அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

22ம் தேதி சுனாமி வரும் – எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி

tsunami111.jpgமுழு சூரிய கிரகண தினமான வருகிற 22ம் தேதி ஜப்பான் கடல் பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்படும். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சுனாமி தாக்கும் என்று ஒரு எஸ்.எம்.எஸ் தகவல் படு வேகமாக பரவி வருகிறது. இமெயில், எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பப்பட்டு வரும் இந்த தகவல், உலக நாடுகள் பலவற்றிற்கும் போய்க் கொண்டிருக்கிறது.

அந்த மெயிலில் உள்ள தகவல் இதுதான்…வரும் 22ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. 6 நிமிடம் 39 விநாடிகள் நீடிக்கும் இந்த கிரகணத்தின் போது, சூரியனின் ஈர்ப்பு சக்தி பூமியை வழக்கத்தை விட வேகமாக இழுக்கும். இதனால், பூமிக்கு ஆதாரமாக விளங்கும் பிளேட்டுகள் நகர்ந்து பயங்கர பூகம்பம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

ஜப்பானின் தெற்கு பகுதியில் பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் 22ம் தேதி இந்திய நேரப்படி மதியம் 11.30க்கு பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிக்கு மேல் பதிவாகும் இந்த பயங்கர பூகம்பத்தால் சுனாமி உருவாகும் அபாயம் இருக்கிறது.

அடுத்த 2 மணி நேரத்தில் ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவையும், 4 மணி நேரத்துக்கு பின் மதியம் 3.30 மணிக்கு இந்தியா, இலங்கை, மாலத்தீவு கடலோர பகுதிகளையும் பேரலைகள் தாக்கும். இந்த சுனாமியில் இருந்து தப்பிக்க கடலோர பகுதிக்கு செல்லாதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த எஸ்.எம்.எஸ்., இமெயில் தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வட மாகாண பொருளாதார அபிவிருத்திக்கு விசேட கடன் திட்டம்!

வடக்கின் பொருளாதாரத் துறைகளை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘வடக்கின் எழுச்சி ’ விசேட கடன் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்திவைத்தார். வடக்கில் விவசாயம், கால்நடை, கடற்றொழில் உள்ளிட்ட பொருளாதாரத் துறைகளைக் கட்டியெழுப்ப வசதியாக இப்புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தைத் துரிதமாக மேம்படுத்தவும் இது வழிவகுக்குமென மத்திய வங்கி தெரிவித்தது.

வட மாகாணத்தின் அபிவிருத்திக்காக வங்கிகளின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வங்கித்துறையினர் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடலொன்று நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

அலரி மாளிகையில் நேற்றுக்காலை இடம்பெற்ற இந்நிகழ்வின்போதே இலங்கை மத்திய வங்கியின்  ‘வடக்கின் எழுச்சி ’ கடன் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அறிமுகப்படுத்தி வைத்தார். இக்கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் தகுதியெனக் கருதும் சிறிய மற்றும் மத்திய தர வர்த்தக நடவடிக்கைகளுக்காக இலகு வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.

இதற்கென 3.000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் பல்வேறு வளங்கள் உள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்திற்குப் பயனளிப்பதற்காக அவற்றை மாற்ற வழிவகை செய்யப்படவுள்ளன.

இலங்கையின் வருடாந்த நெல் உற்பத்தியில் பத்துவீதம் வடக்கிலிருந்தே கிடைக்கின்றன. வெங்காயம்,  மிளகாய்,  பயறு,  நிலக் கடலை உட்பட பல்வேறு பயிர்ச் செய்கைகளிலும் வட மாகாணம் சிறந்து விளங்குகிறது.

நாட்டில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 20 வீதமானோர் வடக்கைச் சார்ந்தவர்கள். அங்கு 219 மீனவர் கிராமங்கள் உள்ளதுடன் 1.29.000 குடும்பங்கள் அங்கு வாழ்கின்றன. இவர்களுக்கு வங்கிக் கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிக்க முடியுமென மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

ஓய்வு பெற்றுச் செல்லும் பிரதான பாதுகாப்பு அதிகாரி ஜனாதிபதியூடன் சந்திப்பு!

donald_perera.jpgதமது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் பிரதான பாதுகாப்பு அதிகாரி எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடினார்.

அலரி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேராவின் சேவையை கௌரவிக்கும் முகமாக அவருக்கு ஜனாதிபதி நினைவுக் கேடயம் ஒன்றைப் பரிசளித்தார். 

மிஹின்-லங்கா இன்றுமுதல் திருச்சிக்கு புதிய சேவை

mihinlankaflight.jpgமிஹின்- லங்கா விமான நிறுவனம் கொழும்பிலிருந்து இந்தியாவின் திருச்சி நகருக்கான சேவையை இன்றுமுதல் ஆரம்பித்துள்ளது. வாரத்தில் நான்கு தடவைகள் திருச்சிக்கான போக்குவரத்தில் ஈடுபடவுள்ள மிஹின்-லங்கா விமான சேவையில் கத்தோலிக்க பக்தர்களின் வசதியைக் கருத்திற்கொண்டு புதிய சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விமான சேவைகள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று திருச்சிக்குச் செல்லும் விமானத்தில் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவுடன் கத்தோலிக்க மத குருக்கள் மற்றும் பக்தர்கள் பயணம் செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் தங்கியிருந்த 37 குடும்பங்கள் இன்று மீள்குடியேற்றம!

உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக மூதூர் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருந்த 37 குடும்பங்கைளச் சார்ந்தவர்கள் இன்று கிளிவெட்டியில் மீள் குடியேற்றப்பட்டனர். சத்துருக்கொன்டான் – இலக்கம் 02 முகாமில் கடந்த 3 வருடங்களாக தங்கியிருந்தவர்களில் நான்காவது தொகுதியினராக  37 குடும்பங்கைளச் சேர்ந்த 122 பேர் 7 பஸ் வண்டிகளில் வெருகல் ஊடாக கிளிவெட்டிக்கு அதிகாரிகளினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சுயவிருப்பத்துடனேயே இக்குடும்பங்கள் கிளிவெட்டி இடைத்தரிப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள குடும்பங்களில் 745 குடும்பங்களைச் சேர்ந்த 2565 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 முகாம்களிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.

அதிகாரிகளின் தகவல்களின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் இது வரை பலாச்சோலை, மாவடிவேம்பு, கிரிமுட்டி ஆரையம்பதி ஆதிவைரவர் கோவிலடி முகாம் மற்றும் சத்துருக்கொன்டான் இலக்கம் -02 ஆகிய முகாம்கள் மூடப்பட்டு 4 கட்டங்களில் கடந்த யூன் 16 ஆம் திகதி முதல் 155 குடும்பங்களைச் சேர்ந்த 608 பேர் இது வரை அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி இன்று எகிப்து பயணம்

mahinda-rajapa.jpgஅணிசேரா நாடுகளின் 15ஆவது உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று எகிப்துக்குச் செல்லவுள்ளார். இந்த உச்சிமாநாடு எகிப்தின் ஷாம் அல்-ஷேக் நகரில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்மாநாட்டின் நாளைய முதல் நாள் அமர்வில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக எகிப்து செல்லவுள்ள ஜனாதிபதி தலைமையிலான இலங்கைக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அபிவிருத்திக்கான சமாதானமும் சர்வதேச ஒருமைப்பாடும் எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில் உலகம் எதிர்நோக்கும் சவால்கள், பாதுகாப்பு, ஆயுதக் களைவு, சூழல் மாற்றம், மற்றும் மனித உரிமைகள் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் அணிசேரா நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதோடு, இலங்கையின் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் நாட்டின் சமகால நிலைவரங்கள் என்பன தொடர்பாக இச்சந்திப்புக்களின்போது அவர்களுக்கு விளக்கிக் கூறவுள்ளார் என்றும் வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அணிசேரா நாடுகள் அமைப்பில் 118 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நமக்காக நாம் நிதியத்துக்கு அமெரிக்காவிலுள்ள இலங்கையர்கள் 5050 டொலர்; அன்பளிப்பு

பாதுகாப்புப் படைவீரர்களின் நலன்புரி விடயங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நமக்காக நாம்  நிதியத்துக்கு அமெரிக்காவிலுள்ள சமாதானத்துக்கான இலங்கையர்கள் எனும் அமைப்பு 5050 அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நிவ் இங்லேன்ட் எனும் பகுதியில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட இந்த நிதி நேற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. சமாதானத்துக்கான இலங்கையர்கள் அமைப்பின் பிரதிநிதிகளான ரோஹன பெர்ணான்டோ மற்றும் சுஜீவ டி சில்வா ஆகியோர் இந்த நிதியை பாதுகாப்புச் செயலாளரிடம் கையளித்ததாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இடம்பெயர்ந்தவர்களில் 60 வீதத்தினரை ஜனாதிபதி தேர்தலுக்கு முன் விடுவிப்பு – அமெரிக்க சஞ்சிகைக்கு ஜனாதிபதி தெரிவிப்பு

mahinda_raajapakse11.jpgயுத்த சுழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள மூன்று இலட்சம் பேரில் குறைந்த பட்சம் 60 வீதமானவர்களை அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்தார். அமெரிக்காவின் ரைம் சஞ்சிகைக்கு அளித்த பேட்டி ஒன்றின்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிந்ததும் இறைவனுக்கும் மும்மணிகளுக்கும் நன்றி தெரிவித்தேன். அது ஒரு வரம். பிரபாகரன் சுடப்பட்டார் என்பது மட்டும் தெரியும் ஆனால் எப்படி சுடப்பட்டார் என்பதில் ஆர்வம் காட்டவில்லை.

பிரபாகரன் தற்போது இல்லை என்பதே முக்கியமானது. அவரை இங்கு அழைத்துவந்து கதைக்க விரும்பினேன். நான் ஒரு போதும் அவரைப் பார்த்ததில்லை. சந்தித்திருந்தல் ஏன் இந்தப் பைத்தியக்காரத்தனம் எனக் கேட்டிருப்பேன். இதைத்தவிர வேறு எதைக் கேட்க முடியும்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் குறுகிய மனப்பான்மை கொண்ட நாடுகள் எனக் கருதவில்லை. பயங்கரவாதத்தை அழிப்பதற்கு எமக்கு உற்சாகமளித்தவர்கள். ஜோர்ஜ் டப்ளியு புஷ்ஷை நாம் பின்பற்றினோம். அவர் விரும்பியதை நாம் நிறைவேற்றினோம். பயங்கரவாதத்தை அழித்த எங்களை அவர்கள் பாராட்ட வேண்டும்

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் விபத்துக்குள்ளானார்.

jegath-dias.jpgமேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நேற்றிரவு பொலிஸ் பார்க்குக்கு அருகே விபத்துக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஜகத் டயஸின் காலில் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

மூன்று வருடங்களாக மூடிக்கிடந்த தேக்கவத்தை வீதிகள் திறப்பு

மூன்று வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு காரணங்களுக்காக மூடிக்கிடந்த தேக்கவத்தை கிராமத்தின் குறுக்கு வீதிகள் பொலிஸாரினால் திறக்கப்பட்டுள்ளன. வவுனியா தச்சங்குளம் பகுதியில் அமைந்துள்ள வன்னிப்பிராந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமையக இராணுவ முகாமுக்கு எதிரில் கண்டி வீதியில் இருந்து குறுக்கு வீதிகளாக அமைந்திருந்த பல ஒழுங்கைகளின் நடுவில் பாரிய குழிகள் அமைத்தும், மண் அரண் அமைத்தும் இந்த வீதிகள் தடைசெய்யப்பட்டிருந்தன.

இதனால் இவற்றின் ஊடாக வாகனப் போக்குவரத்துக்கள் செய்ய முடியாதவாறு தடையேற்படுத்தப்பட்டிருந்தது. சைக்கிள்களில் செல்வதுகூட கடினமான முறையில் இங்கு பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பொலிசாரின் பிரதான (பரக்ஸ்) தங்குமிட விடுதிக்கு எதிரில் பிரதான வீதியில் நடத்தப்பட்ட ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து, இந்த வீதிகள் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, இந்தக் கிராமத்து மக்களும் பிரமுகர்களும் விடுத்த வேண்டுகோளை ஏற்று பொலிஸார் அந்தப் பகுதி பொதுமக்களின் உதவியோடு இந்த வீதிகளின் தடைகள் அகற்றப்பட்டுள்ளன.