அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இராணுவ வெற்றியை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த தடை

lakshman_hulugalla_.jpgதேர்தல் பிரசாரங்களின்போது, இராணுவ வெற்றிகளைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சுவரொட்டிகள், பதாதைகள் அல்லது ஊடகங்களில் எந்தவொரு வேட்பாளரும் இராணுவத்தினரின் பிரதிமைகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.  தேர்தலில் போட்டியிடுகின்ற முன்னாள் இராணுவ அதிகாரிகள் தேர்தல் பிரசாரங்களில் இத்தகைய படங்களை பயன்படுத்த விரும்பினால் அதற்காக அவர்கள் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து எழுத்துமூலமான அனுமதியைப் பெற்றிருக்கவேண்டுமெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரத்தினபுரியில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

images.jpgஇரத்தின புரியின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக களுகங்கை உட்பட பல ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பாளர் கேணல் பிரியங்கர தெரிவித்தார்.

தற்போது 17 அடி 8 அங்குலத்தில் காணப்படும் களு கங்கை ஆற்றின் நீர் மட்டம் 19 அடிக்கு மேல் உயருமாயின் இரத்தினபுரி பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் அங்கு உதவிகளை வழங்குவதற்கு மாவட்ட செயலகம்,பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ குழு மற்றும் தொண்டு நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது 

முன்னாள் புலி உறுப்பினர்களுடன் நாமல் ராஜபக்ஷ சந்திப்பு

namal_rajapaksa_visit.jpg‘இளைஞர் களுக்கு நாளை’ அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ, வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்து புனர்வாழ்வளிக்கும் பயிற்சி நிலையத்தில் இருக்கும் சரணடைந்துள்ள புலி உறுப்பினர்களை நேரில் சந்திதது உரையாடினார். படையினரிடம் சரணடைந்த 663 புலி உறுப்பினர்கள் பூந்தோட்டம் நிவாரணக் கிராமத்தில் புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

புலிகள் அமைப்பில் தலைமைப் பதவி வகித்தவர்களும் இந்நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு விசேட புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் செயற்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புனர்வாழ்வளிக்கும் பயிற்சி நிலையத்தில் தங்கியிருக்கும் முன்னாள் புலி உறுப்பினர்களது பொழுதுபோக்கிற்காக ‘இளைஞர்களுக்கு நாளை’ அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளை அன்பளிப்பாக வழங்கினார்.

புலிகள் அமைப்பின் காவல்துறையில் பணியாற்றிய அ. அஜந்தன்,  பயங்கரவாதத்தால் நாட்டுக்கு நல்லது எதுவும் நடைபெறவில்லை. தமிழர்களின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. ஜனாதிபதிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க நாம் தயார். இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் ஆயுதத்தை கையில் எடுக்க மாட்டோம் என்றும் கூறினார்.

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காது தடுக்க வன்னியில் மீளக்குடியமர்வின் பின்னரும் மக்களுடன் படையினர் தங்கியிருப்பர்.

udaya_nanayakkara_brigediars.jpgவன்னியில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது பகுதிகளில் குடியேற்றப்பட்ட பின்னரும் அவர்களுடன் படையினர் தங்கியிருப்பர் என்று இராணுவப் பேச்சாளர்  பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் இரண்டு இராணுவத் தலைமையகங்கள் ஏற்படுத் தப்படுகின்றன. படையினரின் எண்ணிக்கையை 50 வீதத்தினால் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் பி.பி.ஸியிடம் இதுகுறித்து பி.பி.ஸி. வெளியிட்ட செய்தி வருமாறு:

மற்றுமொரு தீவிரவாத எழுச்சியை ஒடுக்குவதற்கும் அபிவிருத்தித் திட்டங்களில் உதவுவதற்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை 50 வீதத்தினால் அதிகரிக்க அரசுஎண்ணியுள்ளது எனப் பாதுகாப்பு அமைச்சுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்தவர்கள் இவ்வருட இறுதிக்குள் மீளக் குடியேற்றப்படுவார்கள் எனத் தெரிவிக்கும் அரசு, அதற்குப் பிறகும்  குறிப்பிட்ட காலம் வரை இராணுவம் அவர்களுடன் தங்கியிருக்கும் எனவும் கூறுகின்றது. வடக்கில் இரண்டு இராணுவத் தளங்கள் அமைக்கத் தாங்கள் எண்ணியுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார  தெரிவித்தார்.

“தற்போது முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் இரு இராணுவத் தலைமையகங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தத் தலைமையகங்களின் கீழ் முகாம்கள் அமைக்கப்படும். இதன் அர்த்தம் மக்கள் அங்கு மீளக் குடியேற முடியாது என்பது அல்ல. மக்கள் மீளக் குடியேறலாம்.  எனினும், அந்தப் பகுதியில் நடைபெறும் நடவடிக்கைகளை நாங்கள் கண்காணிக்க வேண்டும். எதிர்காலத்தில் அந்தப் பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்”என்றார்.

சிறுமி உட்பட 3 பெண்களின் சடலங்கள் நுவரெலியா பகுதி வீடொன்றிலிருந்து மீட்பு – 3 வயதுச் சிறுவனைக் காணவில்லை

நுவரெலியா, அம்பேவல பட்டிப்பொல பகுதியில் வீடொன்றிலிருந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் மூவரது சடலங்கள் நேற்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

சிறுமி ஒருவர் உட்பட 3 பெண்களது சடலங்களே மீட்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். பட்டிப்பொல ஜனப்பதிய என்ற கிராமத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது; சந்திரதிலக என்பவர் மகியங்கனை தெகியத்தகண்டியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி, பிள்ளைகள் ஜனப்பதிய கிராமத்தில் வசித்து வந்தனர்.

சந்திரதிலக ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வந்துள்ளார். எனினும் வீடு பூட்டியிருக்கவே அந்தக் கிராமத்தில் உள்ள மைத்துனரின் வீட்டிற்குச் சென்று தங்கிவிட்டு நேற்றுக் காலை அங்கு வந்தபோதும் வீட்டுக் கதவுகள் மூடப்பட்டிருந்தன. இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டுக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, மனைவியும் அவரது தாயும் மகளும் இறந்துகிடந்தனர். இது குறித்து அவர் உடனடியாகப் பொலிஸாருக்கு தெரிவிக்கவே பொலிஸார் அங்கு வந்து சேர்ந்தனர்.

இறந்துகிடந்த மூவரும் தலையில் பலமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அதேநேரம், வீட்டிலிருந்த 3 வயது மகன் காணாமல் போயுள்ளார். பிரேமவதி (80 வயது) அவரது மகளும் சந்திரதிலகவின் மனைவியுமான மல்லிகா (35 வயது) மற்றும் அவரது 10 வயது மகளுமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

படுகொலைக்கான காரணம் குறித்து நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், பிரேத பரிசோதனைக்காக 3 சடலங்களும் நானுஓயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டன. காணாமல் போன சிறுவனை பொலிஸார் தேடி வருவதுடன், கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

த.ம.வி.பு. கட்சி சார்பில் சர்வ கட்சி மகாநாட்டில் கலந்துகொள்வோரின் விபரம்

tmvp_logo.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் சர்வ கட்சி மகாநாட்டில் கலந்து கொள்ளும் புதிய பிரதிநிதிகளின் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரான யூடி தேவதாசன் ,மற்றும் அக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான மொகமட் மிஹிலார் மொகமட் ஹன்தஷிர் (ஆசாத் மௌலானா) ஆகியோர் சர்வ கட்சி மகாநாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஏற்கனவே சர்வ கட்சி குழுவில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் இடம் பெற்றிருந்தார்.அவர் அக் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்தே அவரது இடத்திற்கு யூடி தேவதாசன் நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முருகையன் “புத்திஜீவிக் கவிஞன்’ மறைவு தமிழ் இலக்கியத்திற்கு பேரிழப்பு – பேராசிரியர் சிவத்தம்பி

Kvingar Murugaiyan Photo - Thamayanthyகவிஞர் முருகையனின் மறைவு ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்லாது தமிழ் இலக்கியம் முழுவதற்குமே பேரிழப்பாகுமென பேராசிரியர் கா.சிவத்தம்பி தெரிவித்துள்ளார். முருகையனின் மறைவு குறித்து அவர் வெளியிட்ட அஞ்சலியில்;

கவிஞர் முருகையன் காலமாகிவிட்டார் என்ற செய்தி எனக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைலாசபதியுடன் யாழ்.இந்துக் கல்லூரியில் சக மாணவனாக இருந்த முருகையன் பின்னர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் போது சிவஞானசுந்தரம் ஆகியோரது நட்பு மூலமாக நன்கு பிணைப்புற்றிருந்தோம்.

கல்விப் பிரசுரத் திணைக்களத்தில் பதிப்பாளர் பதவி வெற்றிடமானதும் அவர் கொழும்புக்கு வந்து முதன் முதலில் எழுதிய கவிதை நாடகம், முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் இடம்பெற்ற, “குற்றம் குற்றமே’ எனும் கவிதை நாடகமாகும். கல்வி மொழித் திணைக்களத்தில் அவர் பதிப்பாசிரியராக செய்த பணிகள் பலப்பல. அக்காலத்தில் பலருக்கும் தெரியாதிருந்த இரகசியம், முருகையனும் நானும் மகாகவியுடன் கொண்டிருந்த உறவாகும்.

நாம் முருகையனை மாத்திரமே விதந்து பேசுகின்றோம். மகாகவியைப் பற்றி எதுவும் பேசுவதில்லையென்ற ஒரு குற்றச் சாட்டிருந்தது. ஆனால், அக்காலத்தில் நாங்கள் இடம்வகித்த இலங்கைத் தமிழ் நாடக நடனக் குழுவில் மகாகவியின் நூல்களுக்கே ஒரு தடவை முதல் பரிசு கிடைத்தது.

முருகையன் தனது மனதிற்குள் பல விடயங்களை வைத்துக் கொள்வார். அவற்றை எடுத்துக் கூறும் பண்பே அலாதியானது. முருகையனை intelectualist Poet என்றே நான் எல்லாக் காலத்திலும் போற்றுவதுண்டு. உண்மையில் முருகையனின் மறைவு ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு மாத்திரமல்லாமல் தமிழ் இலக்கியம் முழுவதற்குமே பாரிய இழப்பாகும்.

முருகையன் போன்றவர்களுடைய முழுக் கவிதைத் தொகுதியும் ஒன்றாகச் சேர்த்து பதிக்கப்பட வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை யார் செய்வார்களென்ற எதிர்பார்ப்புடன் நட்பு நினைவுகளிலிருந்து விடைபெற முடியாதவானாய் நிற்கின்றேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய தூதரக அதிகாரிகளை விடுவிக்குமாறு இரானிடம் பிரிட்டன் கோரிக்கை

இரானின் தலைநகரான தெஹ்ரானில் இருக்கும் பிரித்தானிய தூதரகத்தின் நான்கு ஊழியர்களை இரானிய அதிகாரிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண் கோரியுள்ளார். இரானின் நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் நியாயமற்றவை என்றும் கார்டன் பிரவுண் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த நால்வரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள இரானிய அரசின் பேச்சாளர், பிரிட்டிஷ் தூதரகத்தைச் சேர்ந்த ஐந்து ஊழியர்கள் விடுவிக்கப்பட்டு விட்டதாக முன்னதாக தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இரானியப் பிரஜைகள். நாட்டில் சர்ச்சைகுரிய அதிபர் தேர்தலை அடுத்து அங்கு ஏற்பட்ட கலவரங்களில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனிடையே நாட்டில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அதியுயர் சபையான கார்டியன் கவுன்சில், அங்கு பதிவான வாக்குகளில் ஒரு பகுதியை மீண்டும் எண்ணும் பணிகளை தொடங்கியுள்ளது. எதிர்கட்சித் தலைவரான மிர் ஹொசை முசவி தேர்தல்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோருகிறார்.

கனகரட்ணம் எம்.பியை பிரதமநீதிவான் பார்வையிட்டார்

tna_mp-kanagarathnm.jpgகொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தை நேற்று கொழும்பு, பிரதம நீதிவான் நிஸாந்தஹப்பு ஆராய்ச்சி சென்று பார்வையிட்டார்.

கனகரட்ணம் எம்.பியைத் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்யக் கோரும் குற்றத்தடுப்புப் பிரிவின் விண்ணப்பத்துக்கு நீதிவான் அனுமதியளித்தார் வன்னி மக்களுடன் இடம்பெயர்ந்து வவுனியா முகாமில் தங்கியிருந்த வேளை, கனகரட்ணம் எம்.பி. விசாரணைக்காகப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

கொக்காவிலில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள்

வடக்கில் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் நடைபெறும் அதேசமயம் அதற்கு சமாந்தரமாக கொக்காவில் பகுதியில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையத்தைப் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இதன் பொருட்டு 170 அடி உயரமுடைய புதிய ஒளிபரப்புக் கோபுரமொன்று அமைக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய கோபுரம் இருந்த இடத்திலேயே புதிய கோபுரமும் அமைக்கப்படவிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த போது பழைய கோபுரம் சேதப்படுத்தப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கண்ணிவெடி அகற்றல் மற்றும் நிர்மாணப் பணிகளுக்கு ஏற்புடைய வகையில் நிலத்தை மட்டமாக்குதல் போன்ற அடிப்படை முன்னேற்பாடுகள் அனைத்தும் இராணுவத்தின் விசேட படையணி3 இனால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வரை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு நிலையம் வடக்கு முழுவதும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.