ஒவ்வொரு குழந்தையும் இன, மத பேதமின்றித் தம்மை இலங்கையர்கள் எனப் பெருமையுடன் கூறிக்கொள்வதற்கு அவர்கள் சமத்துவமும் சுதந்திரமும் உடையவர்களாக இருக்கும் வகையிலான தேசமாக மலர வேண்டுமென கொழும்புப் பேராயர் அதி.வண. டுலிப் வி சிக்கேரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவன;
சகல இலங்கை மக்களாகிய நாம் இன்று அழகானதும் நாம் நேசிப்பதுமான இந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பு முனையில் நிற்கின்றோம்.
இப்போது யுத்தம் முடிவடைந்துவிட்டதென சகல சமூகத்தினரும் சந்தேகமின்றி ஆறுதலடைந்திருப்பர். அநேக காலமாக அதிகளவிலான உயிர்களை இழந்துள்ளோம். யுத்தத்தில் அநேக வாலிபர்கள் கொலையுண்டும் காயமடைந்தும் உள்ளமை அவர்களின் மிகப்பரந்தளவிலான தைரியத்தையும் தியாகத்தையும் எடுத்தியம்புகிறது. அவர்கள் கண்ணியத்துடனும் மேன்மை நிறைவுடனும் நினைவு கூரப்பட வேண்டும்.
அதேவேளை, ஆயுதமேந்தாத குற்றமில்லா பொதுமக்களில் அநேகரும் கொலையுண்டும் காயமடைந்துமுள்ளனர். அவர்களும் கண்ணியத்துடனும் மேன்மை நிறைவுடனும் நினைவு கூரப்பட வேண்டும். இம்மரணங்களினால் கடுந்துயரடைந்துள்ள பல்லாயிரக்கணக்கான பெற்றோர்கள், வாழ்க்கைத் துணையினர், பிள்ளைகள், சகோதர சகோதரிகளையும் நாம் ஒரு போதும் மறந்து போகக் கூடாது.
எம்மால் உணர்ந்து கொள்ள முடியுமானால் கடந்த காலத்தை திரும்பிப் பார்த்து கடந்த காலத்தின் அநேக தவறுகளை அறிந்து கொள்வதற்கு இது உகந்த காலம், அமைதி நிறைந்த கூட்டு வாழ்வு, அரசியல் பேச்சுவார்த்தைக்கு இன்றியமையாத சமரச இணக்கத்தை உருவாக்கும் பலன், ஒவ்வொரு மனித உயிரின் மதிப்பு ஆகிய பாடங்கள் அவசியம். இவை எமது பிள்ளைகளுடன் கல்விச் சாலைகளில், வணக்கஸ்தலங்கள், கோவில்கள், பள்ளிவாசல்கள், ஆலயங்களில் ஆரம்பிக்க வேண்டும். இப்பாடங்களை வயது வந்தவர்களும் மீளகற்றுக் கொள்வதுடன் குறிப்பாக தலைவர்களும் புதிய தராதரங்களை தமக்கென்று வகுக்க வேண்டும். இவ்வழிமூலமாகவே நாம் முழு அளவுடன் பொருத்தமான விழுமியங்கள், மனப்பான்மைகளை உருவாக்கி அதற்கூடால் மக்களை யுத்தம், வன்முறை என்ற பாதையிலிருந்து விலக்கி வழிநடத்த முடியும்.
இறுதியாக நாம் இவற்றை அங்கீகரிப்போமேயானால் தசாப்தங்களாக அடைய முடியாமல் போன முழு நிறைவான, ஒன்றிப்பான, நீதியுள்ள இலங்கையை கட்டியெழுப்ப நாம் ஜெபத்துடன் உள்நோக்கத்துடன் கூட்டான வழிகளை எடுக்க முடியும். ஒவ்வொரு பெண், ஆண் குழந்தை அவர் எம்மதத்தை, எவ்வினத்தை சார்ந்தவராயிருந்தாலும் தங்களை இலங்கையர்கள் என்று பெருமையுடன் கூறிக்கொள்ள சமத்துவமும் சுதந்திரமுடையவராய் இருக்க ஒரு தேசமாக மலர வேண்டும். இது நிறைவே வேண்டுமெனில் சகல சமூகத்தினரின் துயரங்களை கவனத்திற்கெடுக்க வேண்டும்.சமூகத்தின் திகில்கள். சந்தேகங்களை அகற்ற வேண்டும். சட்டம், ஒழுங்கு, நல்ல ஆளுகையில் மக்கள் நம்பிக்கை வளர நடவடிக்கை எடுத்தல், எம்முடன் வாழும் ஏழைகள், புலம் பெயர்ந்தவர்கள்,உதவியற்றவர்கள், அலைக்கழிக்கப்பட்டவர்களின் தேவைகளை அறிந்து, தற்கால பொருளாதார அறை கூவல்களிற்கு பதில் தரும் வகையில் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.