அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மெனிக்பாமில் தயார் நிலையில் இரு தீயணைப்பு படை வாகனங்கள்

international-firefighters-day.jpgசெட்டி குளம் மெனிக்பாம் பகுதியில் இரண்டு தீயணைப்புப் படை வாகனங்களும் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். இடம் பெயர்ந்த மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர். இங்கு தற்போது உஷ்ணமான காலநிலை நிலவுகிறது. ஆபத்துக்களைத் தவிர்க்கும் வகையிலேயே தீயணைக்கும் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்பகுதியிலிருந்து இரு தீயணைக்கும் படைப் பிரிவும், பாவனைக்குரிய அம்புலன்ஸ் வண்டிகளும் பணியாளர்களும் 24 மணி நேரம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகளின் சுயாதீன நிபுணர்குழு அவசரப்பட்டுவிட்டது : ரஜீவ விஜேசிங்க

rajee-vija.jpg“இலங்கை விவகாரம் குறித்த விடயத்தில் ஐக்கிய நாடுகளின் சுயாதீன நிபுணர்கள் குழு அவசரப்பட்டுவிட்டது என்று கருதுகின்றோம். இலங்கைக்கு சர்வதேச விசாரணை குழுவை அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை சுயாதீன நிபுணர்கள் குழு முன்வைத்திருந்தாலும் அதனை பாதுகாப்பு சபை அங்கீகரிக்கவேண்டியது அவசியமாகும்” என்று அரசாங்க சமாதான செயலகத்தின் பணிப்பாளரும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் மனிதாபிமான நிலவரம் குறித்து ஆராய்வதற்கு சர்வதேச விசாரணைக் குழுவை அனுப்பவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன நிபுணர்கள் குழு ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வெள்ளை மாளிகை முன் இன்று தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

white-house.jpgஅமெரிக்கா மற்றும் கனடா வாழ் தமிழர்கள் இணைந்து வெள்ளை மாளிகை முன்பு இன்று பிரமாண்ட முற்றுகை ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர். இதில் அனைத்துத் தமிழர்களும் திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வன்னியில் 3 ஆயிரம் தமிழர்களை ஒரே இரவில் படுகொலை செய்த கொடும் செயலை ஒபாமா அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், மிச்சம் மீதி உள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாரு கோரியும், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

R2P எனப்படும் பாதுகாக்கும் தார்மீகக் கடமை கோட்பாட்டின் அடிப்படையில் உடனடியாக மனிதாபிமான முறையில் தலையிடுமாறு வலியுறுத்தியு இன்று மாலை (அங்கு காலை 9 மணி) இந்த ஆர்ப்பாட்டம் வெள்ளை மாளிகை முன் உள்ள வளாகத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து மாலை 5 மணி வரை (அதாவது இந்திய நேரப்படி விடிய விடிய) நடைபெறவுள்ளது.

வெள்ளை மாளிகை முன்பாக பென்சில்வேனியா அவென்யூ அருகில் உள்ள லஃபாயத் சதுக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வருமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்

தற்போது நடைபெறும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் சர்வதேச குற்றமாக அமையாது – பிரதம நீதியரசர்

sarath-n-silva.jpg
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் சர்வதேச குற்றமாக அமையாது என பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். பியகம பிரதேசத்தில் யுத்தத்தினால் உயிரிழந்த படைவீரர்களுக்கான நினைவுத் தூபி அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தம் நடத்தி வரும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சியை சர்வதேச சமூகம் பாராட்ட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சகல பொதுமக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களை மீட்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரலாற்று காலத்தைப் போன்றே தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலையை சர்வதேச சமூகம் சரிவர புரிந்து கொள்ள வேண்டும் எனவும், பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் தோற்கடிக்கப்படாவிட்டால் அது ஒரு தனிநாட்டை மட்டுமன்றி முழு உலகத்தையுமே பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

நீதிகேட்டு லண்டன் பாராளுமன்றம் தமிழர்களால் முற்றுகை.

11052009parliament-protest.jpgவன்னி சுடுகாடாகியுள்ள நிலையில் செல்லொணாத் துயரடைந்த மக்கள் இன்று லண்டனின் மையப்பகுதியில் கூடி நிற்கின்றனர். வீதி மறியல் காரணமாக லண்டனின் மையப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மனிதப் படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஐ. நா வின் மக்களைக் காப்பதற்கான கடமையினை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் வேண்டி நிற்கின்றனர். உலங்கு வானூர்தி மூலம் பொலிசார் மக்களை நோட்டமிட்ட வண்ணமுள்ளனர். வீதி மறியல் காரணமாக லண்டனின் மையப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குழுமியுள்ள மக்கள் பிரித்தானிய அரசின் செயல் வடிவிலான முடிவை காணும் வரை இங்கிருங்து அசைவதில்லை என உறுதி பூண்டுள்ளனர்.

இலங்கைக்கு நிதியுதவி அளிக்கவேண்டாம்: நாடு கடத்தப்பட்ட “சனல் 4” ஊடகவியலாளர்

channel-4news.jpgசிறிலங்கா அரசாங்கம், வெளிநாட்டு நிதிகளைப் பெறுவதில் குறியாக இருப்பதாக, இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரித்தானிய “சனல்4”  ஊடகவியலாளர் நிக் பெட்டன் வோல்ஸ் தெரிவித்துள்ளார்.  இலங்கை அரசாங்கத்தினால் ஏராளமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இலங்கையில் ஊடகச் சுதந்திரம் என்பது சுத்தமாக இல்லை.

இலங்கை அரசாங்கம், முகாம்களை புனரமைக்கவும், பராமரிக்கவும் அதிகரித்த அளவு வெளிநாட்டு நிதிகளை எதிர்பார்த்து இருக்கிறது. அவர்கள் எந்த அளவு நிதிகளை திரட்ட முடியுமோ, அந்த அளவுக்கு திரட்ட முற்படுகின்றனர். ஆனால் உண்மையில் இந்த நிதிகள் அங்குள்ள பொது மக்களுக்கு பயன்படுத்தப்படப் போவதில்லை.

தேசிய பாதுகாப்பு என கூறி, இராணுவ முன்னெடுப்புகளுக்காகவே இந்த நிதிகளை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர், இதனாலேயே இடம்பெயர்ந்த நிலையில் இன்னும் பல வருடங்களாக தமிழ் மக்கள் குடியமர்த்தப்படாமல் இருக்கிறார்கள். எனவே தொண்டு நிறுவனங்கள் எதுவும் இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவி செய்யக்கூடாது என பிரித்தானிய ஊடகவியலாளரான வோல்ஸ் கோரியுள்ளார்.

கடற் புலிகளின் தளபதி – செய்தித் தொடர்பாளர் பலி

ilanthirayan.jpgஇலங்கையில் கரையமுள்ளி வாய்க்கால் பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவின் முக்கிய தளபதியான செழியன் பலியாகிவிட்டதாகவும் அதே போல விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசையா இளந்திரையனும் பலியாகிவிட்டதாகவும்  கூறப்படுகிறது.

கடற் புலிகளின் இரண்டாவது தளபதியான செழியன் கடற்படையினருடன் நடந்த பல மோதல்களில் பங்கேற்றவர். கடந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி கடற்படையினருடன் நடந்த சண்டையில் காயமடைந்திருந்தார். ஆனாலும் இப்போதைய போரிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந் நிலையில் கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகள் அமைத்திருந்த மண் அணையை கைப்பற்ற நடந்த மோதலில் செழியன் பலியானதாக இலங்கை இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

அதே போல இந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசையா இளந்திரையனும் படுகாயமடைந்துள்ளார் என்று கூறப்பட்டது.  இந் நிலையில் அவரும் பலியாகிவிட்டதாகத் கூறப்படுகிறது. மட்டக்களப்பைச் சேர்ந்தவர் இளந்திரையன். விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். இத்தகவல்களை இந்திய இணையத்தளங்களும் தெரிவித்துள்ளன.

நலன்புரி நிலையங்களில் நகைகளைப் பாதுகாக்க வங்கிக் கிளைகள்

chals_.jpg
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருக்கும் மக்களின் பெறுமதி மிக்க நகைகள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாத்துக் கொடுப்பதற்கு அரசாங்க வங்கிகள் பாதுகாப்புப் பெட்டகங்களை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறினார்.

தமிழர்கள் பெரும்பாலும் தமது பணத்தை தங்க ஆபரணங்களில் முதலீடு செய்வது வழக்கம் என்பதால்,  இடம்பெயர்ந்த மக்களின் பெறுமதிவாய்ந்த ஆபரணங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

வளையல்கள்,  தாலி போன்ற ஆபரணங்களையே கூடுதலாகப் பாதுகாப்புப் பெட்டகங்களில் மக்கள் வைத்துள்ளனர். தற்பொழுது வங்கிகள் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பாதுகாப்பு பெட்டகங்களை வழங்க ஆரம்பித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

அதேநேரம், அரசாங்க வங்கிகள் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தமது வங்கிக் கிளைகளையும் திறந்துள்ளதாகவும்  சார்ள்ஸ் கூறினார். இடம்பெயர்ந்த மக்கள் அரசாங்க வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களில் 165 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாக வடபகுதி மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான இணைப்பதிகாரி,  முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னான்டோ கூறியுள்ளார்.

பிரான்ஸில் பௌத்த வழிபாட்டிடத்தின் மீது தாக்குதல்

vesak.jpgபிரான்ஸ் நாட்டில் உள்ள பௌத்த மத வழிபாட்டு இடம் ஒன்றை தமிழில் பேசியவர்கள் சிலர் தாக்கி சேதம் விளைவித்ததாக முறையிடப்பட்டுள்ளது. பிரான்ஸில் உள்ள சர்வதேச பௌத்த மையம் என்ற வழிபாட்டிடமே நேற்று மாலை அங்கு வந்த சிலரால் தாக்கப்பட்டதாக அந்த வழிபாட்டிடத்தின் தலைமை மதகுரு தெரிவித்துள்ளார்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வழிபாட்டிடம் சோடனை செய்யப்பட்டிருந்தபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். இது பற்றி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மொத்தம் எட்டு இளைஞர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாகவும், வந்தவர்கள் தமிழில் பேசிக்கொண்டதாகவும், அவர்கள் கைகளில் தடிகள் கொண்டுவந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் ஆட்களே இதற்கு காரணம் என்று தான் சந்தேகிப்பதாகவும் அவர் கூறினார்

ரொறன்ரோ நகரில் தமிழர்கள் மாபெரும் பேரணி: போக்குவரத்து செயலிழப்பு எனத் தகவல்

canada1.jpgஇலங்கையின் வடக்கே தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கண்டித்தும் எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாகவும் கனடாவின் ரொறன்ரோ நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மேற்கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணிகளால் ரொறன்ரோ நகரின் போக்குவரத்து செயலிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் ரொறன்ரோவில் உள்ள ஸ்பாடினா அவெனியு கார்டினர் நெடுஞ்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். தமிழர்களின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கார்டினர் நெடுஞ்சாலை இரவு முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என பொலிஸார் 7:50 மணியளவில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வன்னியில் உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பில் கனடிய அரசாங்கம் உறுதியான ஒரு நடவடிக்கையை எடுக்கும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான கோர்மி தேவா தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ரொறன்ரோவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். இருந்த போதிலும், நகரின் முக்கிய பாதையான கார்டினர் நெடுஞ்சாலையின் போக்குவரத்து இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக செயலிழந்திருந்தது.