ஊடகவிய லாளரும், சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளருமான போத்தல ஜெயந்த இனந்தெரியாதவர்களினால் நேற்று கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளை வானில் வந்த சிலரே இவரைக் கடத்திச்சென்று அவரது தலைமுடி, தாடியை வெட்டி கடுமையாகத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் கடும் காயங்களுக்கு இலக்கான இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவரச சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடமையை முடித்துக்கொண்டு நுகேகொடைக்குச் சென்றுகொண்டிருந்த போதே, வெள்ளை வானில் வந்த அறுவர் அவரைக் கடத்தி கண்களை கறுப்புத் துணியினால் கட்டியதுடன் அவரது தலை முடி, தாடியை வெட்டி கடுமையாகத் தாக்கியுள்ளனர். வெட்டப்பட்ட முடிகளை அவரது காற்சட்டைப் பைக்குள் திணித்து நீண்ட தூரத்திற்கு அப்பால் அவரை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மார்பு, தலை, கால்களில் காயங்களுக்கு இலக்கான இவர் சுயநினைவுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆறு பேர் கொண்ட குழுவினரே தன்னைக் கடத்திச் சென்று தாக்கியதாகவும், பின்னர் கோத்தட்டுவைப் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் அவர் வைத்தியசாலையின் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவரை அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதித்த வைத்தியர்கள், மேலதிக சிகிச்சைகளை அளித்து வருவதாகவும், அவருக்கு உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய அல்லது நினைவை இழக்கும் வகையிலான எவ்விதமான தாக்குதல்களுக்கும் அவர் இலக்காகவில்லை என்றும், கால்களில் பலத்த காயங்கள் இருப்பதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.