அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

28 சடலங்கள் வவுனியாவில் அடக்கம்

வவுனியா பொதுவைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 28 சடலங்கள் மாவட்ட நீதிவானின் அனுமதியுடன் பூந்தோட்டம் பொதுமயானத்தில் கடந்த புதன்கிழமை இரவு அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அடையாளம் காணப்பட்டு உறவினர்களினால் எடுத்து செல்லப்படாததும், அடையாளம் காணப்படாததுமான சடலங்கள் சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்தன. இடநெருக்கடியும் சடலங்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதனைத் தொடர்ந்து இவை அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டன.

ஒரே குழியில் 28 சடலங்களும் போடப்பட்டே அடக்கம் செய்யப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இடம்பெயர்ந்தோருக்கு உடனடியாக 155 மில்லியன் டொலர் நிதி தேவை – அரசு, ஐ.நா., 40 நிவாரண அமைப்புகள் கோரிக்கை

cvili.jpgமோதல் பகுதியிலிருந்து வெளியேறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்போருக்கு உடனடி நிவாரண உதவி வழங்க நிதி உதவி தேவைப்படுவதாக உதவி வழங்கும் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருக்கும் அதேசமயம், ஐ.நா.வும் அரசாங்கமும் 40 நிவாரண முகவரமைப்புகளும் 155 மில்லியன் டொலர் தேவையென கோரிக்கை விடுத்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மோதல் பகுதியிலிருந்து வெளியேறி நிராதரவாகவிருக்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு உதவியளிக்குமாறு வேண்டுகோளை விடுத்துவரும் உதவிவழங்கும் அமைப்புகள் பல மில்லியன் டொலர்களை திரட்டுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இடம்பெயர்ந்தோரை தங்கவைக்கும் முகாம்கள் நிரம்பி வழிகின்றன. நாற்காலி வைக்கும் இடத்தின் அளவுடைய பகுதியில் சில குடும்பங்கள் இருப்பதாக நிவாரணப் பணியாளர்கள் கூறுவதாக “ரிலீவ்வெப்’ இணையத்தளம் தெரிவித்தது.

மருத்துவமனைகளும் காயப்பட்டடோராலும் நோயாளர்களாலும் நிரம்பியுள்ளன. மோசமான காயங்களுடன் மோதல் பகுதியிலிருந்து கொண்டுவந்து அனுமதிக்கப்படுவோருக்கு மருத்துவர்கள் இரவுபகலாக சிகிச்சையளித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு அடிப்படை நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நிதியுதவி அதிகளவு தேவைப்படுவதாக இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிடப்பிரதிநிதி நீல்புனே கூறியுள்ளார்.

குழந்தைகள் வயிற்றோட்டத்தாலும் சிறுவர்கள்,பெண்கள் போஷாக்கின்றியும் காயமடைந்தவர்களையும் நான் பார்க்கின்றேன். மோதல்பகுதியிலிருந்து மாதக்கணக்காக உடுத்தியிருந்த ஆடையுடன் ஆட்கள் வந்துள்ளதையும் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். வவுனியாவுக்கு சென்று முகாம்களின் நிலைமையை பார்வையிட்டு திரும்பியிருந்த நீல்புனே இந்த மக்களில் பலர் ஒருவருடத்துக்கு முன்பே தமது வீடுகளிலிருந்து யுத்தம் காரணமாக வெளியேற பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் என்றும் அந்த மாதிரியான மோசமான சூழ்நிலையிலிருந்தும் இவர்கள் உயிர்தப்பி வாழ்வது ஏதோவொரு அற்புதம் எனவும் புனே கூறியுள்ளார்.

இலங்கைக்கு உதவி வழங்க ஐ.நா. வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு, புகலிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உதவும் முகவரமைப்புகள் நிதிப்பற்றாக்குறையினால் திண்டாடுகின்றன. 196,000 பேர் வெளியேறியிருப்பதாக அரசு கூறுகிறது. இவர்களில் அநேகமானோர் வவுனியாவிலுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். முதலில் இடம்பெயர்ந்தவர்கள் மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் தங்கியுள்ளனர். விரைவில் இவர்களுக்கு முகாம்களை அமைப்பதற்கான இடங்களை தயாராக்குமாறு ஐ.நா. அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

பொருத்தமான நிலத்தை வழங்குவதில் அரசு தாமதம் காட்டுவதாகவும் தற்காலிக முகாம்களுக்கான உள்சார் கட்டமைப்பு வசதிகளுக்கு செலவிட உதவி வழங்கும் குழுக்களால் எவ்வளவு தொகையை. செலவிட முடியும் என்பதில் யதார்த்தபூர்வமற்ற எதிர்பார்ப்புகளை அதிகாரிகள் கொண்டிருப்பதாகவும் நிவாரணப் பணியாளர் ஒருவர் தெரிவித்ததாக ரிலீவ் வெப் கூறியுள்ளது. பலர் உடுத்த ஆடையுடனேயே எதுவுமின்றி வந்துள்ளனர். பசியுடனும் தாகத்துடனும் இருக்கும் அவர்களுக்கு சிறியளவு உணவும் நீருமே கிடைக்கிறது. அன்புக்குரியவர்கள் கண் முன்னால் கொல்லப்படுவதைக் கண்ட பலர் நினைவாற்றல் இல்லாதவர்களாக பிரமை பிடித்தவர்களாக உள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களுக்கான அவசரப் புகலிடங்கள் , மலசல கூடங்களை அமைக்கவும் 9 மில்லியன் டொலர் நிதியுதவி தேவையென செயலர் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  உணவு , ஆடைகள், படுக்கைகள், சுகாதார வசதிகள் என்பவற்றை வழங்கிவரும் சேவ்த சில்ரன் அமைப்பு 3.65 மில்லியன் டொலர் தேவையென வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தக் குடும்பங்கள் சகலவற்றையும் இழந்துவிட்டன. சிறுவர்கள் உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சேவ்த சில்ரன் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் பிரசாத் நாயக் தெரிவித்துள்ளார்.  நிதி மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதாகவும் பொதுமக்கள் அதிக அளவில் உதவவேண்டும் என்றும் ?கிறிஸ்ரியன் எய்ட், அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. புகலிடம், உணவு, நீர், சுகாதார வசதி, ஆடை, படுக்கை, நுளம்பு வலைகள் மற்றும் உளவியல் ரீதியான ஆதரவு உடனடியாக தேவைப்படுவதாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வும் அரசாங்கமும் சுமார் 40 உதவி வழங்கும் அமைப்புகளும் 2 இலட்சம் பேருக்கு உதவுவதாகவும் 155 மில்லியன் டொலர் தேவையென வேண்டுகோள் விடுத்துள்ளன. அதேசமயம், தேவைப்படும் தொகையில் 31 சதவீதமே அதாவது 48 மில்லியன் டொலரே கிடைத்திருப்பதாக ஐ.நா. பேச்சாளர் கோர்டொன் வைஸ் கூறியுள்ளார்.

உணவுக்கான உதவி 60 சதவீதம் கிடைத்திருப்பதாகவும் ஆனால் தங்குமிடத்திற்கு 18 சதவீதமே கிடைத்திருப்பதாகவும் நீர், சுகாதார வசதிகளுக்கு 16 சதவீதமும் சுகாதார வசதிகளுக்கு 15 சதவீதமும் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்ததுடன் இது மிகவும் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உடனடி மனிதாபிமான உதவிகள் வழங்க உதவி வழங்குவோர் விரும்புவதாகவும் ஆனால் நீண்டகாலத்துக்கு இடைத்தங்கல் முகாம்களுக்கு நிதியுதவி வழங்க தயங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்று மன்மோகன் சிங்கை நோக்கி ஷூவை வீச முயற்சி – குஜராத்தில் பரபரப்பு

manmohan1.jpgகுஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கை நோக்கி ஒரு நபர் ஷூவை வீச முயன்றார். ஆனால் போலீஸார் பாய்ந்து சென்று அந்த ஷூவை மடக்கிப் பிடித்து விட்டனர். அந்த நபரும் கைது செய்யப்பட்டார். அகமதாபாத்தில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் ஷூவை எடுத்து அவரை நோக்கி வீச முயன்றார்.

ஆனால் இதைப் பார்த்து விட்ட போலீஸார் பாய்ந்து சென்று அந்த நபரை மடக்கினர். இதனால் ஷூ பாதியிலேயே விழுந்து விட்டது. பின்னர் அந்த நபரை குண்டுக்கட்டாக அங்கிருந்து கொண்டு சென்றனர். ஷூ வீசிய நபருக்கு 25 வயதுக்குள் இருக்கலாம். அவர் யார், எந்த ஊர், என்ன பெயர், எந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறித்துத் தெரியவில்லை. இந்த சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இந்த மாதத் தொடக்கத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஷூ வீசினார். இதுதான் இந்தியாவில் சமீப காலத்தில் நடந்த முதல் பரபரப்பு ஷூ வீச்சு சம்பவம். இதையடுத்து காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜின்டால், அன்வர் உசேன் ஆகியோர் மீதும், அத்வானி மீது செருப்பும் வீசப்பட்டது. இந்த நிலையில் பிரதமரை நோக்கி ஷூ வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார் – லாரி மோதல் – அதிர்ஷ்டவசமாக நெடுமாறன் உயிர் தப்பினார்

neduma2.jpg இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் சென்ற கார் மீது டேங்கர் லாரி மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக நெடுமாறன் உயிர் தப்பினார்.பழ.நெடுமாறன் நேற்று மாலை மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அவர் பயணித்த கார் சேந்தன்குடி என்ற இடத்தில் வந்தபோது, எதிரே காஸ் நிரப்பிக் கொண்டு வந்த டேங்கர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இருப்பினும் நெடுமாறன் உள்பட காரில் இருந்த யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

விரைந்து வந்த சீர்காழி போலீஸார், லாரியை ஓட்டி வந்த முசிறியைச் சேர்ந்த கணபதி என்பவரைக் கைது செய்தனர்.

கூடாரங்கள், அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அவசரமாக அனுப்புகிறது யூ.என்.எச்.சி.ஆர்.

new_welfare.png
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களின் அவசர தேவைகளுக்காக கூடாரங்கள் மற்றும் பொருட்களை இலங்கைக்கு அனுப்பும் அவசர பணிகளைத் தாங்கள் ஆரம்பித்துள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயம் (யு.என்.எச்.சி.ஆர்) தெரிவித்துள்ளது. வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளையடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்களுக்கு வந்துள்ளனர்.

வவுனியா, மன்னார், யாழ்.குடாவில் இந்த மக்கள் பாடசாலைகளிலும் பொட்டல் வெளிகளில் கூடாரங்கள் அமைக்கப்பட்டும் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். எனினும் இந்த மக்களுக்கான தங்குமிட வசதிகள் மிகவும் குறைவாயுள்ள நிலையில் யு.என்.எச்.சி. ஆர் தனது அவசர உதவிப் பணிகளை ஆரம்பித்துள்ளது. இதன் முதல்கட்டமாக கூடாரங்கள் மற்றும் பொருட்களை விமான மூலம் கொழும்புக்கு அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தேவையான. ஐயாயிரம் கூடாரங்களும் வேறுபொருட்களும் அடுத்த ஓரிரு தினங்களில் விமானங்கள் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன. அந்தக் கூடாரங்கள் தற்போது வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் 38 முகாம்களிலுள்ளவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

வன்னி அகதிகளுக்கு உதவி வழங்குமாறு முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை

cvili.jpgவன்னியில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வருகின்ற தமிழ் சகோதரர்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்ய அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன. ஒவ்வொரு கிராமங்கள், நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களின் ஊடாக நிவாரணப்பொருட்களை சேகரித்து அனுப்புமாறு ஜம் இயத்துல் உலமாவின் உதவிச்செயலாளர் மௌலவி தாசிம் அறிவித்துள்ளார். தெமட்டகொட வை.எம்.எம்.ஏ. தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இடம்பெயரும் வன்னி மக்களுக்கு இன்று அவசியமாக சமைத்த உணவே வழங்கவேண்டியதாக சுட்டிக்காட்டி அதனை முதலில் செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து ஜமா அத்தே இஸ்லாமிய குழுவை வவுனியாவுக்கு அனுப்பி அங்கு உணவை சமைத்து வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் வாழுகின்ற முஸ்லிம்கள் மதியஉணவு மற்றும் உணவுப்பொருட்களை உடன் சேகரித்து வவுனியா நலன்புரிநிலையங்களில் உள்ள அகதிகளுக்கு வழங்குமாறும் மௌலவி தாசிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடிநீர் போத்தல், குழந்தைகளுக்கான பால்மா வகைகள், பிஸ்கற் வகைகள், பெண்களுக்கான உடுபுடவைகள் , சுகாதாரத் துணிகள், பெட்சீற், சாரம் போன்றவற்றைச் சேகரித்து வழங்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் தெமட்டகொடவில் உள்ள வை.எம்.எம்.ஏ. தலைமையகத்தில் இப்பொருட்களை ஒப்படைக்குமாறும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பேர்லினில் இலங்கை தூதரகம் மீது வியாழன் இரவு கைக்குண்டு வீச்சு

germany.jpgஜேர்மனியின் பேர்லின் நகரிலுள்ள இலங்கைத்தூதரகம் மீது கடந்த வியாழக்கிழமை இரவு கைக்குண்டுத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. தூதரகப்பகுதிக்கு வந்த சிலர் இரு கைக்குண்டுகளை தூதரகத்தின் மீது வீசியுள்ளதாக பேர்லின் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விரு குண்டுகளில் ஒன்றே வெடித்துள்ளது. மற்றது வெடிக்கவில்லை. இக்குண்டுவெடிப்பால் கட்டிடத்திற்கு சிறிதளவு சேதமே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அங்கிருந்த எவருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே இந்தக் குண்டுத்தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தாங்கள் கருதுவதாக இலங்கைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேர்லின் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்தமூன்று மாதங்களுக்கு முன்னரும் இந்தத் தூதரகம் மீதுதாக்குதல் நடத்தப்பட்டதும் தெரிந்ததே.

பிரபாகரனுக்கு இன்னும் 20வருடம் போராடக்கூடிய சக்தி இருக்கிறது: ராமதாஸ்

india-election.jpg பிரபாகரனை யாராலும் பிடிக்க முடியாது. பிரபாகரனுக்கு இப்போது வயது 54. இன்னும் 20 ஆண்டுகாலம் போராடக்கூடிய சக்தி அவருக்கு இருக்கிறது. சைதாப்பேட்டை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசினார்.  அப்போது அவர், தெர்டர்ந்து பேசியதாவது:-

’’இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி, வெளியுறத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் இலங்கை அரசிடம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தவில்லை.  ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு சவப்பெட்டிகளை செய்து அனுப்புகிறது. அங்கே கொத்து கொத்தாக குண்டுகளை போட்டு இலங்கை தமிழர்களை கொல்கிறார்கள்.

தமிழர்களை வேகமாக கொல்லுங்கள் என்று சொல்வதற்காக தான் இந்திய மந்திரியும், அதிகாரிகளும் இலங்கைக்கு சென்றிருக்கின்றனர். ஏழைகளை ஒழித்து விட்டால் வறுமை இருக்காது என்று சொல்லும் கூட்டத்தை போல தமிழர்களை ஒழித்து விட்டால் பிரச்சினை இருக்காது என்று கருதுகிறார்கள். அமெரிக்கா கூட இன்றும், போரை நிறுத்து என்று இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. ஆனால் இனவெறி ஆட்சியை நடத்தி வரும் ராஜபக்சே யாருடைய பேச்சையும் கேட்க தயாராக இல்லை.

பிரபாகரனை பிடித்து விடுவார்கள், பிரபாகரனை கொன்று விடுவார்கள் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது போல் பல முறை சொல்லி பிரபாகரனை சாகடித்து இருக்கின்றனர். பிரபாகரனை யாராலும் பிடிக்க முடியாது. பிரபாகரனுக்கு இப்போது வயது 54. இன்னும் 20 ஆண்டுகாலம் போராடக்கூடிய சக்தி அவருக்கு இருக்கிறது.

பிரபாகரனை தீவிரவாதி என்றும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்றும் சொல்லி வருகின்றனர். பகத்சிங்கை கூட அப்படித்தான் சொன்னார்கள். சுபாஸ் சந்திரபோசை அப்படித்தான் சொன்னார்கள். விடுதலைக்காக போராடக்கூடியவர்களை அப்படித்தான் சொல்வார்கள்’’ என்று பேசினார்.

விடுதலைப்புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது

puthumathalan.jpg
விடுதலைப்புலிகள் இன்று ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்துவிட்டது என பி.பி.ஸி. அறிவித்துள்ளது

இலங்கை மோதல்கள் காரணமாக பெரும் மனித நேய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஐ. நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல சர்வதேச நாடுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தாம் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவிப்பதாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது. மனித நேய விவகாரங்களுக்கான ஐ.நாவின் உயர் அதிகாரியான ஜோண் ஹோல்ம்ஸ் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒரே வழி தனி தமிழ்ஈழம் மட்டுமே. தனி தமிழ் ஈழத்தை அதிமுக நிச்சயம் உருவாக்கியே தீரும் – ஜெயலலிதா

jayalalitha.jpgஇலங்கைப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு ஏற்பட, தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒரே வழி தனி தமிழ் ஈழம் அமைப்பது மட்டுமே. அதிமுக ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைந்தால் இந்த தனி தமிழ் ஈழத்தை அதிமுக நிச்சயம் உருவாக்கியே தீரும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஈரோட்டில் பிரசாரம் மேற்கொண்டபோது ஜெயலலிதா இவ்வாறு அறிவித்தார்.

ஜெயலலிதாவின் உரை…

வாழும் கலை, அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி தலைமையில், அவரது அமைப்பைச் சேர்ந்த குழுவினர், அண்மையில், இலங்கை சென்று, அங்குள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்களோடு, உரையாடிவிட்டு வந்திருக்கின்றனர்.  இதுவரை, யாரும் செல்லாத பகுதிகளான, வவுனியா, முல்லைத்தீவு, ஆகிய பகுதிகளுக்கு எல்லாம், அவர்கள் சென்று வந்து இருக்கின்றனர்.  எனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்திற்கு இடையில், 23 ஆம் நாள் நான் சென்னை வந்த போது, ரவிசங்கர் அவர்கள் என்னை சந்தித்தார்.

sri_sri_ravisangar_.jpgஅப்போது அங்கே இலங்கை தமிழர்கள் படும் வேதனைகளை, இன்னல்களை, அவலங்களை எனக்கு எடுத்துரைத்தார். அதுமட்டும் அல்லாமல், அங்கே அவரது குழுவினரால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை எனக்கு திரையிட்டு காண்பித்தார். அந்த காட்சிகளை பார்த்து நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் மன வேதனை அடைந்தேன்.

இதுவரை தெரியாத பல உண்மைகளை, வீடியோ காட்சிகளை பார்த்து தெரிந்து கொண்டேன். இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரைக் காரணமாக கொண்டு, இலங்கை தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பெய்து, அவர்களை அழித்து வருகிறது என்பது மட்டும் தான் நம் அனைவருக்கும் தெரியும். அதனால், தொடர்ந்து போர் நிறுத்தம் தேவை என்பதை மனிதாபிமானம் மிக்க நாம் அனைவரும் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்த வீடியோ காட்சிகளை பார்த்த பிறகு தான், இலங்கை தமிழர்கள் அங்கே கைதிகளை போல், அடிமைகளைப் போல் நடத்தப்படுகிறார்கள் என்பது
தெரிகிறது.

இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கை தமிழர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களை இலங்கை அரசு மிகவும் கேவலமாக, கொடூரமாக நடத்தி வருகிறது. அப்படி என்ன கொடுமைக்கு இலங்கை தமிழர்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசால் சொல்லப்படுவது எல்லாம் பொய், பித்தலாட்டம், கபட நாடகம் என்பதை நான் தற்போது தெரிந்து கொண்டேன். உண்மை நிலை என்னவென்றால், இலங்கை தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் எல்லாம் அவர்களை வெளியேறச் சொல்லி இலங்கை ராணுவம் உத்தரவிடுகிறது. வீட்டில் உள்ள பொருட்களை, துணிமணிகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு, கட்டிய துணியோடு, மாற்று துணிக்கு வழியில்லாமல் வெளியேற வேண்டிய அவல நிலைக்கு இலங்கை தமிழர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படி வெளியேறுகின்ற இலங்கை தமிழர்களை, இலங்கை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தங்க வைக்கிறது. நிழலுக்கு மரங்கள் கூட இல்லாத இடத்தில், பாலைவனத்தில், கட்டாந் தரையில் இவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். புல்பூண்டு கூட அந்த இடங்களில் கிடையாது. அனைத்தும் தகர கொட்டகை போட்ட முகாம்கள். இந்த முகாம்களை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள்தான் இவர்கள் இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் முகாம்களை விட்டு வெளியே செல்ல இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

வேறு இடங்களில் உள்ள இவர்களுடைய உறவினர்கள், இவர்களை பார்க்கச்சென்றால் கூட, முகாம்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முள்வேலிக்கு வெளியில் இருந்து தான் அவர்கள் பேசிக்கொள்ள வேண்டும். அவர்களது எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டன. கைதிகளைப் போல் அவர்கள் அங்கே வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?… அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?… அவர்கள் என்ன குற்றவாளிகளா?… இதுபோன்று, அவர்களை நடத்துவதற்கு, இலங்கை அரசுக்கு, என்ன அதிகாரம் இருக்கிறது?…குற்றம் புரிந்து, தண்டனை பெற்ற கைதிகளைக் கூட, அவர்களது உறவினர்கள், சிறைச்சாலைக்கு உள்ளே சென்று, பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒரு குற்றமும் புரியாத இலங்கை தமிழர்களை, அவர்களது உறவினர்கள் யாரும், உள்ளே சென்று, பார்க்கக் கூடாது என்று கூறுவது, எந்த விதத்தில் நியாயம்?

இதையெல்லாம் பார்க்கின்ற போது, ஜெர்மனியில் நடந்த ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி தான் – தடுப்பு வதை முகாம்களை நடத்தி, யூதர்களைக் கொடுமைப்படுத்தி அழித்த – ஹிட்லர் ஆட்சி தான், நினைவிற்கு வருகிறது.  இலங்கைத் தலைநகரமான கொழும்பில், 50-க்கும் மேற்பட்ட நல்ல நிலைமையில் இருந்த தமிழர்களை – மருத்துவர்களை, வியாபாரம் செய்பவர்களை – இரவோடு இரவாக, இலங்கை ராணுவத்தினர், வெளியேற்றி உள்ளனர்.

வீடு, வாசல், சொத்துக்கள், பொருட்கள் என, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கட்டிய துணியுடன், மாற்று துணிக்குக் கூட வழியில்லாமல் பிச்சைக்காரர்களைப் போல், வவுனியா முகாம்களில், அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம், குருஜி அவர்கள், துணிமணிகளை கொடுத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் குருஜியிடம், என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், “எங்களுக்கு எதுவும் வேண்டாம். எங்களை எங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். நாங்கள் எங்கு தங்கி இருந்தோமோ, அங்கு எங்களை அனுப்பிவிடுங்கள்” என்று மன்றாடி இருக்கிறார்கள்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் எல்லாம், அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடங்களில் எல்லாம், சிங்கள மக்களை, இலங்கை அரசு தங்க வைக்கிறது, சிங்கள மக்களை குடும்பம் குடும்பமாக குடி அமர்த்துகிறது. இலங்கையில் உள்ள தமிழினத்தை அழிக்க, இலங்கை அரசால் தீட்டப்பட்டு இருக்கும் மிக கொடுமையான திட்டம் இது. “முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள், பிச்சைக்காரர்களைப் போல் நடத்தப்படுகிறார்களே; அவர்களை, அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த இடங்களுக்கே அனுப்பி வையுங்கள்,” என்று இலங்கை அதிபரிடம் குருஜி அவர்கள் கேட்டதற்கு, “இப்போதைக்கு அது முடியாது” என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

“இரண்டு மாதங்கள் கழித்தாவது அனுப்பி வையுங்கள்” என்று கேட்டதற்கு, “அவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம், கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், “அதை சரி செய்வதற்கு, நான்கு வருடங்கள் ஆகும்” என்றும், “எனவே, அதற்கு பிறகு தான் அங்கு அவர்களை அனுப்ப முடியும்” என்றும், இலங்கை அதிபர் தெரிவித்து இருக்கிறார். ஆனால், அந்த இடங்களில் எல்லாம், புதிதாக குடியமர்த்தப்பட்ட சிங்களவர்கள் வசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இலங்கை அதிபர் சொல்வது போல் கண்ணி வெடிகள் அங்கே இருந்தால், சிங்களவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?… அந்த கண்ணிவெடிகள், இலங்கை தமிழர்கள் அவற்றின் மீது நடந்தால் தான் வெடிக்குமா?… சிங்களவர்கள் நடந்தால் வெடிக்காதா?…

இலங்கை ராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் போக, எஞ்சி உயிரோடு இருக்கின்ற இலங்கைத் தமிழர்களை, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கும் எண்ணமே இலங்கை அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களை அரசு நடத்தும் முகாம்களிலேயே கைதிகளைப் போல் – அடிமைகளைப் போல் – அடைத்து வைத்து, எல்லா உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில், நாளடைவில் அவர்களையும் அழித்துவிடுவதே இலங்கை அரசின் பயங்கரமான திட்டமாகத் தெரிகிறது.

உண்மை நிலை இப்படி இருக்க, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, ஜனநாயக ரீதியிலான தீர்வு காண்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, என்று பேசுவதெல்லாம் வீண் வேலை; அது வெறும் கண்துடைப்பு என்பது தெரிகிறது. இலங்கை தமிழர்களுக்கு, சிங்களர்களோடு சம உரிமை வழங்கும் எண்ணமே, இலங்கை அரசுக்கு கிடையாது. ஒரே அடியாக, இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்துவிட வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் ஒரே செயல் திட்டமாக உள்ளது.

இலங்கையில் தமிழினம் அழிவதற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும், தி.மு.க. அரசும் தான் காரணம். இவர்கள் நடத்தும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலை நிறுத்தம் அனைத்தும் கண்துடைப்பு நாடகங்கள் தான். தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற இதுபோன்ற அறிவிப்புகளை செய்கிறார்கள்.

இந்திய அரசின் இரு தூதுவர்களும் இலங்கை அதிபரை தற்போது சந்தித்துவிட்டு திரும்பியுள்ளனர். என்ன சாதித்தார்கள்?… இதனால் என்ன பலன் ஏற்பட போகிறது?… எதுவுமே இல்லை. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். இது மட்டும் போதாது; இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஜ வாழ்வு வாழ வேண்டும். சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும்.

இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன்.  இலங்கைப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு காண, தனி ஈழம் தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் தனி ஈழம் அமைக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா. இதுவரை இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டு தனி தமிழ் ஈழ மாநிலம் அமைக்க அதிமுக பாடுபடும் என்று கூறி வந்தார் ஜெயலலிதா. ஆனால் முதல் முறையாக தனி தமிழ் ஈழம் அமைக்க அதிமுக பாடுபடும், உருவாக்கியே தீரும் என்பது மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.