ஏவி பல பொதுமக்களை  கொன்றும் ஆயிரக்கணக்கானோரை காயப்படுத்தியும் உள்ளனர்.

தமிழர்களின் அவலத்திற்கு முடிவுகட்ட நாகரீக உலகின் பிரதிநிதிளாக முன்னி்ன்று கொடை நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், நோர்வே ஆகியன இந்தியாவுடன் இணைந்து வலியுறுத்தி உடனடியாக நிரந்தர போர் நிறுத்தம் செய்ய வழிகாண வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள பத்மநாதன், போரின் மூலம் இனப் பிரச்சனைக்கு முடிவையோ அல்லது இலங்கையிலும் அல்லது தெற்காசிய மண்டலத்திலும் நிலைத் தன்மையையோ உருவாக்கிட இயலாது என்றும் கூறியுள்ளார்.

வன்னியில் இடம்பெறுகின்ற மக்களின் அவலங்களை சர்வதேசம் அறிந்திருந்தும் அதனை தடுப்பதில் முனைப்புக்காட்டவில்லை எனவும் பத்மநாதன் குற்றம் கூறியுள்ளார்.

இலங்கை பிரச்சினையை உலக அளவிற்கு கொண்டு சென்றவர் ஜெயலலிதா- ஏ.பி.பரதன்

jayalalitha.jpgசென்னையில் நடந்த அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் பேசுகையில்,

கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தவறான பொருளாதார கொள்கையை கடைபிடித்து வருகிறது. அதற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தியபோது, அதற்கு தமிழகத்தில் இருந்து ஜெயலலிதா ஆதரவு தந்தார். அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்த்து எங்களுடன் சேர்ந்து பேராடினார்.

இலங்கை பிரச்சினையில் காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது. அந்த கூட்டணியில் உள்ள தி.மு.க.வும் அமைதியாக இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரத போராட்டம் நடத்தி, இலங்கை பிரச்சினையை உலக அளவிற்கு கொண்டு சென்றார். இந்த தேர்தல் தமிழகத்திற்கான தேர்தல் மட்டும் அல்ல. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் நாட்டு மக்களை காப்பாற்றும்படி இல்லை. எனவே, அந்த அரசு அகற்றப்பட வேண்டும் என்றார்.

இலங்கை மாணவர்கள் சிங்கப்பூரில் ஏமாற்றப்படுகின்றனர். – இலங்கைத் தூதுவர்.

jayathri-samarakone.jpg இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு கல்வி கற்பதற்கென கொண்டுவரப்பட்டுள்ள மாணவர்கள் அங்கு ஆசைகாட்டி ஏமாற்றப்பட்டுள்ளதாக தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதுவர் ஜயத்திறி சமரக்கோண் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள பத்திரிகைகளுடாக இலகுவாக விளம்பரம் செய்யப்படும் போது ஏராளமான மாணவர்கள் போலி ஏஜன்டுகளை நாடுகின்றனர். அவ்வாறு இவர்களது வலையில் சிக்கும் மாணவர்கள் இலகுவாக சிங்கப்பூரினுள் கொண்டு வரப்படுகின்றனர். சிங்கப்பூரினுள் இலங்கைப் பிரஜைகள் வர வீசா தேவையில்லை என்ற சட்டத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூரினுள் கொண்டு வரப்படும் மாணவர்கள் முதலில் ஆங்கில கற்கை நெறிகளுக்காக அனுப்பபடுவதுடன் அதே நேரத்தில் பகுதி நேர வேலைகளுக்கும் அமர்த்தப்படுகின்றனர்.

சிங்கப்பூரில் வேலை செய்வதானல் அனுமதி வேண்டும். ஆனால் எவ்வித அனுமதியுமில்லாமல் வேலைக்கமர்த்தப்பட்ட பல மாணவர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருப்பதுடன் அவ்வாறு ஆர்வம் உள்ளவர்கள் சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அன்றில் சம்பந்தப்பட்ட கல்லூரியை நேரடியாக தொடர்பு கொள்வது சிறந்தாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் நம்பியார் இன்று ஜனாதிபதியைச் சந்தித்தார்

vijaynambiar.jpg இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூனின் அலுவலகத் தலைமை அதிகாரி விஜய் நம்பியார், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகமவைச் சந்தித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மாலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட விஜய் நம்பியார் நேற்று மாலையே இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவைச் சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், வெளிவிவகார அமைச்சரையும் அவர் சந்தித்தார். பாதுகாப்பு வலயத்தில் காணப்படும் நிலைமைகள் மற்றும் வவுனியாவிலுள்ள முகாம்களிலுள்ள ஐ.நா. பணியாளர்கள் வெளியேற அனுமதிக்கப்படாமை குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து போட்டியிடும் : விஜய டி.ராஜேந்தர்

images-t-rajendran.jpgமக்களவைத் தேர்தலில் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என்று லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்தார். கூட்டணி அமைக்க காலங்கடந்து பாஜக முயற்சித்து வருகிறது என்று அவர் மேலும் கூறினார். இது குறித்து சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது :

அதிமுக கூட்டணிக்காக மற்றவர்களை காத்திருக்க வைத்துவிட்டு காலங்கடந்து கூட்டணி அமைக்க பாஜக பேச்சு நடத்தி வருகிறது. சரத்குமார் பாஜக கூட்டணிக்கு வருமாறு என்னை அழைத்தார். கூட்டணி குறித்து சரத்குமார், கார்த்திக், டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. சரத்குமார், கார்த்திக் ஆகியோர் பாஜகவுடன் சேர்ந்து பயணம் செய்ய இருக்கிறார்கள். மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகத்துடன் இணைந்துள்ளது. நான் என் பாதையில் தேர்தலை சந்திக்க உள்ளேன்.

கள்ளக்குறிச்சி, திருச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பூர் உள்ளிட்ட 8 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இன்னும் இரண்டு நாளில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம் என்றார் டி. ராஜேந்தர்.

மருத்துவமனையிலும் தொடரும் சாகும்வரையிலான உண்ணாவிரதம்

ampala-vanar.jpgவன்னியில் உடனடிப் போர்நிறுத்தம் அங்கே அல்லல்படும் மக்களுக்கு உடனடி மருத்துவ உதவி உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கட்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வரும் சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் புதன்கிழமை காவல்துறையினரால் பலாத்காரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் அவரது உண்ணாவிரதப் போராட்டம் மருத்துவமனையிலும் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ஒரு துணிகரமான தலைவர்

karuna_amman.jpg கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு துணிச்சல் மிக்க தலைவர் என சமூக நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இதுபற்றி அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

கிளிநொச்சிப் பிரதேசம் படையினரால் கைப்பற்றப்பட்டதன் பின்னர் முதற்தடவையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு விஜயம் செய்தமை வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு நிகழ்வாகும். ஏனெனில் இதுவரை காலமும் நாட்டின் எந்தவொரு ஜனாதிபதியும் அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்யவில்லை. ஆனால் எமது ஜனாதிபதி புத்தாண்டு தினத்தில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து கள நிலைவரங்களை அவதானித்ததோடு, அங்குள்ள படை வீரர்களுடன் சந்தோஷமாக புத்தாண்டு நிகழ்வுகளிலும் பங்குபற்றியுள்ளார். இது மிகவும் பாராட்டத்தக்க ஒரு விடயமாகும்.

ஏனெனில் இன்று அங்குள்ள படையினர் தமது உறவுகளையும் குடும்பங்களையும் பிரிந்த நிலையில் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர்களுடன் இணைந்து புத்தாண்டு நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொண்டமை மகிழ்ச்சிக்குரியதாகும்.

புலிகளிடமிருந்து வாகரைப் பிரதேசம் கைப்பற்றப்பட்டபோது கூட ஜனாதிபதி அங்கும் நேரடியாக விஜயம் செய்திருந்தார். இப்போது கிளிநொச்சிக்கும் சென்றுள்ளார். இவ்வாறான பல திருப்புமுனைகளை அவர் ஏற்படுத்தி வருகின்றார்.

ஜனாதிபதி மேற்கொள்ளும் இவ்வாறான விஜயங்கள் மூலம் எதிர்காலத்தில் வடக்கிலும் பல அபிவிருத்திகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட அப்பிரதேசங்களை நேரடியாகச் சென்று பார்க்கும்போதுதான் அவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

தற்போது வன்னிப் பிரதேசம் முற்றாக மீட்கப்பட்டுள்ள நிலையில் வடக்கின் வசந்தம் எனும் திட்டத்தினூடாக ஜனாதிபதியின் வழிகாட்டலில் விரைவில் அப்பிரதேசங்கள் அபிவிருத்தியடைந்த பிரதேசங்களாக மாறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி மனுத்தாக்கல்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 இல் மே மாதம் 21 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலைபற்றி ஜெயின் ஆணைக்குழு விசாரணை நடத்தியது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தனியாக விசாரணை நடத்தப்பட்டு நளினி, முருகன், சாந்தன், ரொபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவி, அறிவு ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

ஜெயின் ஆணைக்குழு விசாரணை 1998 இல் தான் முடிந்தது. அதற்கு முன்பே 7 பேருக்கும் பூந்தமல்லி நீதிமன்றம் தண்டனை விதித்துவிட்டது. ஜெயின் ஆணைக்குழு அறிக்கையில் புகார் கூறப்பட்ட சந்திராசுவாமி, சுப்பிரமணியசாமி ஆகியோரை விட்டுவிட்டார்கள். எனவே தண்டனை பெற்ற நளினி, முருகன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.